05/02/2026
யுஜிசி சமத்துவ விதி, இல்லப் பணியாளர் வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் அதன் குறுகிய மனப்பான்மையை எதிரொளிக்கின்றன.
யுஜிசி சமத்துவ விதிகள் 2026-க்கு எதிரான பொதுநல வழக்கிலும் பெண் தொழிலாளர் சங்கமும் இதர அமைப்புகளும் தொடர்ந்த இல்லப் பணியாளர் உரிமை சார்ந்த பொதுநல வழக்கிலும் ஜனவரி 29 அன்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், ஒரு குறுகிய, மேட்டிமைவாதப் பார்வையைப் எதிரொளிக்கின்றன. இக்கருத்துகள் குறித்து நாங்கள் எங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறோம்.
யுஜிசி சமத்துவ விதிமுறைகளுக்கு எதிரான வழக்கு
யுஜிசி விதிமுறைகளுக்குத் தடை விதிக்கும்போது. இந்த விதிகளை "தெளிவற்றவை". "தவறாகப் பயன்படுத்தப்படக்கூடியவை" என்று நீதிமன்றம் விவரித்தது; மேலும், "சாதியற்ற சமூகத்தை அடைவதில் நாம் இதுவரை என்ன சாதித்திருக்கிறோமோ, அதிலிருந்து இப்போது நாம் பின்னோக்கிச் செல்கிறோமா?" என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது என ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி தெரிய வருகிறது.
சாதி, இனப் பாகுபாடு என்பவை வெறும் அருவமான கருத்துகளோ அல்லது வரலாற்று எச்சங்களோ அல்ல. அவை நமது கல்வி நிறுவனங்களிலும் சமூகம் முழுவதிலும் நிலவும் கொடூரமான, அன்றாட நடைமுறை நிகழ்வுகளாகும். "சாதியற்ற சமூகம்” என்ற வெற்றுப் பேச்சு, ரோஹித் வெமுலா அல்லது டாக்டர் பாயல் தட்வியின் நிறுவனப் படுகொலைகளுக்கோ, அல்லது ஏஞ்சல் சக்மாவின் இனவெறிக் கொலைக்கோ நீதியை வழங்க முடியுமா? சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள், அல்லது அத்தகைய போராட்டங்களின் விளைவாகப் பிறந்த, சாதிய இனப் பாகுபாடுகளுக்கு எதிரான குரல்களை வலுப்படுத்தும் சட்ட நடவடிக்கைகள் நாட்டைப் பின்னோக்கித் தள்ளுகிறது என்று தலைமை நீதிபதி ஏன் கருதுகிறார்? உண்மையில், பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் தொடர்பான புகார்கள் 2019 முதல் 2024 வரை 118% அதிகரித்துள்ளன என்பதை பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தரவுகளே காட்டுகின்றன. சாதி அடிப்படையிலான இந்த வன்முறை நிகழ்வுகள், சாதிய சமூக கட்டமைப்பின் விளைவுகளாகும். இந்த சாதிய சமூக அமைப்பு முறை, நிறுவனங்கள் மற்றும் அரசின் உடந்தையுடன் நிலைநிறுத்தப்படுகிறது. நிறுவனப் படுகொலைகளுக்குப் பலியான ரோஹித் வெமுலா, டாக்டர் பாயல் தட்வி ஆகியோரின் தாய்மார்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கிற்குப் பதிலளிக்கும் விதமாக, தாமதமாக வந்தவை தான், இந்த யுஜிசி சமத்துவ விதிகளாகும். இந்த விதிகள் போதுமானவையல்ல; மேலும் வலுவற்றவை, என்றபோதிலும் கூட, வரவேற்கத்தக்க முன்னெடுப்பேயாகும்.
இந்தத் தடையாணையானது பார்ப்பனிய அழுத்தத்திற்கு அடிபணிவது என்று நாங்கள் கருதுகிறோம். வரலாற்று ரீதியாக, ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிரான ஒவ்வொரு சட்டமும் ஆதிக்க வர்க்கத்தினரின் பிற்போக்குத்தனமான, வெறித்தனமான எதிர்வினைகளையே எப்போதும் எதிர்கொண்டுள்ளன. இத்தகைய சந்தர்ப்பங்களில், ஆதிக்க வர்க்கத்தினர் தங்கள் சமூக சலுகைகளையும் நிறுவன தண்டனையின்மையையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, சமத்துவ நடவடிக்கைகளைத் தங்களுக்கு எதிரான தனிப்பட்ட பாதிப்புகளாகத் திரித்துக் கூறுகின்றனர். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த நடவடிக்கையைத் தடுக்கும் நோக்கில் சாதிய வெறிக்கூச்சலைக் கிளப்பும் எந்தவொரு முயற்சியையும் நிராகரிக்கவும் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிற்கவும் சமூகத்தின் அனைத்துப் முற்போக்கு பிரிவினருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற அரசமைப்புச் சட்டத்தின் தொலைநோக்குப் பார்வைக்காகக் குரல் கொடுப்போம்!
இல்லப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்களைக் கோரும் பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களும் அதே அளவு கவலையளிக்கின்றன. ஊடகத் தகவல்களின்படி, தொழில் வளர்ச்சிக்குத் தொழிற்சங்கங்கள் தடையாக இருப்பதாக நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளதுடன், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது வேலைக்கு ஆளெடுப்பதை பாதிக்கும் என்றும் சிரமங்களை ஏற்படுத்தும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது. பெரும்பாலான ஆலை மூடல்களுக்குத் தொழிற்சங்கங்களோ அல்லது தொழிலாளர்களின் போராட்டங்களோ காரணமல்ல; மாறாக, நிர்வாகச் சீர்கேடும் திட்டமிட்ட நிதித் மடைமாற்றமுமே காரணம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருந்தபோதிலும், தொழிலாளர் விரோத குழுக்களின் எதிர்ப் பரப்புரையையும் தப்பெண்ணங்களையும் தலைமை நீதிபதி ஊதிப் பெரிதாக்குவதைச் செய்துள்ளார்.
இக்கருத்துகள் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களையும் தியாகங்களையும் சிறுமைப்படுத்துவதோடு. அவற்றை அழித்தொழிக்கவும் முயல்கின்றன. எட்டு மணி நேர வேலை நாள், குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, அடிப்படைத் தொழிலாளர் பாதுகாப்புகள் ஆகியவை தொழிலாளரின். தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமே அடையப்பட்டன. இந்தப் போராட்டங்கள் இல்லாவிட்டால், அடிமைத்தனமும் கொத்தடிமை முறையுமே சமூக ஒழுங்காகத் தொடர்ந்திருக்கும்.
தொழிற்சங்கங்களைப் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகப் கருதி புறக்கணிப்பது. தொழிலாளர் பாதுகாப்பு என்பது தடை அல்ல, மாறாக நியாயமான, சமத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் என்ற அடிப்படை உண்மையை மறுப்பதாகும்.
மத்தியக் கமிட்டி
சிபிஐ(எம்எல்) லிபரேசன்.