வியக்கத்தக்க வேலூர் - Incredible Vellore

  • Home
  • India
  • Vellore
  • வியக்கத்தக்க வேலூர் - Incredible Vellore

வியக்கத்தக்க வேலூர் - Incredible Vellore About our known and unknown History

 #முதலாம் இராச நாராயண சம்புவராயர் எடுப்பித்த முதற்கோயில் அருள்மிகு ஏகாம்பரநாதன் திருக்கோயில், (பொ.ஆ.பி 1340) குட்டியம் க...
26/03/2026

#முதலாம் இராச நாராயண சம்புவராயர் எடுப்பித்த முதற்கோயில் அருள்மிகு ஏகாம்பரநாதன் திருக்கோயில், (பொ.ஆ.பி 1340) குட்டியம் கிராமம், வாலாசாபேட்டை, இராணிப்பேட்டை, வேலூர்:

குட்டியம் என்ற அழகிய கிராமத்தில் வயல்களிடையே புதியதாக கட்டியமைக்கப்பட்ட ஏகாம்பரநாதன் என்ற சிவாலயம்,சுமார் 15 வருடம் முன்பு வரை இடிந்துபோய் தரைமட்டமாகி இருந்தது. கோயிலின் அதிட்டான பகுதி மட்டுமே காணப்பட்டது.தற்போது ஆலயத்தை சிறந்த முறையில் சீரமைத்து அதே அதிட்டானத்தின் மீது கல்வெட்டுகள் சேதமாகாமல் சிறப்பாக கட்டமைத்துள்ளனர்.

பிரதான கருவறையில் ஏகாம்பரநாதன் என்ற பெயரில் எழுந்தருளியுள்ள சிவலிங்கம் அழகுற காட்சியளிக்கிறார். புதியதாக அமைக்கப்பட்ட ஆலயத்தில் காமாட்சியம்மன்,முருகன் ஆலயம் என விரிவுபடுத்தி சுற்றிலும் மதில் சுவர்களுடன் பாதுகாப்பாக அமைந்துள்ளது.

முதலாம் இராஜ நாராயண சம்புவராயர் (பொ.ஆ.பி.1340) ஆட்சிக்காலத்தில் எடுப்பித்த முதல் ஆலயமாக ஆய்வாளர்களால் அறியப்படுகிறது.இது இவருடைய தந்தை வென்று மண்கொண்ட சம்புவராயர் நினைவாக கட்டப்பட்ட கோயிலாகும்.

இக்கோயிலின் கருவறை வடக்கு சுவர் அதிட்டானத்தின் முப்பட்டை குமுதம்,ஜகதிப் பகுதிகளில் முதலாம் இராசராச நாராயண சம்புவராயரின் கல்வெட்டொன்று.,

"தம்பிரானார் திரு வாசலில் நிலையுள்ள அகம்படி முதலிகளில் எழும்போதன் கெங்கையாடி மாதயன் வென்றுமண் கொண்ட சம்புவராயர் அஸ்தி கொண்டு போய் கெங்கையிலே விட்டு கெயயிலே ஸ்ராத்தம்
பண்ணி வருகையில் இவனுக்கு கங்க கமந வ்ருத்தி ஆகக் குடுத்த குட்டியமான இராச நாராயண நல்லூர்"

என்று இக்கல்வெட்டு முடிகின்றது.

இக்கல்வெட்டின் பொருள்,

இது வென்று மண் கொண்ட சம்புவராயரின் சாம்பலைக் கொண்டு போய் கங்கையிலே விட்டுக் கயையிலே சிரார்த்தம் (ஈமக்கடன்) செய்துவந்த இச்சம்புவராயரின் அதிகாரி எழும்போதன் கங்கையாடி மாதயன் என்பவருக்கு இவர் செய்த இந்த ஈமக்கிரியை பணிக்காகக் குட்டியம் ஊருக்கு இராசா நாராயணன் நல்லூர் என்று பெயரிட்டு கங்காகம நவிருத்தியாக
ஊர் முழுவதையும் இறையிலி தானமாக இராஜ நாராயண சம்புவராயர் வழங்கினார் என்ற செய்தியை கூறுகின்றது.

