14/05/2026
நீட் தேர்வை ரத்து செய்திடவும், தேசிய தேர்வு முகமையை கலைக்க கோரியும் இடதுசாரி மாணவர் – இளைஞர் அமைப்புகள் போராட்ட அறைகூவல்!
ஒன்றிய பாஜக அரசாங்கம் 2016-ம் ஆண்டில் இருந்து அனைத்து விதமான மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு முறையினை அறிமுகப்படுத்தியது. மையப்படுத்தப்பட்ட இந்த தேர்வானது ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமானால் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து தனியார் பயிற்சி நிறுவனங்களில் படிக்க வேண்டிய கட்டாய சூழலை அரசாங்கமே ஏற்படுத்தி இருக்கிறது.
முதலில் மருத்துவ படிப்புக்கானதாக மட்டும் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு நாளடைவில் மருத்துவ துறையில் உள்ள அனைத்து படிப்புகளுக்குமானதாக மாற்றப்பட்டது. தற்போதைய சூழலில் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்படிருக்கிற நிலையில், மாநில அளவில் பாரா மெடிக்கல், இளநிலை செவிலியர் போன்ற படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடைமுறைக்குள் கொண்டு வர ஒன்றிய அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
நீட் தேர்வினால் தரமான மாணவர்கள் உருவாவர்கள் என்ற கருத்துக்கள் மறைந்து தனியார் பயிற்சி நிறுவனங்களே நீட் தேர்வினால் பலனடையும் நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது. நீண்ட கால பயிற்சி, பள்ளிக்கல்வியில் முக்கியத்துவம் குறைந்தது, வரைமுறையற்ற பயிற்சி நேரம் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நடக்கும் மனித உரிமை அத்துமீறல்கள் என பல்வேறு விதமான அடக்குமுறைகளை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தின் வாழ்நாள் வருமானத்தையும், சேமிப்பையும் இந்த ஒரு நீட் தேர்வு விழுங்கி கொள்கிறது. இதனால் தனியார் நீட் பயிற்சி நிறுவனங்களின் வருவாய் 30 ஆயிரம் கோடி அளவிற்கு மலைபோல் உயர்ந்திருக்கின்றது. ஒன்றிய அரசாங்கமும், தேர்வு நடத்துகின்ற NTA அமைப்பும் இந்த பிரச்சனைகளை கணக்கில் கொள்ளாமல் பயிற்சி நிறுவனங்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்கின்றன.
நீட் தேர்வு முறையிலேயே இத்தனை பிரச்சனைகளை மாணவர்களும், பெற்றோர்களும் சந்தித்து வரும் நிலையில், தேர்வு நடைபெறுவதிலும் தொடர் வினாத்தாள் கசிவு, தனியார் பயிற்சி நிறுவனங்களின் குறிப்பிட்ட மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைத்த ஏ.கே.ராஜன் கமிட்டி அலசி ஆராய்ந்த நீட் தேர்வினால் நடக்கின்ற அநீதிகளை கோடிட்டு காட்டியிருக்கிறது. முந்தைய அரசும் அதை கருத்தில் கொண்டு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டம் இயற்றியும், பல ஆண்டுகளாக அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதிதாக அமைந்துள்ள அரசு கூடுதல் கவனம் செலுத்தி அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு குளறுபடியால் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்று நீட் தேர்வில் தொடரும் குளறுபடிகளால் இந்த தேர்வு மாணவர்களுக்கு எதிரான தேர்வு என்பதை உறுதிபடுத்தியுள்ளது. ஆகவே மாணவர்களின் மருத்துவ கல்வியை சிதைக்கும் நீட் தேர்வினையும், முறையாக தேர்வு நடத்த இயலாத NTA -வை கலைத்திட கோரியும், மேலும் கடந்த காலங்களை போன்று பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அனைத்து விதமான மருத்துவ படிப்பிற்கும் மாணவர் சேர்க்கையை நடத்திட வலியுறுத்தியும் இடதுசாரி மாணவர் – இளைஞர் ( AISF, AIYF,SFI, DYFI) அமைப்புகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாநிலம் முழுவதும் நடத்தவுள்ளன. தமிழ்நாட்டு கல்வி உரிமையை வென்றெடுக்க மாணவர்கள், இளைஞர்களை அறைகூவி அழைக்கிறோம்.
இந்திய மாணவர் சங்கம் (SFI)
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI)
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF)
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF)