07/08/2018
திமுக தலைவர் கலைஞர் மறைவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
திருக்குவளை கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த அவர், தன்னுடைய அயராத உழைப்பின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் மிக உயர்ந்த இடத்தை அடைந்தவர். இந்தித் திணிப்புக்கு எதிராக பொதுவாழ்க்கையை துவக்கிய அவர் தமிழகத்தில் மட்டுமின்றி, அகில இந்திய அரசியலிலும் முத்திரைப் பதித்தவர்.
ஐந்து முறை தமிழக முதலமைச்சராகவும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர். தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அரை நூற்றாண்டு காலம் தலைவராகவும் பணியாற்றியவர்.
தனது ஆட்சிக் காலத்தில் அரசுப் பேருந்துகளை நாட்டுடமையாக்கியது, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி இடஒதுக்கீட்டை உருவாக்கியது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் உருவாக்கியது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, சமத்துவபுரம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் வள்ளுவர் சிலை என அவரது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களும், சாதனைகளும் எண்ணிலடங்கா.
அருந்ததிய மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றியவர்.
அரசியல், கலை, இலக்கியம், நாடகம், திரைத்துறை, ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆற்றல் மிக்கவராக - பன்முக திறமைக் கொண்டவராக திகழ்ந்தவர். அவசர நிலை காலத்தின் போது, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க அவர் காட்டிய உறுதி மறக்க முடியாததாகும். மாநில உரிமைகளுக்கு ராஜமன்னார் குழு அமைத்து அக்குழுவின் முடிவுகளை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றியவர். இக்கோரிக்கைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஒத்தக் கருத்துள்ள கட்சிகளேடு இணைந்து போராடியவர்.
தலைசிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், கலைத்துறை வித்தகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் திமுக செயல் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்