29/12/2016
பழைய ரூபாய் நோட்டு தடை விவகாரம் : பிரதமர் மோடிக்கு ராகுல் 5 கேள்வி, 11 யோசனைகள்
புதுடெல்லி : பழைய ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு செல்லாத விவகாரம் குறித்து நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு பற்றி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சில விஷயங்களை தெளிவுப்படுத்த வேண்டும். இந்த பிரச்னை பற்றி பிரதமர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதற்கு முன் கீழ்கண்ட கேள்விகள், கோரிக்கைகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.
* நவம்பர் 8ம் தேதிக்கு பின் எவ்வளவு கருப்பு பணம் வெளியே வந்துள்ளது?.
* இத்தனை நாட்களாக பணம் கிடைக்காத பிரச்னையால் இந்திய பொருளாதாரம் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது?
* இந்த அறிவிப்புக்கு பிறகு எத்தனை பேர் இறந்தனர் என்பதை அரசு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். எத்தனை பேருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. நஷ்டஈடு வழங்கவில்லை என்றால் ஏன் வழங்கப்படவில்லை?
* ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை வெளியிடும் முன் பிரதமர் மோடி இதுபற்றி யாரிடம் எல்லாம் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்தார்? அந்த நிபுணர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்.
* ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு முன்பு ரூ.25 லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் பற்றிய பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் ரூபாய் நோட்டு விவகாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும். பணமதிப்பை இழக்கச் செய்த முடிவு 50 நாட்களை நெருங்கி விட்டது. எனவே பிரதமர் மோடி உடனடியாக பணம் எடுக்க விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். முதலீடு செய்த மக்களுக்கு 18 சதவீத ஆண்டு வட்டி கணக்கிட்டு வழங்க வேண்டும். மின்னணு பணபரிவர்த்தனை செய்யும் போது விதிக்கப்படும் அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதுவரை ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு சரி செய்ய வேண்டும். சிறுவியாபாரிகள், தொழில் அதிபர்களுக்கு 50% வருமான வரி, விற்பனை வரி தள்ளுபடி வழங்க வேண்டும்.
ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அடிப்படை வேலை வழங்கும் நாளை இந்த ஆண்டு இருமடங்காக கூட்ட வேண்டும். நவம்பர் 8ம் தேதி முதல் இன்று வரை வேலை இழந்த தொழிலாளர்கள் பற்றி கணக்கெடுக்க சிறப்பு குழுவை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு மார்ச் 31 வரை குறைந்தபட்ச ஊதியம் அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும். மோடியின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அவர்களது பயிர்கள் மீது 20 சதவீத போனஸ் தொகையை அறிவிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ரேஷன்கார்டுகள் வைத்திருக்கும் அனைவருக்கும் பாதித்தொகையில் பொருட்கள் வழங்க வேண்டும்.
சுவிஸ் வங்கி கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள் விவரத்தை பிரதமர் மோடியிடம், அந்த நாட்டு அரசு கொடுத்து விட்டது. இந்த பட்டியலை பிரதமர் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார். பொது மக்களுக்கு தெரியும் வகையில் சுவிஸ் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். மக்களவை, மாநிலங்களவையில் அவர் பகிரங்கமாக இந்த பெயர்களை அறிவிக்க வேண்டும். இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் போராட்டம்
பழைய ரூபாய் நோட்டு விவகாரம் மற்றும் மோடியின் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தொடர் போராட்டங்களை அறிவித்து உள்ளது. ஜனவரி 2,3 நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது. ஜனவரி 6,7ல் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடக்கிறது.
நன்றி: தினகரன்.