12/09/2026
1000 ஆண்டுகள் பழமையான லிங்கமலை சிவன் கோவில் வரலாறு அழிக்கப்படுகிறதா? அதிகாரிகளின் ஒருதலைப்பட்சப் போக்கை கண்டித்து பௌர்ணமி கிரிவலத்திற்கு அழைப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, பேராம்பூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட மலம்பட்டி லிங்கமலை சிவன் கோவில் 1000 ஆண்டுகள் தொன்மையான வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமாகும். இக்கோவிலின் வழிபாட்டு உரிமையையும் தொன்மையையும் திட்டமிட்டு அழிக்கும் நோக்கில் சிலர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
* தொடர் ஆக்கிரமிப்பும் வழிமறிப்பும்: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்து, பக்தர்கள் செல்லும் பாரம்பரியப் பாதையைத் தொடர்ந்து அடைத்து வருகின்றனர். இன்று மீண்டும் பாதை முழுமையாக அடைக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்த பின்னரே நடந்து செல்ல மட்டுமே தற்காலிகமாக வழி விடப்பட்டுள்ளது.
* அதிகாரிகளின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை: பாதையை அத்துமீறி அடைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், விராலிமலை வட்டாட்சியர், நீர்பழனி வருவாய் ஆய்வாளர் மற்றும் மாத்தூர் காவல்துறை அதிகாரிகள், "இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று கோவிலுக்குச் செல்லுங்கள்" என்று பக்தர்களையே அச்சுறுத்தும் வகையில் பேசி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.
* வாக்குறுதிகள் காற்றில்: பொதுப்பாதை அமைத்துத் தருவதாக உறுதியளித்து 50 நாட்களுக்கு மேலாகியும், பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தப் பிரச்சனையைத் திசைதிருப்பி அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் மதப் பிரச்சினையாக மாற்ற அதிகாரிகள் முயல்கின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது.
* தொல்லியல் துறை புறக்கணிப்பு: கோவிலின் தொன்மையை உறுதி செய்ய தொல்லியல் துறை மூலம் விரிவான ஆய்வு நடத்தக் கோரி பலமுறை வலியுறுத்தியும், இதுவரை எவ்வித கள ஆய்வும் மேற்கொள்ளப்படாமல் வரலாற்றை மறைக்கப் பார்க்கின்றனர்.
பக்தர்களே, பொதுமக்களே ஒன்று கூடுவோம்!
நம் முன்னோர்கள் போற்றிப் பாதுகாத்த 1000 வருட லிங்கமலை சிவன் கோவிலின் வரலாற்றையும், வழிபாட்டு உரிமையையும் மீட்க நாம் அனைவரும் களம் காண வேண்டிய நேரம் இது.
அனைத்து சிவபக்தர்களும், பொதுமக்களும் வரக்கூடிய பௌர்ணமி கிரிவலத்தில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு நமது எதிர்ப்பை அமைதியான முறையில் பதிவு செய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி நிரந்தரப் பொதுப்பாதை அமைத்துக் கொடு! தொல்லியல் துறை ஆய்வை உடனே தொடங்கு!
செப்டம்பர் 26 தேதி - சனிக்கிழமை பௌர்ணமி கிரிவலம்