வென்றுமண் கொண்டா ரின் இரண்டாவது மகன் பொன்னின் தம்பிரான் இராஜநாராயணன் சம்புவராயரும் இக்கோயிலுக்கு பூசை அமுதுபடி ,திருப்பணி மற்றும் திருவிழாவுக்கென்று நாலு வேலி நன்செய் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். இதனை கோயில் கருவறை மேற்கு தெற்கு சுவர் அதிட்டானம் முப்பட்டை ஜகதிப் பகுதியில் கல்வெட்டாகவும் வடித்துள்ளனர்.

இக்கல்வெட்டு வரிகள் இந்த கோயில் எடுக்கப்பட்ட வரலாறை தெளிவாகக் கூறுகின்றது,இப்போது இவ்வாலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.

திசைக்காட்டி, அழைத்து சென்ற முகநூல் நண்பர் இராணிப்பேட்டை திரு.வெங்கடேஷ்க்கு நன்றி.

 #கண்டாரக் கூளிமாராய நாயக்கர் வெற்றி கோபுரம் (பொ.ஆ.பி. 1363),தடாகபுரீஸ்வரர் சிவாலயம்,மடம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை...
14/03/2026

#கண்டாரக் கூளிமாராய நாயக்கர் வெற்றி கோபுரம் (பொ.ஆ.பி. 1363),தடாகபுரீஸ்வரர் சிவாலயம்,மடம்,
வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்:

தடாகபுரீஸ்வரர் ஆலயத்தின் இரண்டாம் திருச்சுற்று அருகே அமைந்துள்ள திருமண மண்டபம் நேர் எதிரே உள்ளது கண்டாரக் கூளி மாராய நாயக்கன் திருக்கோபுரம்.இடிந்த நிலையில் இருந்த கோபுரத்தை தொல்லியல் துறை செப்பனிட்டு சீர்படுத்தியுள்ளது. இக்கோபுரச் சுவரின் இடது பகுதியில் தமிழில் உள்ளது இக்கல்வெட்டு அதில்,

1.ஸ்ரீமத் மஹாமண்டலீஸ்வர ஹரிராய விபாட பாஷைக்கு தப்புவராயர் கண்ட மூவராயர் கண்

2. ட பூர்வபச்சிம சமுத்திரா திபன் ஸ்ரீ வீரபொக்கண உடையார் குமாரர் ஸ்ரீமக கம்பண உடையர் மஹாப்ர

3.தாநி ஸோமய தண்ணா யக்கர் குமாரன் ஸ்ரீ கண்டர கூளிமாரய நாயக்கர் வென்று மண் கொண்ட சம்புவராய

4.ரையும் ஜெயுத்து கைப்பிடியாகப் பிடித்து இராச கம்பீரன் மலையும் கொண்டதுக்கு சந்திராதித்தவரையும்

5.செல்ல குடுத்த அண்ணமங்கலப் பற்றில் சகாற்த்தம் ஆயிரத்து இரு நூற்று யெண்பத்தைஞ்சிந் மேல் செல்லா

6.க்ருது ஸம்வத்ஸரத்து குளத்தூர் ஆளுடையார் திருவக்நீஸ்வரமுடைய மஹாதேவர்க்கு இரண்டாம்

7.ப்ரகாரத்தில் பண்ணின தர்மம் கண்டர
கூளிமாரய நாயக்கன் திருக்கோபுரம்.

சோமய்ய தண்ணாயக்கர் மகனான கண்டாரக் கூளி மாராய நாயக்கர், சம்புவராயரை வென்று சிறை பிடித்தும், ராஜகம்பீரன் மலையையும் கைப்பற்றியதின் வெற்றிச் சின்னமாக கட்டிய கோபுரம் இது என்பதை(பொ.ஆ.பி.1363) வீர கம்பண்ண உடையர் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இவ்வெற்றிகளை தொடர்ந்து வீர கம்பணனின் வெற்றி தென்னகத்திலும் விஜயநகரப் பேரரசு உருவாகும் ஒரு புதிய திருப்பத்தின் முன்னறிவிப்பாக அமைந்தது.

