06/04/2025
மதுரை அருகே ராஜராஜ சோழன் காலத்து அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!
INSCRIPTION FOUND IN SOMAGIRI HILLS
மதுரை: கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜ சோழனின் அரிய வகை கல்வெட்டு மதுரை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. சோமகிரி என்ற மலையின் உச்சிக்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜராஜ சோழன் பாண்டிய நாட்டை கி.பி 988ஆம் ஆண்டில் வெற்றி கண்டான். அன்றிலிருந்து மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை (கி.பி 1218) பாண்டியநாடு சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. யானைமலை யோக நரசிங்க பெருமாள் கோயிலில் இருக்கும் பாறையில் கி.பி 940ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் பாராந்தக சோழன் கல்வெட்டு, திருவாதவூர் மடைத் தூணில் கி.பி 1195ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு, பனங்காடியில் கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்களால் எடுப்பிக்கப்பட்ட விஷ்ணு கோயில்.
மேலும், ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோயிலில் முதலாம் இராசராச சோழன், முதலாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டுகள், மேலத் திருமணிக்கம் சிவன் கோயிலில் கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் இராஜேந்திரனின் மெய்க் கீர்த்தி கல்வெட்டும், உறப்பனூர் கண்மாய் கலுங்கில் முதலாம் ராஜராஜ சோழனின் மெய்க் கீர்த்தி கொண்ட வட்டெழுத்து கல்வெட்டு, திருமோகூர் காளமேக பெருமாள் கோயில் தெப்பக்குளம் மைய மண்டபத்தில் முதலாம் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தி கல்வெட்டுகளும் மதுரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கல்வெட்டு:
இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் மேலும் ஒரு சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு ஊராட்சியில் அமைந்துள்ள சோமகிரி மலையின் உச்சியில் இராஜராஜ சோழன் கல்வெட்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த தமிழ்தாசன் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவுச்செல்வம் ஆகியோர் தங்களது களப்பயணத்தின் போது கண்டறிந்துள்ளனர். கண்மாய்ப்பட்டியைச் சேர்ந்த பாலா இந்த கல்வெட்டை கண்டறிய உதவியுள்ளார்.
இக்கல்வெட்டில்
"ராஜராஜ மும்முடிச்சோழனின் படைத்தலைவன் வீரநாராணப்பல்லவரையன் என்பவன் குறிப்பிடப்படுகிறான். அவன் படை எடுத்து வெற்றி கொண்ட மலையப்ப சம்பு என்பவன் சோமகிரி மலையில் உள்ள கல் படிக்கட்டுகளை வெட்டுவித்தான்"
என்ற செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. கி.பி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு மதுரை பகுதியில் கிடைக்கும் ராஜராஜ சோழனின் அரிதான கல்வெட்டாகும்.
முதலாம் ராஜராஜனுக்கு மும்முடிச்சோழன் என்ற பட்டப்பெயர் உண்டு. அப்பெயரோடு சேர்த்து இங்கு ராஜராஜன் குறிப்பிடப்படுகிறான். பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் ரா.உதயகுமார் மற்றும் தி.முத்துப்பாண்டி ஆகியோர் இக்கல்வெட்டை மைப்படி எடுத்தனர்.
அப்போது, அவர்களுடன் மேலவளவு கோபால், சிவன், நித்தின் ஆகியோர் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த ஆய்வு மையத்தின் செயலர் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் இக்கல்வெட்டைப் படித்துப் பொருள் கூறியுள்ளார்.