15/06/2025
#கரைச்சிப்பிரதேச_சபையின் 13.06.2025 அன்று நடைபெற்ற முதலாவது கன்னி அமர்வின் போது #கௌரவ சந்திரகுமாரன் ஸ்டீவென்சன் அவர்கள்..
அவைக்கு தலைமை தாங்கும் கௌரவ தவிசாளர் அவர்களே
சபையின் கௌரவ உறுப்பினர்களே
மதிப்புக்குரிய சபையின் செயலாளர் அவர்களே
அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்
கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் சுயேச்சை குழுவாக வண்டில் சின்னத்தில் நாம் களமிறங்கியபோது,
எம்மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்து,
இச்சபையில் எமது சுயேச்சை குழு இரண்டு உறுப்பினர்கள் அங்கம் பெற காரணமான மக்களுக்கு,
நான் எனது நன்றியை இத்தருணத்தில் மிகவும் நன்றிப்பெருக்குடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இன்னமும் ஆறாத போர்ச் சிதிலங்களோடும், தியாகங்களின் நினைவுகளோடும்,
போருக்கு பிறகும் பதினாறு ஆண்டுகளாய், நீறு பூத்த நெருப்பாய் பயணிக்கும் இந்த மண்ணில்,
அபிவிருத்திக்கான உள்ளராட்சி சபையிடம்,
இந்த மண்ணின் அடையாளங்களையும், நிலத்தையும்,
அதிகார வரம்பை பயன்படுத்தி காப்பாற்றும் கனதியான பொறுப்பும்,
நாமே நம்மை ஆளுதல் என்கிற எமது இனத்தின் நெடுங்கால தத்துவத்திற்கு அமைய,
இச்சபையை செவ்வனே வழிப்படுத்தும் சீரிய பணி என்னிடமும் நம் எல்லோரிடமும் உண்டு என்பதை உணர்ந்தவனாய் இருக்கிறேன்.
கரைச்சிப்பிரதேச சபையின் எல்லை,
பரந்தது என்பதால் அதற்கான பணிகளும் பரந்து விரிந்ததாய் இச்சபையிடம் எதிர்ப்பார்த்துக்கிடக்கின்றது.
இச்சபை போருக்குப்பின், இரண்டு தடவைகள் மக்கள் பிரதிநிதிகளின் கையில் இருந்திருக்கின்றது.
இருப்பினும் நிறைவுடைய கிராமங்களையும் நகரங்களையும் இன்னமும் எமது மக்கள் அடையவில்லை என்கிற குறை மக்களிடம் இன்னமும் மேலோங்கி நிற்கின்றது.
எனவே கூட்டுணர்வுடன் சிந்தித்து எமது நகரங்களை கிராமங்களை, தூரநோக்கான செழிப்பான அபிவிருத்தி நோக்கி, கொண்டு செல்லவேண்டிய கடமை இம் முறை தெரிவு செய்யப்பட்டுள்ள அனைவரிடம் உண்டு.
மழை வெள்ளம் வரும்போது, தீ விபத்துக்கள் ஏற்படும் போது,
பொதுக்கழிப்பறைகள் துர்நாற்றம் வீசும்போது,
தெருக்கள் குப்பைகளால் நிறைகின்றபோது,
மக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மீது காறி உமிழவும், சினங்கொள்ளவும் ஆரம்பிப்பார்கள்.
இவை இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல எந்த பிரதேசத்திலும் யதார்த்தம்.
ஆதலால் நாம் இப்போதிருந்தே விழித்துக்கொள்ளவேண்டும்.
எமது கிராமங்களை, நகரத்தை சிறந்த அழகான முன்னுதாரணமாக்க நாம் பூரண ஒத்துழைப்பை இச்சபைக்கு வழங்குவோம்.
ஆனால் கடந்த காலத்தில் செய்யப்பட்டவை சில கூவைகள் குடிகொள்ளும் இடமாகவும், காடு பற்றியும் இருப்பதை காண்கின்றோம்.
