22/10/2020
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் உள்ள ஓடையில் ஏழடி நீளமுடைய கல்மரம் கண்டறியப்பட்டது.
குன்னம் கிராமத்தில் வட புறமாக ஆனைவாரி ஓடையாக உருவெடுக்கும் ஓடை வரகூர் ,குளப்பாடி வழியாக ஓடுகிறது. ஓடையின் இருபக்கமும் மானாவாரி நிலப்பகுதி இருந்து மழைக்காலத்தில் நீர் வருகிறது .
இந்த ஓடையில் நடுப்பகுதியில் பாறைகளுக்கிடையே புதைந்த நிலையில் ஒரு கல்மரம் ஒன்று அறியப்பட்டுள்ளது.
இந்தக் கல் மரமானது தற்போது ஏழு அடி நீளம் மட்டுமே இருக்கின்றது .இந்த ஓடையில் 20 அடி அகலத்தில் இந்த கல் மரமானது இருந்திருக்க வேண்டும் .
காலமாற்றத்தில் மீதமுள்ள 13 அடி மரமானது நீரில் அடித்துச் சென்று சிதைந்து போயிருக்கவேண்டும் .அவை பாறையின் மேற்பரப்பில் முழுமையாக வெளிப்பட்டு இருந்ததால் அவை சிதைந்து இருக்கக்கூடும். இந்த 13 அடி கல்மரம் அந்தப் பாறையில் புதைந்து இருந்ததற்கான தடயங்கள் இருக்கின்றது. மேலும் இந்த ஓடை முழுவதும் பல்வேறு கடல்வாழ் தொல்லுயிர்கள் புதைந்த நிலையில் கல் படிமங்களாக காணக் கிடைக்கிறது. பல்வேறு பெரும் பாறைகளில் சிறிய வகை கிளிஞ்சல்கள் பொதிந்துள்ளது தெரியவருகிறது. சில பாறைகளில் மரத்துண்டுகள் பதிந்து இருந்ததற்கான அடையாளமும் காணப்படுகிறது. குன்னம் வயல்வெளிகளில் தொடங்கும் ஆனைவாரி ஓடையானது பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் கருவூலமாக நீண்ட தொலைவிற்கு காணக் கிடைக்கிறது. இவற்றை தொல்லுயிர் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்களின் பார்வையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியலாம். இந்த ஓடையில் சிறிது தொலைவு நடந்து சென்றாலே பல அரிய புவியியல் வித்தைகளை இளைய தலைமுறையினர், ஆர்வலர்கள் அறிந்து கொள்ளலாம்.
அதேப்போன்று குன்னம் பெரிய ஏரியில்,அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் காணக் கிடைக்கிறது.
சாத்தனூர் கல்மரம் கண்டறிப்பட்ட பல ஆண்டுகளுக்கு பின்னர், அண்மைக்காலத்தில், சா.குடிக்காடு,கரம்பியம்,குன்னம் என கடந்த ஆறு மாதங்களில் மூன்று புதிய கல்மரங்கள் கிடைத்திருப்பது, பொதுமக்கள் இடையே ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது.
சில கல்படிமங்களை அதே இடத்திலும், சிலவற்றை அதன் அருகிலுள்ள பள்ளிகளிலும் சேகரித்து வைத்து உள்ளூர் அளவிலான காட்சியகங்கள் ஏற்படுத்தி பாதுகாக்க வேண்டும்.
வருகின்ற இளைய தலைமுறையினருக்கு நாம் வாழும் பகுதியின் புவியியல் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ளவும் வழிவகை செய்தால் சிறப்பாக இருக்கும்.