26/03/2026
#முதலாம் இராச நாராயண சம்புவராயர் எடுப்பித்த முதற்கோயில் அருள்மிகு ஏகாம்பரநாதன் திருக்கோயில், (பொ.ஆ.பி 1340) குட்டியம் கிராமம், வாலாசாபேட்டை, இராணிப்பேட்டை, வேலூர்:
குட்டியம் என்ற அழகிய கிராமத்தில் வயல்களிடையே புதியதாக கட்டியமைக்கப்பட்ட ஏகாம்பரநாதன் என்ற சிவாலயம்,சுமார் 15 வருடம் முன்பு வரை இடிந்துபோய் தரைமட்டமாகி இருந்தது. கோயிலின் அதிட்டான பகுதி மட்டுமே காணப்பட்டது.தற்போது ஆலயத்தை சிறந்த முறையில் சீரமைத்து அதே அதிட்டானத்தின் மீது கல்வெட்டுகள் சேதமாகாமல் சிறப்பாக கட்டமைத்துள்ளனர்.
பிரதான கருவறையில் ஏகாம்பரநாதன் என்ற பெயரில் எழுந்தருளியுள்ள சிவலிங்கம் அழகுற காட்சியளிக்கிறார். புதியதாக அமைக்கப்பட்ட ஆலயத்தில் காமாட்சியம்மன்,முருகன் ஆலயம் என விரிவுபடுத்தி சுற்றிலும் மதில் சுவர்களுடன் பாதுகாப்பாக அமைந்துள்ளது.
முதலாம் இராஜ நாராயண சம்புவராயர் (பொ.ஆ.பி.1340) ஆட்சிக்காலத்தில் எடுப்பித்த முதல் ஆலயமாக ஆய்வாளர்களால் அறியப்படுகிறது.இது இவருடைய தந்தை வென்று மண்கொண்ட சம்புவராயர் நினைவாக கட்டப்பட்ட கோயிலாகும்.
இக்கோயிலின் கருவறை வடக்கு சுவர் அதிட்டானத்தின் முப்பட்டை குமுதம்,ஜகதிப் பகுதிகளில் முதலாம் இராசராச நாராயண சம்புவராயரின் கல்வெட்டொன்று.,
"தம்பிரானார் திரு வாசலில் நிலையுள்ள அகம்படி முதலிகளில் எழும்போதன் கெங்கையாடி மாதயன் வென்றுமண் கொண்ட சம்புவராயர் அஸ்தி கொண்டு போய் கெங்கையிலே விட்டு கெயயிலே ஸ்ராத்தம்
பண்ணி வருகையில் இவனுக்கு கங்க கமந வ்ருத்தி ஆகக் குடுத்த குட்டியமான இராச நாராயண நல்லூர்"
என்று இக்கல்வெட்டு முடிகின்றது.
இக்கல்வெட்டின் பொருள்,
இது வென்று மண் கொண்ட சம்புவராயரின் சாம்பலைக் கொண்டு போய் கங்கையிலே விட்டுக் கயையிலே சிரார்த்தம் (ஈமக்கடன்) செய்துவந்த இச்சம்புவராயரின் அதிகாரி எழும்போதன் கங்கையாடி மாதயன் என்பவருக்கு இவர் செய்த இந்த ஈமக்கிரியை பணிக்காகக் குட்டியம் ஊருக்கு இராசா நாராயணன் நல்லூர் என்று பெயரிட்டு கங்காகம நவிருத்தியாக
ஊர் முழுவதையும் இறையிலி தானமாக இராஜ நாராயண சம்புவராயர் வழங்கினார் என்ற செய்தியை கூறுகின்றது.
வென்றுமண் கொண்டா ரின் இரண்டாவது மகன் பொன்னின் தம்பிரான் இராஜநாராயணன் சம்புவராயரும் இக்கோயிலுக்கு பூசை அமுதுபடி ,திருப்பணி மற்றும் திருவிழாவுக்கென்று நாலு வேலி நன்செய் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். இதனை கோயில் கருவறை மேற்கு தெற்கு சுவர் அதிட்டானம் முப்பட்டை ஜகதிப் பகுதியில் கல்வெட்டாகவும் வடித்துள்ளனர்.
இக்கல்வெட்டு வரிகள் இந்த கோயில் எடுக்கப்பட்ட வரலாறை தெளிவாகக் கூறுகின்றது,இப்போது இவ்வாலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.
திசைக்காட்டி, அழைத்து சென்ற முகநூல் நண்பர் இராணிப்பேட்டை திரு.வெங்கடேஷ்க்கு நன்றி.