கங்காதேவியின் மதுரா விஜயத்தின்படி தொண்டை மண்டலத்தின் மீது வீர கம்பண்ண உடையார் படையெடுத்துப் போரில் அதனை ஆண்டு வந்த சம்புவராயரை வீரமரணம் அடைய செய்தார் என்பதை நான்காம் காண்டத்தில் 1 முதல் 83 ச்லோகங்களாக விபரமாக குறிப்புகள் உள்ளன.

இப்படி வெற்றியின் நினவாக ஜயஸ்தம்பம் நாட்டிய பல்லவர்கள், மற்றும் கங்கை வெற்றிக்குக் கங்கை கொண்ட சோழபுரத்தை எடுப்பித்த இராஜந்திரசோழர் வரிசையில் வீர கம்பண்ண உடையாருக்கும் இக்கோபுரமும் ஓர் வெற்றி நினைவுச் சின்னமாகும்.

 #பன்றி குத்தி பட்டான் வீரகல்,பொம்மிடி: ஆரம்ப கால மனிதன் விலங்குகளை உணவிற்காக வேட்டையாடினான்,புலி போன்ற காட்டு விலங்குகள...
17/02/2026

#பன்றி குத்தி பட்டான் வீரகல்,பொம்மிடி:

ஆரம்ப கால மனிதன் விலங்குகளை உணவிற்காக வேட்டையாடினான்,புலி போன்ற காட்டு விலங்குகள் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் நேரடியாக துன்பத்தை விளைவிக்கக்கூடியவை. காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் பயிர்களை அழிப்பதன் மூலமாக மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துகின்றன. மனிதர்களின் வாழ்வியலுக்கு இடையூறு ஏற்படுத்தும் புலி, பன்றி போன்ற விலங்குகளை கொன்று ஊர்மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த வீரர்கள் மக்களால் மதிக்கப்பட்டு அக்காலத்தில் வீரகற்கள் எழுப்பிச் சிறப்பிக்க பட்டுள்ளனர்.

பொம்மிடி ஊரின் உள்ளே அமைந்துள்ள பன்றி குத்தி பட்டான் நடுகல் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் உள்ள பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ளது,அதில் நடுநாயகமாக 3 அடி உயர வீரர் தனது இரு கரங்களால் நீண்ட ஈட்டியை தனது இடதுபுறம் பாய்ந்து வரும் காட்டுப்பன்றி உடலில் சொருகி கொன்றது போலவும்,பன்றியின் வால் பகுதியில் அவரது வளர்ப்பு நாய் ஒன்று கவ்வி பிடித்துள்ளது. வலது புறத்தில் பன்றி வேட்டையின் போது மாண்ட வீரரின் மனைவி சதி சடங்கில் இறந்ததை குறிப்பிடும் மனைவியின் உருவமும் காட்டப்பட்டுள்ளது. சிற்பங்கள் மேற்பகுதியில் செதுக்கிய வளைவுகள் நடுகல்லுக்கு மேலும்
அழகூட்டுகின்றது.

பன்றியைக் கொன்று பயிர்களை காத்த இவ்வீரர் நடுகல், பொம்மிடி என்ற ஊரின் உள்ளே அமைந்துள்ள மரகத பூஞ்சோலை என்று பெயரிடப்பட்ட பூங்கா உள்ளே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

 # மீண்டசொர்க்கம்,சிறுமூர் மதுரா SU வனம் (சீனிவாச யுத்தியா வனம்) ஊராட்சி,ஜாகிர் மாளிகை,ஆரணி:புதிய பொலிவுடன்மாற்றம் பெறும...
14/02/2026

# மீண்டசொர்க்கம்,
சிறுமூர் மதுரா SU வனம் (சீனிவாச யுத்தியா வனம்) ஊராட்சி,ஜாகிர் மாளிகை,ஆரணி:

புதிய பொலிவுடன்
மாற்றம் பெறும் ஜாகிர் கண்ணாடி மாளிகை
காணோலி,
நன்றி:
திரு.வடிவேலன்,சிறுமூர் மதுரா.ஆரணி

https://youtu.be/DVz-d-hV-NY?si=AiGIzVdIsuGEEqDi

7 ஆண்டுகளுக்கு முந்தைய அன்றைய மீள் உருவாக்க முயற்ச்சித்த முன்னெடுப்பு பதிவு.
நன்றி: திரு. பாலமுருகன், திருவண்ணாமலை.

