18/02/2026
தமிழ்நாட்டின் தற்சார்பு பொருளாதார வளர்ச்சியைப் பறைசாற்றும் இடைக்கால பட்ஜெட்! - எஸ்டிபிஐ
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட், மாநிலத்தின் பொருளாதார இறையாண்மையையும் தற்சார்பு வளர்ச்சியையும் பறைசாற்றும் நிதிநிலை பிரகடனமாக அமைந்துள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய முறையான நிதிப் பகிர்வு, ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் பேரிடர் நிவாரணத் தொகையில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போட்டு வரும் வஞ்சகமான சூழலிலும், தமிழக அரசு சற்றும் தளர்ந்துவிடாமல் தனது சொந்த வரி வருவாயையும் வளங்களையும் மட்டுமே நம்பி இந்த பட்ஜெட்டை மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது பாராட்டுக்குரியது.
நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாநிலத்தின் வளர்ச்சியைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்லும் இந்த அறிக்கை, ஒரு தன்னாட்சி மிக்க மாநிலத்தின் துணிச்சலான பொருளாதார மேலாண்மைக்குச் சான்றாகும்.
இந்த பட்ஜெட்டில் கல்வி மற்றும் இளைஞர் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்புகள் தமிழகத்தின் வருங்காலத்தின் மீது நம்பிக்கை அளிக்கின்றன. குறிப்பாக, கல்வித் துறைக்காக சுமார் ரூ. 48,534 கோடி ஒதுக்கியிருப்பது மிகப்பெரிய முதலீடாகும். காலை உணவுத் திட்டம் முதல் 'நான் முதல்வன்' திட்டம் வரை அனைத்தும் ஒன்றிய அரசின் போதிய பங்களிப்பு இல்லாமலேயே, மாநிலத்தின் தற்சார்பு வலிமையால் முன்னெடுக்கப்படுவது இந்த அரசின் நிர்வாகத் திறனை உறுதிப்படுத்துகிறது. இத்தகைய திட்டங்கள் சமூக மாற்றத்திற்கான வலுவான அடித்தளமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, வரலாற்றிலேயே முதன்முறையாக டெல்டா அல்லாத மாவட்டங்களில் கார், குறுவை மற்றும் சொர்ணவாரிப் பருவ நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக ரூ. 115 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதை எஸ்டிபிஐ கட்சி மனதார வரவேற்கிறது. இது டெல்டா பகுதிக்கு இணையாக மற்ற மாவட்ட விவசாயிகளையும் அரவணைத்துச் செல்லும் ஒரு சமத்துவமான அணுகுமுறையாகும். இத்திட்டம் பாசன நீர் வசதியுள்ள அனைத்துப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.
மேலும், 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கிய புதிய செமிகண்டக்டர் கொள்கை, 12 மாவட்டங்களில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பூங்காக்கள் போன்ற திட்டங்கள் தமிழகத்தை தொழில் மற்றும் சமூக மேம்பாட்டுப் பாதையில் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்கின்றன. ஒன்றிய அரசின் நிதிப் புறக்கணிப்புகளைத் தாண்டி, தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும் இந்த இடைக்கால பட்ஜெட், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் ஒரு மக்களுக்கான வழிகாட்டி வரைபடமாகத் திகழ்கிறது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.