17/10/2015
காங்கிரஸ் உறவே வேண்டாம் என்று கூறியவர்கள் இப்போது கதவை தட்டுகிறார்கள்: இளங்கோவன் பேச்சு
தூத்துக்குடி, அக். 17–
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 2–வது மண்டல நிர்வாகிகள் மாநாடு தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு மஹாலில் இன்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மாநாட்டு கொடியேற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ வேல்துரை வரவேற்றார்.
மாநாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
காங்கிரஸ் கட்சியின் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று கூறியவர்கள் இன்று கதவை தட்டுகிறார்கள். ஏனென்றால் இன்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மக்களிடம் மிகுந்த நம்பிக்கை பெற்றுள்ளது. தமிழகத்தில் இழந்த பெருமையை வருகிற 2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் உறுதியாக காங்கிரஸ் கட்சி மீட்கும்.
தற்போது துவரம் பருப்பின் விலை கிலோ ரூ.200க்கு மேல் சென்று விட்டது. தமிழக மக்களின் கவலையை கண்டு கொள்ளாமல் முதல் –அமைச்சர் ஜெயலலிதா கொடநாடு சென்று விட்டார். அவருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சசி பெருமாள் உயிர் தியாகம் செய்தார். ஆனால் தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல் மவுனம் சாதித்து வருகிறது. ஏனென்றால் அவர்களுக்கு அதில் கோடிக்கணக்கான வருமானம் கிடைக்கிறது. மதுவால் ஏழை மக்கள் தாங்கள் சம்பாதித்ததை செலவழித்து வறுமையில் வாடி வருகிறார்கள்.
வருகிற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி மக்களுக்கு நல்லாட்சி தருவோம். காங்கிரஸ் ஆட்சியின் நல்ல திட்டங்களை தற்போது மத்திய அரசு முடக்கி விட்டது. மோடி தலைமையிலான அரசு திட்டங்களை அழிக்கும் அரசாக உள்ளது.
வருகிற தேர்தலில் காமராஜர் கண்ட ஆட்சி அமைய அனைவரும் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர்கள் சென்னா ரெட்டி, திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ராமச்சந்திரன், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரிஅனந்தன், சுதர்சன நாச்சியப்பன் எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் குஷ்பு. முன்னாள் எம்.பி மாணிக் தாக்கூர், எம்.எல்.ஏ.க்கள் கோபிநாத், விஜயதரணி, பிரின்ஸ் மற்றும் செல்வப் பெருந்தகை, ராஜசேகரன், வசந்தகுமார், ராஜேஷ், அஸ்லம் பாஷா, சபீன், பாபு, தென் சென்னை மாவட்ட துணைத்தலைவர் பொன் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.