27/11/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடன் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
25.11.2025 அன்று இரவு ஈரோட்டிற்கு வருகை தந்த மாண்புமிகு முதல்வர் அவர்களை காளிங்கராயன் இல்லத்தில் நேரில் சந்தித்து சிப்காட் பிரச்சினைகள் தொடர்பாக இரண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்து அவற்றை நிறைவேற்ற கோரினோம்.
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சர் திரு தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்வில் மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் வி.எம்.கந்தசாமி, கி.வே.பொன்னையன், பி.சிவக்குமார், எஸ்.பொன்னுசாமி, ஓ.சி.சண்முகம், டி.என்.சென்னியப்பன், பல்லவி கே.பரமசிவம், என்.பழனிச்சாமி, கே.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
கோரிக்கை மனுக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன
பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம்
நாள்:25.11.2025
பெறுநர்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம்
சென்னை - 600009
முகாம்: ஈரோடு
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
பொருள்: பெருந்துறை சிப்காட்டில் தாங்கள் அறிவித்து தொடங்கி வைத்த பொது சுத்திகரிப்பு நிலையத்தை, திட்டமிட்டபடி அமைத்து விரைவில் செயல்படுத்த உத்தரவிடக் கோரும் முறையீடு!
பெருந்துறை பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் (CETP) அமைக்க உத்தரவிட்டதோடு, கடந்த 11.06.2025 அன்று அதற்கான பணிகளை தொடங்கி வைத்ததற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களது மேலான உத்தரவின்படி, பெருந்துறை சிப்காட்டில் SIPCOT 25% + TNPCB 25% + பெருந்துறை சிப்காட்டில் உள்ள அனைத்து நிறுவனங்கள் சார்பில் 50% என்ற பங்குத் தொகை அடிப்படையில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 20.11.2023 அன்று அரசாணை (GO No:218) வெளியிடப்பட்டது. இதனை, கடந்த 21.11.2023 அன்று மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிப்காட்டில் பொது மக்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டு, ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்தார்.
பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, TWICL என்ற தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் லிமிடெட்டுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதன் அறிக்கை அடிப்படையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தும் வகையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டது. நிறைவாக கடந்த 09.06.2024 அன்று, குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்த M/s. Advent Envirocare pvt Ltd & M/s. Akshara Water Treatment (Consortium) என்ற தனியார் நிறுவனத்திற்கு ரூ136,76,20,000/-(ரூபாய் நூற்றி முப்பத்தாறு கோடியே எழுபத்தி ஆறு லட்சத்து இருபதாயிரம்) - க்கு பணி உத்தரவு (Work Order) வழங்கப்பட்டது
பணிகள் தொடக்க விழா:
கடந்த 11.06.2025 அன்று பெருந்துறை, விஜயமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தீர்கள். ஆனால் தாங்கள் தொடங்கி வைத்து ஆறு மாதங்கள் கடந்தும் நாளது வரைபொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் கவலையும், அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிப்காட் நிறுவனம் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான CTE (Consent to Establish) ஒப்புதலுக்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக அறிகிறோம்.
ஆனால், அதில் டெண்டர் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல தொழில் நுட்ப விபரக் குறிப்புகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகக் தெரிய வருகிறது.
குறிப்பாக, டெண்டர் ஆவணத்தில் நீர் தரம் வடிவமைப்பு அளவுகோல் 9000 PPM வரை என உள்ளது. ஆனால், CTE க்கான விண்ணப்பத்தில் 6500 PPM என குறைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
உபகரண அளவு 20 மணி நேர செயல்பாடு அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என டெண்டர் ஆவணத்தில் உள்ளது. ஆனால், 24 மணி நேர செயல்பாடு கொண்டதாக அமைக்க தற்போது அனுமதி கோரப்பட்டுள்ளது.
பாய்லர் 5 TPH திறன் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும் என டெண்டர் ஆவணத்தில் உள்ளது. ஆனால், தற்போது 2TPH திறன் கொண்ட பாய்லர் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக அமைக்கப்படும் பொது சுத்திகரிப்பு நிலையத்தின் நோக்கமே, மாசுபட்ட நிலத்தடி நீரை போர்வெல்கள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் மூலம் வெளியேற்றியும், நல்லா ஓடையில் வெளியேறும் மாசடைந்த கழிவு/கசிவு நீரையும் சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு மறுபயன்பாட்டிற்கு வழங்குவதே ஆகும். ஆனால், தற்போது நல்லா ஓடை வழியாக செல்லும் மேற்பரப்பு நீரை மட்டும் சுத்திகரிக்கும் வகையில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; இதனை ஏற்றுக் கொண்டால் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அடிப்படை நோக்கமே கேள்விக்குறியாகும் .
ஆகவே, தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, டெண்டர் நிபந்தனைகள் படி பொது சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அமைக்க உரிய உத்தரவிட வேண்டும் எனக் பணிவன்புடன் வேண்டுகிறோம்.