https://m.facebook.com/story.php?story_fbid=155394476150161&id=100105508345725

 #அழிந்த கோட்டை, அழியாது நிலைத்திருக்கும் சல்லேகனை நினைவுக் கல்வெட்டு,பேகூர் கோட்டை,பேகூர், பங்களூர்,கர்னாடகா:ஆயிரம் ஆண்...
17/01/2026

#அழிந்த கோட்டை, அழியாது நிலைத்திருக்கும் சல்லேகனை நினைவுக் கல்வெட்டு,பேகூர் கோட்டை,பேகூர், பங்களூர்,கர்னாடகா:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கங்கர்கள் கோலோச்சிய கோட்டை அமைந்த பேகூர் என்ற ஊர் இன்று கிராமமும், நகரமும் இணைந்து வளர்ந்து வரும் பெரு நகரமாக மாறி உள்ளது. இவ்வூரில் இன்றும் பழமையான வீடுகள் மிகுந்த சிறிய தெருக்கள் வழியே கோட்டை இருக்கும் வழி விசாரித்தவாறு சிறிது தூரம் உட்புறம் நடந்து சென்றதும் மண் சாலை முடிவில் கண்ணில் தெரிகிறது கோட்டை நுழைவாயில்.

பிரம்மாண்டமான கோட்டை என்று எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சும், கோட்டை நுழைவாயில் மற்றும் பக்கத்தில் ஒரு சில கோட்டை அரண் கற்சுவர்கள் தவிர மீதி முழுவதும் மண் மேடாகி போயுள்ளது.ஏக்கர் கணக்கில் பரந்த நிலம் ஆடு மாடு மேய்ச்சலுக்கு உபயோகமாக உள்ளது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான நிலப்பகுதி பரந்துள்ளது, விஜயநகர காலத்திய பெருமாள் கோயிலும், அதற்கு முன்னரே இருந்த சிவன் கோயிலும் தற்போது சீரமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.

இந்த கோட்டையில்
ஒரு சல்லேகனை (உண்ணாமல், நீர் அருந்தாமல் உயிர் நீக்கும் விரதம்) கல்வெட்டு உள்ளது என்பதைக் கேள்விப்பட்டு அதை குறித்து அங்கு எல்லா இடத்திலும் தேடியும் கண்டறிய முடியாததால்,அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்து ஏதாவது எழுத்துப் பொறிப்பு உள்ளதா என்று ஓரளவு எனக்குத் தெரிந்த கன்னட மொழியிலே விசாரித்தபோது அவர் என்னை அழைத்துச் சென்று நுழைவாயில் அருகே உயரமான பகுதியில் தூணில் மேல் பகுதியை கை காட்டினார்.

ஏதும் தெளிவில்லாமல் காட்சி தந்ததால் மீண்டும் ஊர் உட்புறம் வந்து மைதாமாவு வாங்கி வந்து அதன் மீது பூசி துடைத்த பின்னர் ஓரளவு தெளிவான பழைய கன்னட எழுத்துப் பொறிப்பு தெரிந்தது.
கல்வெட்டின் மேல்புறம் ஒரு பெண்ணின் புடைப்பு உருவமும் சிதைந்த நிலையில் காணமுடிந்தது.

தமிழ் மொழி பெயர்ப்பு கல்வெட்டின் வாக்கியம்,

"ஜின சாசனம் செழிக்கட்டும்

ஸ்ரீமத் நாகதார மகள்

தொண்டயப்பே சன்னியாசம்

மேற்கொண்டு இறந்தாள்.

