24/11/2017
7096. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் (ஒரு முறை கலீஃபா) உமர்(ரலி) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தபோது அவர்கள், 'உங்களில் யார் இனி தலை தூக்கவிருக்கும் (ஃபித்னா) குழப்பத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்?' என்று கேட்டார்கள். நான், 'ஒரு மனிதன் தன் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பதன் மூலமும்), தன்னுடைய செல்வம் விஷயத்தில் (அது இறைவனைப் பணிந்து வாழும் வாழ்க்கையிலிருந்து திசைதிருப்புதன் மூலமும்,) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (-சோதனையில்) ஆழ்த்தப்படும்போது தொழுகை, தர்மம், நன்மை புரியும்படி கட்டளையிட்டு, தீமையிலிருந்து தடுத்தல் ஆகியன அதற்கான பரிகாரமாக அமையும்' என்று (நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் எனக்) கூறினேன். உமர்(ரலி) அவர்கள், 'நான் (சோதனை எனும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதைப் பற்றிக் கேட்கவில்லை. கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (நபியவர்களால் முன்னறிவிக்கப்பட்ட குழப்பம் எனும் பொருள் கொண்ட ஃபித்னா)வைப் பற்றியே கேட்கிறேன்' என்றார்கள். நான், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. (உங்கள் ஆட்சியில் அவற்றில் ஏதும் தலைதூக்கப் போவதில்லை.) உங்களுக்கும் அதற்குமிடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது' என்று கூறினேன். உமர்(ரலி) அவர்கள், 'அந்தக் கதவு உடைக்கப்படுமா? அல்லது திறக்கப்படுமா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை; அது உடைக்கப்படும்' என்று பதிலளித்தேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அப்படியானால் அது ஒருபோதும் மூடவேபடாது' என்றார்கள். நான், 'ஆம் (சரிதான்)' என்று சொன்னேன்.
(அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களிடம், 'உமர்(ரலி) அவர்கள் அந்தக் கதவு எதுவென்று அறிந்திருந்தார்களா?' என்று கேட்டோம். ஹுதைஃபா(ரலி) அவர்கள், 'ஆம். பகலுக்கு முன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று உமர்(ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்திருந்தேன்' என்று பதிலளித்தார்கள். அந்தக் கதவு எதுவென்று ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே, அவர்களிடம் மஸ்ரூக் இப்னு அஜ்தஃ(ரஹ்) அவர்களைக் கேட்கச் சொன்னோம். அவர் அந்தக் கதவு எது என்று கேட்டதற்கு ஹுதைஃபா(ரலி) அவர்கள், 'உமர்(ரலி) அவர்கள்தாம் அந்தக் கதவு' என்று பதிலளித்தார்கள்.33
ஸஹீஹ் புகாரி