20/08/2018
#ஜின்கள் யார்? #5
முடிவுரை:
-------------------
ஜின்களை வைத்து ஏமாற்று வித்தை செய்வோர் சிலர் எழுதியும், செயல்முறையில் நடத்தியும் வரும் சில தகவல்கள்.
ஜின்களால் மனிதர் உருவில் வர முடியும். மேலும் கருப்பு நாய்,யானை,பாம்பு போன்ற உருவில் வரும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது. மாலை இருள் சூழும் நேரங்களில் குழந்தைகளை வெளியில் விட வேண்டாம், அது ஜின்கள் வெளிவரும் நேரம் என நபி (ஸல்) அவர்கள் கூறியது கவனிக்கத்தக்கது. காத்து,கருப்பு அடித்துவிடும் என நமது கிராமங்களில் கூறுவது அனைவரும் அறிந்ததே! ஆனால் இவை அனைத்துமே ஆதாரமற்றவை... ஜின்களை நாங்கள் வசப்படுத்துகிறோம் என கூறி வயிறு வளர்க்கும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் கட்டவிழ்த்த பொய்கள் ஆகும்.
இருள் சூழ்ந்த இரவு,கருப்பு நாய்,யானை,பன்றி போன்ற கருப்பு நிற பிராணி உருவங்களை ஜின்கள் தேர்வு செய்யக்காரணம் என்ன? நெருப்பு வெப்பத்தால் படைக்கப்பட்ட ஜின்கள்
தங்களை மறைத்துக்கொள்வதற்கு (Camouflage) கருப்பு நிறத்தை தேர்வு செய்வது அறிவியல் ரீதியாக சரியானதே. சூரிய ஒளியில் உள்ள வெப்ப அலைகளை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கருப்பு நிறத்துக்கு மட்டுமே உண்டு.
மழைக் காலத்தில் கருப்புக் குடை பிடிப்பது சரியானது. ஆனால் கோடை காலத்தில் கருப்பு குடைகள் வெப்பத்தை உள்ளிழுக்கும் தன்மை கொண்டதால் வெண்மை நிற குடைகளே சிறந்தது. ஏனெனில் வெண்மை நிறம் சூரிய வெப்பத்தை பிரதிபலித்து திருப்பி மேலே அனுப்பும் தன்மை அனைவரும் அறிந்ததே.
கடும் வெப்பத்தால் படைக்கப்பட்டு, பிளாஸ்மா நிலையில் உள்ள ஜின்கள் உருவம் மாறி வரும்போது வெப்பத்தை இழுக்கும் தன்மை கொண்ட கருப்பு நிற உருவில் தங்களை மறைத்துக் கொள்ளுகின்றனர். மேலும் மற்ற நிறங்களை விட கருப்பு நிறமானது கன பரிமாணங்களையும் மறைக்கும் தன்மை கொண்டது. பொதுவாக பெண்களின் பர்தா துணிகள் கருப்பு நிறத்தில் இருக்கும் காரணமும் இதுவே.
சில சமயம் இரவு நேரங்களில் அமானுஷிய உருவங்களை (பேய்?) பார்ப்பவர்கள் அது கருப்பு நிறத்தில் இருந்ததாகவும் அந்த இடம் சில்லென குளிர்ச்சியுடனோ அல்லது அதிக வெப்பத்துடன் இருந்ததாகவோ குறிப்பிடுவார்கள். காரணம் இதுதான், வெப்ப தன்மையுள்ள ஜின்கள் வெப்பத்தை தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் கருப்பு நிறத்தை (Adaptation) தெரிவு செய்து தங்களை மறைத்து கொள்கின்றன.
ஜின்கள் மின்காந்த அமைப்புடைய (Electromagnetic) உடலைப் பெற்றவை. அவ்விடத்தில் உள்ள வெப்பத்தை அவை கிரகித்துக் கொள்வதால் அவ்விடம் குளிர்ந்து சில்லென்றிருக்கும். தன் உடம்பிலிருந்து அகச்சிவப்பு கதிர்களை (Infra-Red Rays) வெளியிடுவதால் அவ்விடம் திடீரென்று வெப்பமாகும் என அறிவியல் ரீதியாகவும்...அறிவியலை தங்களது பித்தலாட்டங்களுக்கு துணைக்கு அழைத்துக்கொள்வதும் இவர்களது ஹைடெக் மோசடி ஆகும்.
