10/07/2021
இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பப்பரப்புளி மரத்தை மீண்டும் நட - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மெகா அமைப்பு வேண்டுகோள்!
👇👇👇👇👇👇👇👇👇
பப்பரப்புளி, பெருக்க மரம், பெருக மரம், பொந்தன்புளி மரம், யானை மரம், ஆனைப்புளி மரம், என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் பாவோபாப் (BAOBAB) என்பது அடன்சோனியா (Adansonia) எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த மரம் வகை; இந்திய துணைக்கண்டத்திற்கு , அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு, இலங்கை கடற்கரைகளுடன் ஈராயிரமாண்டுகளாக வணிகம் புரிந்து வந்த (இஸ்லாத்திற்கு முந்திய) அரபியர்களால் கொண்டு வரப்பட்டது.
காயல்பட்டினத்தில் அப்படியான ஒரு பப்பரப்புளி மரம் நிற்பதை இரண்டு வருடங்களுக்கு (20-7-2019) முன்பு NEW INDIAN EXPRESS நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
அரபுகள் உள்ளிட்ட பல நாட்டு வணிகர்களின் வணிகத்தலமாகவும் துறைமுகமாகவும் விளங்கிய காயல்பட்டினத்தின் அன்றைய பிரதான சாலைப் போக்குவரத்து பப்பரப்புளி வழியாகத்தான் நடை பெற்று வந்துள்ளது.
இந்த பப்பரப்புளி மரத்தையொட்டி, சிறீ பெருமரத்தடி இசக்கியம்மன் கோயில் - பின்னர் உருவாகி, இன்றளவும் அப்பகுதி மக்களால் - பயன்படுத்தப்பட்டு வருகிறது. வருடத்திற்கொருமுறை ஜூலை மாதம் மட்டுமே பூத்துக்காய்க்கும் இம்மரத்தின் எல்லாக்கிளைகளிலும் மருத்துவகுணம் உண்டு என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த மரத்தின் பெயரால்தான் இந்த பகுதியே இன்றளவும் அழைக்கப்படுகின்றது. வருவாய்த்துறை ஆவணங்களிலும் அவ்வாறே பதியப்பெற்றுள்ளது.
பல நூறு ஆண்டுகள் பழமையான, இந்திய வெளி நாட்டு வணிகத்திற்கு சான்றாக விளங்கிய இம்மரம் - 2020 ஆண்டின் இறுதியில் அழிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகரில் நிற்கும் பப்பரப்புளி மரத்தின் கிளைகளை கொண்டு வந்து மீண்டும் காயல்பட்டினத்தில் இம்மரம் நின்ற அதே பப்பரப்புளி இடத்தில் நடுவதோடு இம்மரம் நின்ற இடத்தில் ஒரு நினைவு கல்வெட்டை நாட்டவும் பப்பரப்புளி வளாகத்தை வேலியிட்டு பாதுகாக்கும் ஏற்பாடுகளை செய்திடவும் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் IAS இடம் நேற்று மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.