16/12/2024
தந்தை பெரியார் பேரன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் தலைமகன், தமிழக காங்கிரஸ் தொண்டர்களால் தன்மானத் தலைவர் என்று அன்போடு அழைக்கப்பட்ட எனது தந்தை திரு. EVKS இளங்கோவன் அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 14-12-2024 சனிக்கிழமை காலை நம்மை விட்டு பிரிந்தார்.
மத்திய அமைச்சர், மூன்று முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் என்று பல்வேறு பொறுப்புகளில் தனித்துவத்தோடு செயல்பட்டு, மக்களின் பிரச்னைகளை தனக்கே உரிய பாணியில் பளிச்சென எடுத்துரைத்த அவரது அரசியல் பயணத்தை தமிழகம் நன்கு அறியும்.
எனது தந்தையார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவமனைக்கே அமைச்சர் பெருமக்களுடன் நேரில் வந்து அவரது உடல்நிலையை அக்கறையுடன் கேட்டறிந்து, தொடர்ந்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து மேற்கொண்டதோடு,
அவர் இயற்கை எய்திய சில மணி நேரத்திலேயே எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து எங்களுக்கு ஆறுதல் வழங்கினார். இறுதி சடங்கு நடைபெற்ற மறுநாளும் எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து ஆறுதல் கூறியதோடு இறுதி சடங்கு ஏற்பாடுகளை எங்கள் குடும்பத்தின் மூத்த அண்ணனாய் கேட்டறிந்து, எனது தந்தையின் உடல், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற அரசு உத்தரவையும் பிறப்பித்து எனது தந்தைக்கு பெருமை சேர்த்தார்.
திராவிட பாரம்பர்யமும், தேசிய சிந்தனையும் கொண்ட எங்கள் குடும்பம் அதே வழியில் என்றும் பயணிக்கும்.
துயரமான இந்த வேளையில் எங்களுக்கு துணை நின்ற தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை அவர்களுக்கும், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அவர்களுக்கும், தொலைபேசி வாயிலாக எங்களுக்கு ஆறுதல் கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், திமுக, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும், மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொது மக்களுக்கும், காவல்துறை மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் எங்களுக்கு நேரிலும், அலைபேசி வாயிலாகவும் ஆறுதல் வழங்கி, இறுதி அஞ்சலி நிகழ்வில் எங்களோடு தோள் நின்ற அனைவருக்கும் என் தாயார் வரலட்சுமி இளங்கோவன் அவர்கள் சார்பிலும், தந்தை பெரியார் குடும்பம் சார்பிலும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
இ. சஞ்சய் சம்பத்