16/09/2024
ஆழ்ந்த இரங்கல்...!
எஸ்டிபிஐ கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவரும், கட்சியின் மாநில செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளருமான அன்பு சகோதரர் புஷ்பராஜ் அவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்கிற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. பூரண நலம்பெற்று மக்கள் பணியாற்றிட அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்ப்பார்ப்பு நிறைவேறாமல் போய்விட்டது.
கட்சியின் துவக்கக் காலத்திலிருந்து நம்மோடு பயணித்துவந்த அவர், எஸ்டிபிஐ கட்சியின் கிளை பொறுப்புகளில் ஆரம்பித்துச் சிறப்பான தன்னுடைய செயலாற்றலால் வளர்ந்து, மாவட்ட தலைவராக, மாநில செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலிலும் (திருவிக நகர்), உள்ளாட்சித் தேர்தலிலும் (சென்னை மாநகராட்சி) கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கியவர்.
துடிப்பு மிக்க இளைஞராக, சமூகம் நல்லிணக்கம் பேணக்கூடியவராக, எதிர்கால சமூக சிந்தனையோடு பயணிக்கக் கூடியவராக விளங்கியவர் சகோதரர் புஷ்பராஜ் அவர்கள். கட்சியினுடைய வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்து, கட்சியின் எல்லாவித முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அன்பு சகோதரர் புஷ்பராஜ் அவர்கள்.
தனது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கூட கடைசிவரை கட்சியின் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வந்தார். உடல் இயங்க மறுத்தாலும் இருந்த இடத்திலிருந்தே கட்சியின் பணிகளை கையாண்டவர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய தாயாரின் சிறுநீரகத்தைத் தானமாகப் பெற்று நலம் பெற்று வந்த நிலையில் மீண்டும் அவருடைய உடல்நிலை மோசமாகி மரணத்தை தழுவியுள்ளார்.
உண்மையிலேயே சகோதரர் புஷ்பராஜ் அவர்களின் மரணம் எஸ்டிபிஐ கட்சிக்கு பேரிழப்பாகும். அன்னாரின் மரணத்தால் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- நெல்லை முபாரக்,
மாநில தலைவர்,
SDPI கட்சி, தமிழ்நாடு.