17/07/2026
சேலம் மாவட்டம், ஒதியத்தூரில் சட்டம்-ஒழுங்கைப் பேணவும், சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் தவெக அரசை தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்!
சேலம் மாவட்டம், கெங்கவல்லிக்கு அருகில் உள்ள ஒதியத்தூர் பகுதியில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறப்பதில் நிலவும் தேவையற்ற எதிர்ப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு நீடிக்கும் பதற்றமான சூழல் மிகுந்த வேதனையளிக்கிறது.
அண்ணல் அம்பேத்கர் சிலை கால் மேல் கால் வைத்து அமர்ந்து இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத அபத்தமான எதிர்ப்புகள், சமூகத்தில் நிலவும் அறியாமையின் வெளிப்பாடே தவிர வேறில்லை.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமானவர் அல்ல; அவர் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் சமத்துவத்திற்கும், நீதிக்கும், உரிமைகளுக்கும் போராடிய உலகப் புகழ்பெற்ற அறிவாசான்.
தொழிலாளர்களின் உரிமைகள், பெண்களின் மேன்மை, பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் என அவர் ஆற்றிய பணிகள் காலத்தால் அழியாதவை.
அண்ணல் சட்ட அமைச்சராக இருந்தபோது, சமூக நீதி சார்ந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்த விதம், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்த வீரம் ஆகியவை அவரை ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அடையாளமாக உயர்த்தியுள்ளது.
அத்தகைய மாமேதையின் சிலையை, தரம் தாழ்ந்த சாதிய நோக்கில் அணுகுவதும், அதனைத் திறக்க எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் சவாலாகும்.
கொள்கை ரீதியாக அண்ணல் அம்பேத்கர் அவர்களை முன்னிறுத்தும் தவெக அரசு, தற்போதைய சமூகப் பதற்றத்தைத் தணித்து, சட்டப்படி சிலையைத் திறக்க உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறியிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.
சட்டம்-ஒழுங்கைப் பேணிக்காப்பதும், சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்வதும் ஒரு மக்களாட்சி அரசின் முதன்மைக் கடமையாகும்.
சாதியவாத சக்திகளின் மிரட்டலுக்கு அடிபணியாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைக் காக்க அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
சேலம், ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை எவ்விதத் தடையுமின்றி, காவல்துறை பாதுகாப்போடு உடனடியாகத் திறக்க வேண்டும்.
அண்ணல் சிலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றும் சமூக அமைதியைக் குலைக்க முயலும் நபர்கள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றத்தின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிய ரீதியாக மக்களைப் பிரித்தாளும் சக்திகளைக் கட்டுப்படுத்தி, இப்பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, சமூக ஒற்றுமையை நிலைநாட்ட மாவட்ட நிர்வாகம் உரிய அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.
சாதி கடந்த சமத்துவ சமுதாயத்தைப் படைக்க உறுதி பூண்டுள்ள நாம், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலையைத் திறப்பதன் மூலம் சமூக நீதியை உரக்கச் சொல்வோம்.
தவெக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், ஜனநாயகக் கடமையாற்றி அண்ணலின் சிலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுத்து சமூக நீதிக்கு மதிப்பளிக்க வேண்டுமெனத் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்