31/07/2026
பத்திரிகை அறிக்கை
குறுவை பருவ பயிர்க் காப்பீடு செய்ய காலநீட்டிப்பு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
எல் நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு பருவமழை மற்றும் நீர்வரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, நாகப்கபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில், குறுவை பருவ பயிர்க் காப்பீட்டிற்கான பிரீமியம் செலுத்துவதற்கான காலக்கெடு இன்று நிறைவடைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல இடங்களில் விதைப்பு தாமதம், ஆவணங்கள் பெறுவதில் சிக்கல், இணையதள தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளிட்ட காரணங்களால் ஏராளமான விவசாயிகள் இன்னும் பயிர்க் காப்பீடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
இயற்கை பேரிடர்கள், பருவநிலை மாற்றம், எல் நினோ தாக்கம் போன்றவற்றால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் முக்கியமான பாதுகாப்பு கவசமே பயிர்க் காப்பீடு ஆகும். எனவே, எந்த விவசாயியும் இந்தத் திட்டத்தின் பயனை இழக்காத வகையில், குறுவை பருவ பயிர்க் காப்பீட்டிற்கான காலக்கெடுவை குறைந்தபட்சம் 15 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
மேலும், அனைத்து விவசாயிகளும் எளிதில் பயிர்க் காப்பீடு செய்யும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தவும், வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும், தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் முக்கியமான பொறுப்பாகும். எனவே, இவ்விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று காலநீட்டிப்பு வழங்க வேண்டும்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
31/07/2026
#நாகைசட்டமன்றஉறுப்பினர்
#ஜவாஹிருல்லாஎம்எல்ஏ
#டெல்டா
#விவசாயம்
News7Tamil
News18 Tamil Nadu