ஜின்களை அழைத்து அதன் உதவிகளை தேடுவோர்...ஏன் இல்லாத ஏழைகளுக்கு இருக்கப்பட்ட சுரண்டல் பேர்வழிகளிடமிருந்து ஒளித்து வைக்கப்பட்டுள்ள பணத்தை எடுத்து கொடுத்து உதவ முன்வரவில்லை.?
மேலைநாடுகளுக்கு போக பாஸ்போர்ட்- விசா இல்லாமல் போய்வர கேட்க முடியவில்லை. இருந்த இடத்தில் இருந்த படியே அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இயலவில்லை.?
ஆக, இது யாராலும் முடியாது. ஜின்களை வசப்படுத்தி மக்களுக்கு சகாயம் செய்வோர் என கூறிக்கொள்வோர் ஏன் அவர்கள் நாட்டின் அதிபராக அல்லது வலிய பெரும் சக்தியாக உருவெடுக்க முடியவில்லை. நம்மில் யாரும் ஜின்களை வசப்படுத்தக்கூடியவராக இருந்தால் முதலில் அதை தானே கேட்போம்.?
அதுபோல ஆவி, பேய், பிசாசுகள் ,பூதங்கள் என அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக கற்பனை செய்துகொள்வோர் ஜின்களையும் அவை நமக்கு தீங்கிழைப்பதாக நம்புகின்றனர். அதுவும் தவறான நம்பிக்கை. ஜின்களால் நமக்கு உயிர்சேதமோ அல்லது வருமான அழிவோ..குடும்ப இழப்போ ஏற்படுத்த வாய்ப்பே இல்லை காரணம் இவற்றிற்கு பாதுகாவலன் அல்லாஹ் ஒருவனே. அவன் அன்றி நமக்கு நன்மை,தீமை நாட யாருமில்லை. ஜின்களால் நமது சுய அறிவில் புகுந்து நம் ஆன்மாவை வழிகெடுக்கும் எண்ணங்களை மட்டுமே போட முடியும்..அவற்றிலிருந்து பாதுகாவல் தேடி விலகிக்கொண்டால் அதுவும் நம்மை நெருங்காது. ஐவேளை தொழுகையில் ஷைத்தானிடமிருந்து நமக்கு பாதுகாவல் உண்டு.
தஜ்ஜாலையும் , யஹ்ஜூஜ் மஹ்ஜூஜ் மக்களை கூட ஜின்கள் என நம்புவோர் உண்டு. தஜ்ஜால் எனும் காபிர், இனி பிறக்கப்போகிறவன் இல்லை. நூஹ் நபிகளாருக்கு பின்பு வந்த எந்த நபியும் தஜ்ஜால் பற்றிய எச்சரிக்கைகளை தம் மக்களுக்கு எடுத்துரைக்காமல் இல்லை. மாநபி முஹம்மது சல் அவர்களும் தஜ்ஜால் பற்றி கூறியுள்ளார்கள். தஜ்ஜால் கிழக்கு திசையில் இருந்து வருவான், தஜ்ஜால் சிரியா, ஏமன், இஸ்ஃபஹான் பகுதியில் உள்ள கடல்புறத்தில் ஒரு குகையில் முழங்காலுக்கு இடையில் தலையை புதைத்து சங்கிலியால் கட்டப்பட்டவனாக இருந்து வருகிறான் என பலதரப்பு ஹதீஸ்கள் கூறப்படுகிறது.
ஆனால் அவற்றில் எது சரி என அறியப்பட முடியவில்லை. தஜ்ஜால் தனக்கான நேரம் வரும்போது கட்டவிழ்க்கப்பட்டு வெளியேறி வருவான் என்றும் அவனது வாழ்க்கை 40 நாட்கள் நீடிக்கும் என்றும் இடைப்பட்ட நாளில் அவன் குருடரை காண செய்வான், வெண்குஷ்டத்தை குணமாக்குவான், தான் அல்லாஹ் என நிரூபிக்க ஒரு வாலிபனை இரண்டாக வெட்டி போட்டு பின் உயிர்ப்பிப்பான் என்றும், அவன் கூறிய போது மழை பொழியும் என்றும், ஆணையிட்ட போது வறண்ட நிலங்கள் பயிர்களை முளைப்பிக்கும் என்றும் ஹதீஸ்களில் வருகிறது.
