21/03/2022
உயிர் மீட்கும் சொற்களைக் கண்டெடுப்பதே இன்றைய நவீன கவியின் பிரதான வேலையாகும்
கலை, இலக்கியங்கள் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான ஆயுதங்களாகவே பயன்படவேண்டும் என்பதை நான் எப்போதுமே வலியுறுத்த விரும்புகிறேன்.
ஒடுக்குமுறைகளும், நெருக்கடிகளும் போராட்டங்களும் மட்டுமே மனித வரலாறாக தொடர்கிற போது இவற்றை கலையாக்கம் செய்வதுவும், அறிவார்ந்த தளத்தில் சிந்திப்பதுவும், செயற்படுவதும், போராடுவதையும் தவிர்த்து வேறு எதனாலும் மானிட மீட்சி சாத்தியமில்லை.
கடந்த 40 ஆண்டுகாலமாக தனது பல்துறை சார்ந்த எழுத்துக்களையும் மானிட விடுதலைக்கான உபாயமாகவே செயற்படுத்தி வருபவர் எழுத்தாளரும், கவிஞருமான சி. சிவசேகரம் அவர்கள்.
சிவசேகரத்தின் 40 ஆண்டுகால கவிதைகளும் இப்போது மொத்தத் திரட்டாக, அரிய ஆவணமாக நமக்குக் கிடைத்திருக்கிறது என்பது அசாதரணமானது.
இத்தொகுப்பைத் தனது அயராத உழைப்பின் மூலம் நண்பர் பௌசர் அவர்கள் லண்டன் சமூக இயல் பதிப்பகம் மூலம் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.
நண்பர் பௌசர் அவர்களதும் நூல் வெளியீட்டுக்குத் துணை செய்த ஏனையவர்களினதும் அரிய பணிக்குத் தோழமையோடு சிரம் தாழ்த்துகிறேன்.
✊🏿 இலங்கையின் அரசியல்,சமூக, இன, பால் நெருக்கடிகள் குறித்து அவதானம் செலுத்துகின்ற, அக்கறைப்படுகின்ற ஆட்கள் மட்டுமன்றி கவிதையில் ஆர்வம் உள்ள இளநிலை வாசகர்கள் முதற்கொண்டு அனைவரும் ‘சிவசேகரம் கவிதைகள்’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ள இந்நூலில் உள்ள கவிதைகளை வாசிப்பது பெரிதும் பயன் தரும் என்பதையும் அறிவுறுத்த விரும்புகிறேன்.