20/08/2017
கடுகு மற்றும் பாரம்பரிய விதைப் பயணம் :
( விதைகளே பேராயுதம் ! )
ஜல்லிக்கட்டு போல் மற்றுமொரு வாழ்வாதர
விழிப்புணர்ப்பு பயணத்திற்குத் தயாராகுவோம் !!
செம்மை குழுவினர் ( ம.செந்தமிழன்) , வானகம் ( நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம் ) மற்றும் தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பு, மரபு விதை நாடோடிகள், ஆவாரை இயற்கை அங்காடி, பசுமைக்கரங்கள் இராஜபாளையம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், கம்பம் அகடாமி ஆப் அக்கு பங்சர் இணைந்து கடுகுப் பயணம் சிவகாசியில்
நாள் : ஆகஸ்ட் 23, 2017
நேரம் : மாலை 6மணி முதல் 8.15 வரை
இடம் : ராக்லாண்ட் பள்ளி, C.M.S பள்ளி பின்புறம், சாட்சியாபுரம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, சிவகாசி.
தொடர்புக்கு : 94435 75431, 96550 51239, 98431 27804,
99424 19351 , 88259 49542, 98946 03532
நிகழ்ச்சி :
இயற்கை விவசாயிகள் ஒருங்கிணைப்பு
இயற்கை வாழ்வியலாளர்கள் ஒருங்கிணைப்பு
மரபு விதை பரிமாற்றம் ( நாட்டுக் கடுகு )
மரபணு மாற்றப்பயிர் குறித்து விழிப்புணர்வு
மற்றும் வாழ்வியல் குறித்து கலந்துரையாடல்
நண்பர்களே !
அன்று :
நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003-ல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் ஐயா இயற்கை மற்றும் களச் செயல்பாட்டாளர்கள் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தால்
தமிழ்நாட்டில் இன்று 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் பல காய்கறி ரகங்களும் மீட்கப் பட்டுள்ளன.
அது போல் நம்மாழ்வார் ஐயா மற்றும் இயற்கை களச்செயல்பாட்டாளர்கள் பலர் மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு எதிராக குரல் கொடுத்ததன் விளைவாக இன்று வரை Bt கத்தரிக்காயை திணிக்கும் முயற்சி தடுக்கப் பட்டது.
இன்று :
மரபணு மாற்ற கடுகுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் விசாரணைக்கு வருகிறது. அதற்குள்ளாக தனது கொள்கை முடிவை அறிக்கையாக அளிப்பதாகச் சொல்லி இருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துவிட்டால், நமது உணவில் கலக்கும் முதல் மரபணு மாற்றப் பொருளாகக் கடுகு இருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாட்டுக் கடுகு நமது கையை விட்டுப் போய்விடும்.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஒப்புதல் அளிக்கும் குழுவின் (Genetic Engineering Appraisal Committee - GEAC) பட்டியலில் கடுக்குக்கு அடுத்தபடியாக, அரிசி, கம்பு, சோளம் உள்ளிட்ட 21 வகையான உணவுப் பயிர்கள் இருக்கின்றன.
இந்தியாவைப் பொருத்தவரை, உணவுப் பயிரில் மரபணுமாற்ற விதைகளை அனுமதிப்பது இதுவே முதல்முறை. கடந்த ஆட்சியில் கத்தரிக்காயில் மரபணுமாற்றம் அனுமதிக்கப் பட்டது. கடுமையான எதிர்ப்புகளால் அம்முடிவு கைவிடப்பட்டது. இப்போதுள்ள அரசு கடுகு விதைகளில் மரபணுமாற்றத்தைத் திணிக்க முடிவெடுத்துள்ளது.
இப்போது வரைக்கும் இந்தியாவில் நாட்டு கடுகு விளைச்சலில் பற்றாக்குறை ஏற்பட்டு யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. மாறாக, உற்பத்தியில் இந்தியா முன்னிலையில்தான் இருக்கிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் மாடுகள், கோழிகள் போன்ற வளர்ப்பு உயிரினங்களுக்கான தீவனப் பொருட்களில் மரபணு மாற்றம் நடைமுறையில் உள்ளது. மக்காச்சோளம் அவற்றுள் முதன்மையானது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் செய்யப்படும் தீவனங்கள் அவ்வுயிரினங்களின் செயல்திறனை, எடையை இயற்கைக்கு மாறான அளவுக்கு அதிகப்படுத்துகின்றன. மனிதர்கள் உண்ணும் உணவின் மரபணுக்களை மாற்றிவிட்டால், அதன் விளைவுகளை அளப்பதும் அனுபவிப்பதும் கற்பனைக்கெட்டாதவகையில் மோசமாக இருக்கும்.
பி.டி. பருத்தியின் விளைவுகள்
-----------------------------------------------
பி.டி. பருத்தியின் இலைகளைத் தின்ற கால்நடைகள் மாண்டன. பொருளாதார ரீதியாக நட்டம் ஏற்பட்ட விவசாயிகள் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டனர். பி.டி பருத்தியால் கிடைத்த அனுபவத்தைத் தொடர்ந்து, மரபணு மாற்றக் கத்தரிக்காயை விவசாயிகள் போராடித் தடுத்தார்கள். இப்போது கடுகைக் கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு.
கடுகு பயணத்தின் நோக்கம். :
இப்பயணத்தின்போது இயற்கை உழவர்கள், வீட்டுத் தோட்டக்காரர்கள், மரபுக் கொள்கைகளில் பிடிப்பு கொண்டோர், செம்மைச் செயல்பாடுகளில் அக்கறைகொண்டோர் ஆகியோரைச் சந்தித்து அவர்கள் வழியாக நாட்டுக் கடுகு விதைகளை நாடெங்கும் விதைக்க உள்ளோம்.
கத்தரிக்காயில் மரபணு மாற்றம் அனுமதிக்கப்பட்டபோது, ஐயா நம்மாழ்வார் பொங்கி எழுந்து போராடினார். இவ்வாறானவர்களின் விருப்பங்களுக்கு உரு கொடுப்பது நம் கடமை. ஐயா நம்மாழ்வார் மறைந்துவிட்ட இச்சூழலில் நம் அனைவருக்கும் கூடுதல் பொறுப்பு உள்ளது.
அன்புடன்.
ம.செந்தமிழன் , ப.கலாநிதி