22/10/2021
தெரிந்ததும் தெரியாததும்
-:-
பதிப்பு எண்: பதினொன்று தேதி: 22.10.2021
பொதுவாக நீதிமன்றங்களில் சொத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு என்ன காரணம்?
(1) வாரிசுகள் மூலம் வரும் பிரச்சனைகள்:-
பழங்காலம் தொட்டு 1987வரை, நம் முன்னோர்கள் பெரும்பாலும் பூர்வீக சொத்துக்களின் மீது எடுக்கக்கூடிய ஒரு நிலையற்ற/உறுதியற்ற, குழப்பமான சூழ்நிலைகளின்வழி, நடந்துகொண்டு வந்திருப்பதை நாம் கண்கூடாக பார்த்தும், கேட்டும் வருகின்றோம். பெரும்பாலும் சட்டத்திற்கும் எதார்த்தத்திற்கும் இடையில் இருக்கும் ஒரு குழப்பமான சூழ்நிலையில்தான் நம் முன்னோர்கள் இருந்து வந்திருக்கின்றார்கள் என்பதும் உண்மைதான்.
மேலும் சட்ட அறியாமையும் இதற்கு ஒரு அடிப்படைக்காரணமாகவும் இருந்து வந்திருக்கின்றது. ஒரு குடும்பத்தில் பிறந்த ஆண் - பெண் இருபால் குழந்தைகளில், ஆண் என்பவர் ஆளப்பிறந்தவர் என்றும், குடும்ப பொறுப்புக்கள் அனைத்திற்கும் ஆண்களே ஆதாரம் என்ற நிலையும் இருந்து வந்ததோடு பெண் என்பவர் மாற்றுக் குடும்பத்திற்குச் செல்பவர் என்றும், பாகுபாடு செய்யப்பட்டு, அவர்களுக்குக் கல்விக்காக செலவிடுவதைவிட திருமணத்திற்காக செலவிட்டு மறுவீடு அனுப்புவதிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கின்றார்கள்.
அத்துடன், பெண் என்பவள் மறுவீடு சென்று விட்டால், அவளுடைய பிறந்த வீட்டுச்சொத்து மறுவீட்டுச்சொத்தாக மாறிவிடும் என்ற எண்ணமும் இருந்து வந்திருக்கின்றது. எனவே, பெண்களின் திருமணத்திற்குப்பின் மறுவீடு சென்றுவிட்டால், அவர்கள் பிறந்த வீட்டின் சொத்துரிமையினையும் இழந்துவிட்டதாகவே கருதி வந்தார்கள். மேலும், ஒரு குடும்பத்தில் பிறந்த ஆண் - பெண் இருபால் குழந்தைகளில், பெண்களுக்கு அந்த குடும்பத்தில் வாழ்வுரிமை கொடுக்கப்பட்டதே தவிர, பிறப்புரிமை மற்றும் சொத்துரிமை வழங்கப்படாமலிருந்தது. பிறந்த குடும்பத்தில் இவர்கள் “CO-PARCENAR” ஆகக்கருதப்படுவதே இல்லை என்ற நிலை இருந்து வந்திருக்கின்றது. 1987க்குப் பிறகு இப்படிப்பட்ட நிலை சட்டப்படி மாறியிருந்தாலும், காலப்போக்கில் பல குடும்பங்களில் பூர்வீக சொத்துக்களில் ஆண்களுக்கிணையான உரிமை பெண்களுக்கு இன்றுவரை கொடுக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் பணமா - பாசமா என்று பார்க்கும்போது, பாசத்தைவிட பணத்திற்கே அதிக மதிப்பு கொடுக்கப்பட்டு வந்திருக்கின்ற நிலையினைத்தான் பல குடும்பங்களில் நாம் பார்க்க முடிகின்றது. தற்போது இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டிருந்தாலும் மக்கள் இன்னும் முழுமையாக மாறவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட காரணத்தினால்தான், இன்றைக்கும் ஏற்படக்கூடிய சொத்துப்பிரச்னைகள் பெரும்பாலும் குடும்ப உறவுகளுக்கிடையில் நிகழக்கூடிவையாக இருப்பது ஒரு வருத்தமளிக்கும் செயலாக இருக்கின்றது.
பல கட்ட போராட்டத்திற்குப்பின்னர், இந்து வாரிசுரிமைத் திருத்தச்சட்டம் 39/2005 (09.09.2005) கொண்டு வரப்பட்டு அதன்படி, இந்து வாரிசுரிமைச்சட்டம் 1956 பிரிவு (6)இல், சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அத்துடன், கடந்த (DIARY NO.32601 OF 2018) 2018இல் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்ற ஆணைப்படியும், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் பிறப்புரிமை மற்றும் சொத்துரிமை வழங்கப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எந்த அளவிற்கு பூர்வீக சொத்துக்களில் பெண்களுக்கு உரிமை உள்ளதோ, அதே அளவிற்கு அந்த குடும்பத்தின் கடன்களை பைசல் செய்வதிலும் பெண்களுக்கு கடமை உள்ளது என்பதையும், பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாகப்பிரிவினை செய்யும்போது திருமணமான பெண்களுக்குத் திருமணத்தின்போது செலவிட்ட செலவினங்ககளையும் ஆண்களுக்குப் படிப்பிற்காக செலவிட்ட செலவினங்ககளையும், கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்பதும் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது.
இருப்பினும், பல இடங்களில் இன்னும் பழைய நிலையே நடைமுறையில் இருந்து வருவதும் சொத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு அடித்தளமாக அமைந்துவிடுகிறது. இதற்குச் சட்டத்தின்பால் மக்களுக்கான அடிப்படைப் புரிதல் இல்லாத காரணம் என்பது ஒருபுறம் இருந்தாலும், பெண் வாரிசுகளுக்குச் சொத்துக் கொடுப்பதில் ஆண் வாரிசுகளுக்கு மனசு இல்லாத காரணத்தினாலும் சொத்து வழக்குகள் தற்சமயம் பெரிதளவில் அதிகரித்து வருகின்றன.
மேற்கண்டவற்றையெல்லாம், கருத்தில் கொள்ளாமல், குடும்பத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனநிலை இல்லாமல் இருப்பதால்தான், குடும்பத்தில் சொத்து வழக்குகள் அதிரித்துக்கொண்டே வருகின்றன என்பதும் நிதர்சனமான உண்மையே. எனவே மேற்கண்ட சூழ்நிலையினை மக்கள் புரிந்துகொண்டால், தேவையற்ற வழக்குகள் தவிர்க்கப்பட்டு பொருள்விரயம் காலவிரயம் மனஉளைச்சல் ஆகியவற்றிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது.
தொடரும் . . . . . . .
குமர. ராசப்பா
பணி நிறைவுபெற்ற சார் பதிவாளர்
காரைக்கால் – 609 602.
Cell: 9750998035