25/08/2026
தவெக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கிடுக
இலவச சிலிண்டர் பெறுபவதற்கு வருமான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்திடுக.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்துள்ள ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது.
ஆனால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தற்போது ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 6 சிலிண்டர்களையும் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருமான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சம் என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான வரம்பாகும்.
குடும்பத்தின் ஒட்டுமொத்த வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதால், பெரும்பாலான குடும்பங்களும் இத்திட்டத்தின் பயனை அடைய முடியாத சூழல் உள்ளது.
எனவே, குடும்பங்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வருமான உச்சவரம்பை குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
பணமாக வழங்காமல் சிலிண்டராகவே வழங்க வேண்டும்
மிக முக்கியமாக, சிலிண்டருக்கான தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணமாக செலுத்தும் முறை கூடாது. நேரடியாக சமையல் எரிவாயு சிலிண்டர்களையே வழங்க வேண்டும்.
பணமாக வழங்கும்போது அந்தத் தொகை சில நேரங்களில் குடும்பத்தின் வேறு செலவுகளுக்கு பயன்படுத்தப்படலாம். குடும்பத்தின் உணவு உத்திரவாதத்திற்காக வழங்கப்படும் சமையல் எரிவாயு, பணமாக வழங்கப்பட்டால் அது பிற செலவுகளுக்கு பயன்படுத்தும் நிலையும் ஏற்படும். குறிப்பாக அந்தப் பணம் டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் அபாயமும் உள்ளது.
எனவே, குடும்பத்தின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, பணமாக வழங்குவதைக் கைவிட்டு நேரடியாக சிலிண்டராக வழங்கிட வேண்டும்.
என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஜி.பிரமிளா,
அ.ராதிகா Rathika Covai,
தலைவர்,
பொதுச்செயலாளர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,
தமிழ்நாடு.
.