27/01/2025
SDPI கட்சியின் வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு பேனர்கள் மீது ஃபாசிச காவிக் கூட்டத்தினர் அராஜகம் : தமிழக காவல்துறை இனியும் வேடிக்கை பார்ப்பது தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும்
தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் கண்டனம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
SDPI கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் KTM. அப்துல் அஜீஸ் அவர்கள் வெளியிடும் அறிக்கை :
எதிர்வரும் பிப்ரவரி 02ஆம் தேதி தஞ்சை மாநகரில் SDPI கட்சியின் சார்பில் வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான விளம்பரம் மற்றும் ஏற்பாட்டு பணிகள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கட்சியின் நிர்வாகிகளால் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாநகரின் முக்கிய பகுதிகளில் மாநாட்டு விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தஞ்சை மேம்பாலம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு பேனர்கள் மீது நேற்று இரவு ஃபாசிச காவிக்கூட்டத்தினர் காவிச் சாயத்தைப் பூசியும், காவிக் கொடியை நட்டு வைத்தும், இந்து எழுச்சிப் பேரவை என்ற பேனரை அதன்மீது தொங்கவிட்டும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 19 தேதி அன்று கோவையில் நடைபெற்ற வக்ஃப் மாநாட்டின் திடலுக்கு பிலால் ஹாஜியார் பெயர் சூட்டப்பட்டதற்கு எதிராக பொதுவெளியில் வன்மமாக பேசி கோவையில் மதப் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்த சங்கிக் கூட்டத்தின் தொடர் முயற்சியாக, தஞ்சை மாநாட்டு பேனர்களை சில்லறைத் தனமாக சேதப்படுத்துவதன் மூலம் தஞ்சைத் தரணியிலும் மதப் பிரச்சினைகளை உருவாக்க சங் பரிவார்கள் திட்டமிட்டுள்ளது தெரிய வருகிறது.
எனவே, SDPI கட்சியின் வக்ஃப் உரிமை மீட்பு மாநாட்டு பேனர்களை சேதப்படுத்தி, சமூக பதற்றங்களை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் சமூகவிரோதிகளை கைது செய்து தஞ்சைத் தரணியில் அமைதியை உறுதி செய்ய தமிழக காவல்துறையும், தமிழக அரசும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
-KTM. அப்துல் அஜீஸ்,
தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர்,
SDPI கட்சி
21/01/2025