தஜ்ஜால் வரும் காலத்தை அறிய , பூமி தன் மழைப்பொழிவை நிறுத்திவிடும் , நிலங்கள் பயிர்களற்று செம்பு பூசியது போல் ஆகிவிடும், உணவு பஞ்சத்தால் மக்கள் ஒருவரையொருவர் அடித்து கொலை செய்து கொள்வார்கள், நீரின்றி பூமி பாளையாக மாறிவிடும் அந்த காலமே தஜ்ஜால் வருகையின் காலம்.
அவனிடம் இரண்டு வகையான ஆறுகள் இருக்கும் அதில் ஒன்று நீரும் மற்றொன்று நெருப்புமாகும்...நீருள்ள ஆற்றினை நெருப்பு என்பான், நெருப்புள்ள ஆற்றினை நீர் என்பான், அவனிடம் நீங்கள் இதில் எச்சரிக்கையாக இருங்கள் என்று நபிகளார் கூறியதாக ஹதீஸ் உண்டு.
அவனது வலது கண், பச்சைநிற கண்ணாடி போல அதுநேரம் சுருங்கியும் இருக்கும். சிவந்த தோலுடைய அவனது முடிகள் சுருள் சுருளாக முதுகில் தொங்கும், அவனது நெற்றியில் காபிர் என எழுதப்பட்டிருக்கும், படித்தவர்களும் படிக்காதவர்களும் அதை படிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள். குட்டையாக குண்டனாக, இரு கால்களுக்கிடைய அதிக இடைவெளி உடையவனாக இருப்பான். ஆனால் அவனது உடல் கவர்ச்சி பெண்களை மயக்குவதாக இருக்கும் , எந்தளவிற்கு எனில் வீடுகளில் பெண்களை ஆண்கள் கட்டிப்போடும் அளவிற்கு.
தஜ்ஜாலை பின்பற்றுவோர் பச்சைநிற ஆடை அணிந்துகொள்வார்கள், யூதர்களும் , காபிர்களும், ஷைத்தான் வழிபாட்டாளர்களும் அவனை பின்பற்றுவர்.்40 நாளில் உலகை சுற்றி வந்து குழப்பம் ஏற்படுத்துவான் ஆனால் மக்காஹ்,்மதினா ஆகிய புனித நகரங்களில் அவனால் நுழைய முடியாது, அவன் நுழைய முற்படும்போது வானவர்கள் அவனை வாளால் தடுத்து விரட்டுவார்கள். பிறகு நபி ஈஸா அவர்கள் ஷாம் நகரத்தில் இருந்து இறங்கி வந்து அவனோடு போர் புரிவார்கள் , பிறகு அவன் நபி ஈஸாவால் கொல்லப்படுவான். என்கிற பெரிய தகவல்கள் நமக்கு கிடைத்தாலும் இதற்கான ஹதீஸ் குறிப்புகள் சரியானதா என தெளிவு செய்யப்படவில்லை.
யஹ்ஜூஜ் மஹ்ஜூஜ் மக்கள் பூமியில் அநியாயம் செய்து திரிந்த காரணத்தால், மன்னர் துல்கர்ணைன் அவர்கள் ஒரு மலையிடுக்கில் வைத்து செம்பினை காய்ச்சி ஊற்றி அவர்களை வெளியே வராதவாறு மூடிவிட்டார்கள் , எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் தினம் தினம் இரவுப்பொழுதில் வந்து அந்த தடையை உடைக்க சுரண்டுவார்களாம். அது முடியாமல் போகவே அதன் தலைவன், இன்ஷா அல்லாஹ் நாம் நாளை வருவோம் என கூறி சூரியன் உதித்தவுடன் அழைத்துக்கொண்டு போய் மறைந்துவிடுவார்களாம். யூக முடிவு நாளின் போது அவர்கள் வெளிவருவார்கள் என நபிகளாரின் ஹதீஸ் குறிப்புகள் உள்ளன.அவர்கள் மனிதக்கண்களில் இருந்து மறைந்து வாழ்வதால் அநேகர் அவர்களையும் ஜின்கள் என்கின்றனர்.
ஆகவே அவர்களும் ஜின்கள் அல்ல. ஜின்கள் பற்றிய மேலதிக தகவல்களை கண்ட பிறகும் ஜின்களை காரியங்களுக்கு வசப்படுத்தலாம், ஜின்கள் நினைத்து பயப்படுவது ஆகியவை தேவையற்றது. இறைவனுடைய அருளை மீறி அந்த படைப்பால் மனிதருக்கு எந்த கேடும் இல்லை.
முற்றும்.