கங்கர்களின் நிலப்பிரபு தலைவரான நாகத்தாரா சமண மதத்தை சேர்ந்தவர், நாகத்தாராவின் மகள் தொண்டயப்பே,இங்கு சல்லேகனை என்ற சமண சடங்கில் தனது உயிர் துறந்ததை இக்கல்வெட்டு நினைவு கூறுகின்றது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெயருடன்,மகள் பெயரும் இணைத்து இருக்கும் அபூர்வ சல்லேகனை கல்வெட்டு முக்கியத்துவம் இன்றி அழியும் நிலையில் உள்ளது.

கூகுள் வரைபடம் :
https://maps.app.goo.gl/NvurdcX7jmDcHb5T6?g_st=aw

 #ஶ்ரீ அபிதகுஜாம்பாள் உடனுறை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயம்,இராஜாவீதி,வாலாஜாபாத்(சிவபுரம்)காஞ்சிபுரம்.
06/01/2026

#ஶ்ரீ அபிதகுஜாம்பாள் உடனுறை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயம்,
இராஜாவீதி,
வாலாஜாபாத்(சிவபுரம்)காஞ்சிபுரம்.

  raid Hero Stone, Begur,Bangalore,Karnataka.Karnataka is one of the rich memorial stones yielding regions of India. Tho...
05/01/2026

raid Hero Stone, Begur,Bangalore,Karnataka.

Karnataka is one of the rich memorial stones yielding regions of India. Thousands of memorial stones with Inscriptions engraved mostly in Kannada and next to that stands in Tamil, Telugu and Sanskrit languages.Around three thousands inscribed memorial stones have been recorded in Karnataka alone, These memorials reflect the political fortunes of a particular dynasty the mature of society,structure of the language and evolution of the script.

Kannada Sangam literature mentioned that the cattle raid was considered as invitation to a war or a call for combat. Around twelve hero stones found in Begur Panchalingeshwara temple in corner of the temple complex compound. Among them an Ten feet three layers of cattle raid hero stone found in the side of wall.

The bottom layer few cattles found, and in mid two Heros who had sacrificed their lives to rescue those cattle’s.,and at the Top layer the dead heroes found in paradise, Apsaras found at both sides. No inscriptions found in the stone,this incident sculpture is self-explanatory.

This Hero stone was laid for village fellow men who tried to bring back their lost cattle’s, those people were remembered as heroes of the village.Crossing Thousand years still remembered by this Hero Stone evidence.

01/01/2026

#சதுப்பேரி_கிராமத்தில்_அமைந்துள்ள_வேலூர்_கோட்டை_ஜலகண்டேஸ்வரர்_கோயிலுக்கு_தானம்_தந்த_கல்வெட்டு.

#முப்பரிமாண_வடிவில்

 #கிராமத்தை_வேலூர்_கோட்டை_ஜலகண்டேஸ்வரர்_கோயிலுக்கு_தானம்_தந்த_கல்வெட்டுகள்_தேடிய_பயணம்:வேலூரை சுற்றி அமைந்துள்ள சத்துவாச...
31/12/2025

#கிராமத்தை_வேலூர்_கோட்டை_ஜலகண்டேஸ்வரர்_கோயிலுக்கு_தானம்_தந்த_கல்வெட்டுகள்_தேடிய_பயணம்:

வேலூரை சுற்றி அமைந்துள்ள சத்துவாச்சாரி, அரப்பாக்கம், சித்தேரி, அரும்பருத்தி, சதுப்பேரி, சம்பங்கி நல்லூர், பெருமுகை, திப்பசமுத்திரம் மற்றும் சேக்கனூர் என்ற கிராமங்களில்
வேலூர் கோட்டையில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர்க்கு இக்கிராமங்கள் தானமாக வழங்கப்பட்ட செய்தியை தாங்கிய கல்வெட்டுகள் அமைந்துள்ளன.