மக்களின் வரிப்பணம் எதிர்காலத்தில் பொருத்தமற்றது என்கிற பெயரில்,
இடித்து அழிக்கப்படும் கட்டிடங்களாக அமையுமாயின்
நாம் ஒத்துழைக்கப்போவதில்லை.
ஒரு காலத்தில் கிளிநொச்சி நகரத்தில்,
கட்டியெழுப்பட்ட பட்டிண சபை கட்டிடம் நகரத்தை கடப்போர் திருப்பிப்பார்க்க வைக்கும்.
அது கம்பீரமானதாகவும் மிடுக்கானதாகவும் இருந்துள்ளது.
அக்காலத்தில் அதைப் போன்றதொரு கட்டிடத்தை கண்டி நெடுஞ்சாலையில் அரிதாகவே காண முடிந்துள்ளது,
பின்னாளில் அக்கட்டிடம் பட்டிணசபை அல்லாத பல துறைக்கும் பயனுடையதாய் இருந்துள்ளது.
இந்த நகரத்தில் எது எங்கிருக்க வேண்டுமோ அது அங்கிருக்கவேண்டும்.
இன்று அவ்வாறுதான் இருக்கின்றதா என்பதை எல்லோரும் கேள்விகளாய் கேட்டுப்பார்க்கவேண்டும்.
எனது நண்பர் என்றும், எனது கட்சிகாரர் என்றும், பார்த்து தனி நபர்களின் சுயநலனில் அடிப்படையில் ஒரு சட்டவிரோத முயற்சிக்கு, அனுமதி வழங்கி ஒத்தாசை வழங்கினால்,
அது இந்த மொத்த சமுதாயத்தை பாதிக்கும் ஒன்றாக மாறும்.
ஏனென்றால் பல விடயங்கள் பிரதேச சபையின் அனுமதியை பொறுத்துத்தான் அமையும்.
ஆகவே அனுமதி என்பது சட்ட ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமல்ல, சமுதாய பாரம்பரியம் எதிர்கால தலைமுறை என்ற பலவாறான சிந்தனையின் அடிப்படையில் தீர்க்கவேண்டியது.
ஏன் எனது கன்னியுரையிலே இதை குறிப்பிடுகின்றேன் என்றால்.
கிராமங்களின், நகரங்களின் நல்லாட்சி,
உள்ளுர் ஆட்சியாளர்கள் கையிலேயே தங்கியிருக்கின்றது.
இச்சபையின் அதிகாரங்கள், எதற்கு எப்போது எதற்காக யாருக்காக பிரயோக்கப்படுகின்றது என்பது,
இச்சபை உறுப்பினர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் தெரிந்திருக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன்.
பிரதேச சபை தீர்மானங்கள் பிரதேச சபை உறுப்பினர்களுடன் ஆலோசித்து எடுக்கப்படவேண்டும்.
கட்சி அலுவலகங்களின் தீர்மானங்களும் முடிவுகளும் பிரதேச சபையின் தீர்மானமாக மாறக்கூடாது என்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.
இறுதியாக,
எமது சபையின் முன்னுரிமை.
இம்மண்ணுக்காக அர்ப்பணித்தவர்கள், அங்கங்களை இழந்தவர்கள், முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், என்பவற்றிற்கு வழங்கப்படவேண்டும்.
இச்சபை நினைத்தால் போரினால் பாதிக்கப்பட்டவர்களை சிறந்த தொழில் முனைவோராக மாற்றலாம்.
வறுமையை போக்கலாம், ஏற்றத்தாழ்வற்ற சமுகத்தை உருவாக்கலாம்.
அது முன்னுரிமைகளில் தான் உள்ளது.
அது சட்ட திட்டதிற்கு உட்பட்டதாய் நடைமுறைக்கு வரவேண்டுமென ஆசைப்படுகின்றேன்.