04/04/2026
அடிமை பழனிசாமியின் ஆணவத்தைக் கண்டிக்கிறோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் குறித்தும், கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் குறித்தும் தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறுகளை அள்ளிவிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
‘ஓர் எதிர்க்கட்சித்தலைவராக என் முதலமைச்சர் பணிகளை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமையுண்டு. ஆனால் தலைவர் கலைஞருக்கும் எனக்குமான உறவு குறித்து விமர்சிக்க உங்களுக்கு உரிமையில்லை’ என்று கழகத் தலைவர் அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தமிழ்நாட்டு மக்களும் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவரை யார் வேண்டுமானாலும் தங்குதடையின்றிச் சந்திக்க முடியும். இலக்கியம், அரசியல், வரலாறு, தத்துவம் என்று நாள்தோறும் பல அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். கலைஞர் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட காலங்களில்கூடக் கழக உடன்பிறப்புகள் அவரைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தமிழ்நாட்டின் கடைசி மனிதர் வரை பிணைப்புக் கொண்ட மகத்தான தலைவர் கலைஞர். அதனால்தான் அவர் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ‘எழுந்து வா தலைவா’ என்று உடன்பிறப்புகள் அவருக்கு உணர்ச்சிப்பெருக்குடன் கட்டளையிட்டார்கள்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தலைவி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரை அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்று யாரும் எளிதில் சந்தித்துவிட முடியாது என்பது தமிழ்நாடே அறிந்த உண்மை. அதிலும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட 75 நாட்களும் அவரைச் சந்திக்கப் பெரும்பாலானோருக்கு அனுமதியில்லை. இப்படி ஒரு பின்னணியைக் கொண்ட கட்சியின் பொதுச்செயலாளராக இருந்துகொண்டு, தி.மு.கவைப் பற்றி விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதியுண்டா?
முத்தமிழறிஞர் கலைஞருக்கும் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் போராட்டங்களில் களம் கண்ட, சிறைச்சாலை அடக்குமுறைகளைச் சந்தித்த தியாக வரலாறு உண்டு. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்குத் தியாக வரலாறு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என்று அனைவருக்கும் துரோகம் இழைத்த துரோக வரலாறுதானே உண்டு!
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இளைஞர் அணிச் செயலாளராக, மேயராக, அமைச்சராக, துணை முதலமைச்சராகத் தமிழ்நாடே அறிந்த தலைவர். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை எடப்பாடி பழனிசாமி யார் என்றே தமிழ்நாட்டின் பெரும்பகுதி மக்களுக்குத் தெரியாது. முத்தமிழறிஞர் கலைஞரும் மு.க.ஸ்டாலின் அவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தரையில் ஊர்ந்துபோய்ச் சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்றவர்.
தன் கட்சியை மோடியிடமும் அமித்ஷாவிடமும் அடகுவைத்துவிட்டு, பத்து தோல்விகளைச் சந்தித்துவிட்டு, 11-வது படுதோல்விக்குக் காத்திருக்கும் பழனிசாமி, தி.மு.க என்னும் மகத்தான பேரியக்கம் பற்றியும் முத்தமிழறிஞர் கலைஞர் என்னும் மாபெரும் தலைவர் மற்றும் வெற்றி நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் குறித்தும் அவதூறுகளைப் பரப்பும் ஆணவப்போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வன்மையாகக் கண்டிக்கிறோம்.