சுமார் எட்டு அடி உயரம் கொண்டதாக பலகை கல்லில் ஒருபுறம் நிவந்தன கல்வெட்டும், மறு
பக்கம் நீண்ட சூலம், சூரியன் மற்றும் பிறை நிலவு பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுகளில் வேலூர் விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலமான பதினைந்தாம் நூற்றாண்டுகளில் வேலூரின் படைத்தளபதியாக இருந்த சின்ன பொம்மு நாயக்கர் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர்க்கு இந்த கிராமங்களை நிவந்தமாக அளித்ததைக் குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டுக்களில் இறைவன் பெயரை "ஜுரகண்டேசுவரர்" என்றே குறிப்பிடுகின்றன. "ஜுரத்தை அழிக்கும் ஈசன்" என்ற பொருள் கொண்ட "ஜுரகண்டேஸ்வரர்" என்ற பெயரே நாளடைவில் "ஜலகண்டேஸ்வரர்" என மருவியுள்ளது.

தனக்கு மேலான பதவியில் இருந்த அமைச்சர் மூலமாக விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்த மகாமண்டலேசுவரர் ஸ்ரீரங்க தேவராயரிடம் விண்ணப்பித்து இந்த தானத்தை சின்ன பொம்மு நாயக்கர் வழங்கியுள்ளார் என்பதை இக்கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகின்றது.

சதுப்பேரி கிராமத்தில் அமைந்துள்ள கல்வெட்டை தேடிச் சென்றோம், வயதான பெரியவர்கள் மட்டுமே சூலக்கல் என்று சொன்னால் புரிந்து கொண்டு வழிகாட்டினர், பிள்ளையார் கோயில் தெருவில் சாலை ஓரம் எழுத்துக்கள் நல்ல நிலையில் மண்ணில் புதைந்துள்ளது. ஊரில் விசாரித்த போது காணும் பொங்கல் அன்று அதில் உள்ள சூலத்துக்கு பூஜை செய்வதாகக் கூறினார்கள். அதில் உள்ள மந்திர எழுத்தை யாரும் படிக்கவில்லை என்றும் கூறினர். நாங்கள் மாவிட்டு அதில் உள்ள தகவலை படித்து விளக்கிய போது ஆச்சரியமாக கேட்டு கொண்டனர்.

அரியூரில் ஆலயம் முன்னர் சாலை ஓரம் அமைந்த கல்வெட்டு எழுத்துக்கள் தெரியாத அளவு சுண்ணம்பு பூசி விட்டனர்.

சத்துவாச்சாரியில், நீண்ட தேடலுக்குப் பின் வேளாளர் தெருவில் குப்பை கொட்டும் இடத்தில் காணப்பட்டது இக்கல்வெட்டு. பின்னர் அக்கல்வெட்டு இத்தெரு மக்களின் உதவியால் மீண்டெழுந்தது.

அரப்பாக்கத்தில் மட்டும் இதன் அருமையை உணர்ந்து பளிங்குபீடம் அமைத்து ஊர் நடுவே ஆலயம் எதிரே பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

பெருமுகையில் இந்த கல்வெட்டை பல நாட்கள் தேடியும் இதுவரை எங்கள் கண்களில் சிக்கவில்லை, அவ்வூரில் யாருக்கும் அதன் இருப்பிடம் தெரியவில்லை.

மற்ற ஊர்களில் அமைந்த இந்த கல்வெட்டுகளின் இருப்பிடம் பற்றிய தகவல்களை தெரிந்த நண்பர்கள் பகிரலாம்.

தொல்லியல் துறையால் ஆவணப்படுத்த பட்டுள்ளது இந்த ஒன்பது கிராம நிவந்தன கல்வெட்டுகள்.ஆனால் இக்கல்வெட்டுகளில் ஊர் தவிர அதன் சரியான அமைவிடம், இன்றைய நிலை பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.

 # ஆற்றுப்படை இதழ் 3:மின் இதழாக தொடங்கி 2025 ஆண்டு முதல் அச்சு வடிவில் வெளியிடப்பட்டு,இன்று இதழ் 3 & 4 வது ஒன்றாக அழகுற ...
31/12/2025

# ஆற்றுப்படை இதழ் 3:
மின் இதழாக தொடங்கி 2025 ஆண்டு முதல் அச்சு வடிவில் வெளியிடப்பட்டு,இன்று இதழ் 3 & 4 வது ஒன்றாக அழகுற வெளி வந்துள்ளது.
தேர்ந்தெடுத்த முத்துக்களாக வரலாற்று ஆய்வலர்கள், ஆர்வலர்கள் பலர் எழுதிய 21 கட்டுரைகள் பல அறியா தகவல்களுடன் வெளி வந்துள்ளது.

