20/11/2020
ஊடகங்களுக்கான செய்தி. 20.11.2020
கடலூர் மாவட்டத்தில் ஒரு சாத்தான்குளம் ....
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன், நெய்வேலி காவல் துறையினரால் விசாரணைக்கு அக்டோபர் 28ம் தேதி அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அவர்மீது திருட்டு வழக்குப் போடப்பட்டு, கைது செய்யப்பட்டு விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். நவம்பர் 2ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் நவம்பர் 4ம் தேதி மரணமடைந்ததாக அவரது குடும்பத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, அவரது மனைவியை வரவழைத்து, அவரது கணவரை விடுவிக்க வேண்டுமானால், 4 லட்சம் பணம் கேட்டுள்ளார்கள். கொடுக்கவில்லை எனில் " வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்போம் என்று மிரட்டியுள்ளனர். 30ம் தேதி காவல் நிலையத்துக்கு அவரை வரச்செய்து வெள்ளை காகிதங்களில் கையெழுத்து வாங்கி ரூ.5000/-ம் பெற்றுக் கொண்டனர். அவரது கணவர் தன்னை சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதை கதறியபடி கூறியுள்ளார்.
காவல்துறையினரால் அடித்துச் சித்ரவதை செய்யப்பட்டதால்தான் செல்வமுருகன் மரணமடைந்துள்ளதாகவும், சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என்றும் நாளுக்கு நாள் கோரிக்கை வலுத்து வருகிறது.
முறையான உத்தரவுகளோடு, குடும்பத்தாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லலாம்; சட்டத்திற்கு உள்பட்டு விசாரணை நடத்தலாம்; ஆனால் சட்டத்திற்குப் புறம்பாக அடிப்பது, உதைப்பது, லத்தியை நுழைப்பது கண்டனத்துக்குரியது - சுயஆட்சி இந்தியா, தமிழ்நாடு.
சாத்தான்குளம் காவல்துறை கட்டுப்பாட்டில் தந்தை மகன், சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி, தற்போது கடலூர் என நாளுக்கு நாள் இதுபோன்ற உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
எதிர் கட்சிகளும், மனித உரிமை ஆர்வலர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் காவல்துறையின் வன்முறை செயல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், மீண்டும் மீண்டும் நிகழ்கின்ற காவல்துறை மரணங்கள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதோடு, தமிழக அரசின்மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் இழக்க செய்கிறது. காவல்நிலையங்கள் சித்திரவதை கூடங்களாக காட்சி தருகின்றன. காவல்துறையின் கட்டுப்பாட்டில் நிகழ்ந்த செல்வமுருகன் மரணத்திற்கு காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்.
காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் காவல்துறை ஒரு வன்முறை களமாக மாறிக்கொண்டிருப்பதைப் பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதிக்கிறார். காவல்துறைக்கு ஆதரவான இந்த மௌனமே பல
உயிர்கள் காவல்துறையின் கட்டற்ற சித்ரவதைகளால் ஏற்படும் பலிகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இனியும் இதுபோன்ற காவல்துறை கொலைகள் நடக்காமல் இருக்க உடனடியாக முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுயஆட்சி இந்தியா கட்சி வலியுறுத்துகிறது.
••• விசாரணை என்று அழைத்துச் சென்று, பின் வீட்டிற்கும் அனுப்பாமல், முதல் தகவல் அறிக்கையும் போடாமல் சித்திரவதை செய்து, கொலை செய்த காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
••• இவ்வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி, முதல் தகவல் அறிக்கையை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும்.
••• இதில் தொடர்புடைய நெய்வேலி டவுன்ஷிப் காவல்துறையினர் உடனடியாக கைது செய்யப்பட்டு, இடைக்காலநீக்கம் செய்யப்பட வேண்டும். துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்..
••• உயிரிழந்த செல்வ முருகனின் குடும்பத்திற்கு முதல்கட்ட இழப்பீடு தொகையாக ரூ.10 லட்சம்
உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
••• செல்வ முருகன் மனைவி பிரேமா அவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட வேண்டும்.
மேற்கொண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு தமிழக அரசை சுயாட்சி இந்தியா வலியுறுத்துகிறது.
ஊடகப் பிரிவு
சுயஆட்சி இந்தியா
தமிழ்நாடு.
Image Source : https://www.thenewstuff.in/sites/default/files/styles/facebook_og_image/public/2020-11/LockupDeath.jpg?h=8a2321cf&itok=0SsdpefT