05/12/2025
விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி தரலாம்” - முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ கருத்து!
முதல்வரிடம் மனு தந்த பி.ஆர்.சிவா கடந்த 2016-ல் என்.ஆர்,காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்தார். கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு தராததால் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று எம்எல்ஏவானார். தற்போது தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பி.ஆர். சிவா கூறுகையில், “விஜய் ரோடு ஷோவால் பாதிப்பு இருக்காது. ரோடு ஷோ நடத்த அனைத்து கட்சிகளும் அனுமதி கேட்கிறார்கள். அனுமதி கொடுப்பதால் பாதிப்பு என்னவென்று தெரியவில்லை.
பயத்தால் அனுமதி தராமல் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தவறுகள் நடந்ததைக் காரணமாக வைத்து அனுமதி மறுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.
பொதுக்கூட்டம் போட்டால்தான் பாதிப்பு வரும். ரோடு ஷோ என்பதால் வாகனம் நகர்ந்து செல்வதால் பாதிப்பு இருக்காது. அனுமதி கொடுப்பதில் தவறில்லை.” என்றார்.
தவெகவில் இணையப்போவதாக தகவல் வந்ததே அதற்காக சொல்கிறீர்களா என்று கேட்டதற்கு, “நான் ரங்கசாமி ஆதரவாளர். வரும் தேர்தலில் அவர் எடுக்கும் முடிவை பொருத்துதான் என் முடிவை எடுப்பேன்.
அதுவரை எந்த முடிவும் எடுக்கமாட்டேன். ரோடு ஷோ நடத்த புதுச்சேரியில் அனுமதி தரலாம். கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. புதுச்சேரியில் பாதுகாப்பு இருக்கிறது. பயத்தால்தான் அனுமதி தரவில்லை என நினைக்கிறார்கள். பாஜகவால்தான் ரோடு ஷோ அனுமதி மறுக்கிறார்கள் என்ற கருத்தும் இருக்கிறது. ரோடு ஷோ நடத்த அனுமதி கொடுக்கலாம். தவறில்லை. " என்றார்.