கட்டுரைகளுடன் போட்டியிடும் வண்ண படங்கள் மேலும் மெருகூட்டியுள்ளன.
கூடவே விலையில்லா
வித்தியாசமான அறிவார்ந்த நாள்காட்டி
இணைப்பாக கிடைக்க பெற்றேன்.

எனது எழுத்தில் கொங்கவாள் காமுண்டன் கல்வெட்டு மீண்ட கட்டுரை வெளியிட்டமைக்கும் நன்றி.

மேலும் பல அறியா தகவல்கள் தொடர்ந்து வெளிவர வாழ்த்துகள்.

 #அன்றைய(2017) திருத்தாளீஸ்வரர் ஆலய நிலை,அன்பூண்டி, வேலூர் :  அன்பூண்டி கிராமத்தை சேர்ந்த முகநூல் நண்பர் திரு.மார்க்கபந்...
05/12/2025

#அன்றைய(2017) திருத்தாளீஸ்வரர் ஆலய நிலை,அன்பூண்டி, வேலூர் :

அன்பூண்டி கிராமத்தை சேர்ந்த முகநூல் நண்பர் திரு.மார்க்கபந்து அழைப்பின் பேரில் பாலாற்றங்கரை அருகே அமைந்துள்ள திருத்தாளீஸ்வரர் சிவாலயம் காண எட்டு வருடம் முன்பு சென்றிருந்தேன்.

இவ்வலய கல்வெட்டில் ஆயிரம் வருடம் முன்பே இக்கிராமத்தை "ஐம்பூண்டி " என்றும் இங்கு அமைந்துள்ள சிவாலயத்தை "முப்பனை ஈஸ்வரமுடைய மகாதேவர் " என்றழைக்கப்பட்ட இவ்வாலயம் ஊரின் ஒரு பிரிவினரால் புதியதாக ஆலயம் அமைக்க திட்டமிட்டு மேல்கூரை மொத்தமாக இடிக்கப்பட்டு சுற்று சுவர்கள் மற்றும் இடிக்கப்படாமல் மற்றொரு பிரிவினரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த கற்சிலைகள் அனைத்தும் ஊரில் உள்ள பள்ளியில் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தார்கள், பார்வையிட அனுமதிக்க வில்லை.

ஆலய முன்புற சுவர் முழுவதும் கல்வெட்டுகள் காணப்பட்டது,இந்த ஆலயத்தில் ஏழு கல்வெட்டுகள் அமைந்துள்ளது.

தென்னிந்திய கல்வெட்டு முதல் தொகுதியில் இவ்வாலய 2 கல்வெட்டு விபரங்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன மற்ற ஐந்து கல்வெட்டு எதனால் ஆவணப்படுத்தப் படவில்லை என்பதை அறிய இயலவில்லை.

அந்த ஏழு கல்வெட்டின் விபரங்கள் :
கல்வெட்டு ஒன்று:
ஆலய மகா மண்டப மேற்குப் பக்கச் சுவரில் பொ.ஆ.பி. 1070-1120 முதலாம் குலோத்துங்க ரின் புகழ் சூழ் புணரி என்ற மெய்க்கீர்த்தியுடன் ஆவணப்படுத்த பட்டுள்ளது.

கல்வெட்டு இரண்டு:
தெற்பக்க சுவரில் இக்கோயில் இறைவன் பெயராக முப்பனையீஸ் வரமுடையா தேவர் என்றும்,நிலம் தான எல்லைகளை குறிப்பதை ஆவணப்படுத்த பட்டுள்ளது.

கல்வெட்டு மூன்று: மகாமண்டப மேற்கில் குழி நிலம் இவ்வூர் மக்கள் முன்னிலையில் எழுதித் தந்த செய்தியும், அஞ்சு நாட்டு ஜனா நாதன் பணம் என்று முற்றுப்பெறாமல் கல்வெட்டு காணப்படுகிறது.

கல்வெட்டு நான்கு:
மகாமண்டப தெற்கு சுவரில் விக்கிரம சோழரின் (பொ.ஆ.பி 1118 - 1135)பத்தாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் 9 சந்தி விளக்கு தானம் வைத்த இருவர் பெயர் நல்லூர் கிழவன் மற்றும் நக்கன் என்பவர்கள் ஆளுக்கு ஒரு சந்தி விளக்கு வைத்து,சந்திரன் சூரியன் உள்ளவரை இத்தானம் நிலைத்திருக்க வேண்டும் என்ற செய்தி காணப்படுகிறது.

கல்வெட்டு ஜந்து: மகாமண்டபத்தின் தெற்கு சுவரில் சிதைந்த நிலையில் உள்ளது சோழ மரபை சேர்ந்த முதலாம் குலோத்துங்கரின் (பொ.ச. 1081) பதினோராவது ஆட்சியாண்டு என அறியமுடிகிறது.

கல்வெட்டு ஆறு: மகாமண்டபத்தின் தெற்கு சுவரில் இரண்டு வரிகள் மட்டுமே உள்ளன ஸ்வஸ்தி ஸ்ரீ திருமயிலாட வணிகன் பொன்ன(ன்)என்ற வணிகன் பெயர் மட்டும் காணப்படுகிறது.

கல்வெட்டு ஏழு:
கிழக்கு பக்க குமுதம் வரியில் இக்கல்வெட்டு சரியான பொருள் தரும் வகையில் இல்லை பொ.ஆ.பி 16 - 17ம் நூற்றாண்டினை சேர்ந்த எழுத்துகளாக அறிய முடிகின்றது.

தற்போது ஆலயம் முழுவதும் இந்து சமய அறநிலைய துறையினரால் பிரித்து வைக்கப்பட்டு புதிய ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இப்பணியின் போது கருவறை எதிரே நான்கு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட விபரங்கள் எங்களது முந்தைய பதிவில்...

https://www.facebook.com/share/p/1GuMhUgGAr/

 # அரிகண்ட வீரர் சரதேவன் ஒவியமாக:இராஷ்டிரகூட மன்னர் கன்னரதேவன் 27வது ஆட்சியாண்டில், பொ.ஆ.பி 966 ம் ஆண்டில்,தனது தலைவனின்...
21/09/2025

# அரிகண்ட வீரர் சரதேவன் ஒவியமாக:

இராஷ்டிரகூட மன்னர் கன்னரதேவன் 27வது ஆட்சியாண்டில், பொ.ஆ.பி 966 ம் ஆண்டில்,தனது தலைவனின் வெற்றிக்கு சரதேவன் என்பவர் தன் தலையை அரிந்து பிடாரிக்கு காணிக்கையாக அளித்த நடுகல், பாகசாலை என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆயிரமாண்டை கடந்த நடுகல் தூசி, எண்ணெய் பிசுக்குடன் வீரர் உருவம் தெளிவில்லாமல் காணப்படுகிறது,எந்த கோணத்தில் படம் பிடித்தாலும் தெளிவற்று இருந்தது.

அதனால் அந்த நடுகல்லை ஓவியமாக வரைந்தால் எப்படி இருப்பார் என சிறு முயற்சி செய்து கோட்டோவியமாகவும், புள்ளிகளாலும் பென்சில்,கறுப்பு மை பயன்படுத்தி சுமார் 3 மணி நேரம் எடுத்து கொண்டேன் வரைந்து முடிக்க...

முறையான பயிற்ச்சியும்,பொறுமை இல்லாததால் ஒவியம் முற்று பெறவில்லை போல் தெரிகிறது.!

(வீரன் சரதேவன் அரிகண்ட நடுகல் முந்தைய பதிவு)

https://m.facebook.com/groups/668086197365111/permalink/1876615126512206/?mibextid=Nif5oz

Address

Sathuvachari
Vellore
632009

Website

Alerts

Be the first to know and let us send you an email when வியக்கத்தக்க வேலூர் - Incredible Vellore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to வியக்கத்தக்க வேலூர் - Incredible Vellore:

Share