27/08/2026
ஆழ்ந்த இரங்கல்
இளம் பத்திரிகையாளர் ந.வினோத்குமார் அவர்கள் மறைவுற்றார் என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
விகடன், தமிழ் இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நாளேடுகள், புதிய தலைமுறையின் ஆங்கில இணையதளமான ‘தி ஃபெடரல்’ ஆகியவற்றில் பணியாற்றியவர் ந.வினோத்குமார்.
கழகத்தின் இளைஞர் அணி சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் முரசொலி பாசறை பக்கத்தில், ‘முதன்முதலில்’, ‘சீரணி’, ‘இடம் - பொருள் - கலைஞர்’ என 3 முக்கியத் தொடர்களை எழுதியுள்ளார். ‘திராவிட மாடல் அரசு’ தொடரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
‘தமிழரசு கலைஞர்’, ‘புத்தர் இன்றும் சிரிக்கிறார்’, ‘வான்- மண் – பெண்’, ‘வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’, ‘பாப்லோ The boss’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ‘முந்நூறு ராமாயணங்கள்’, ‘நிலம் - துப்பாக்கி – சாதி’, ‘அமர நாயகன்’ உள்ளிட்ட பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
உடல்நலப் பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல், சமூகநீதி சிந்தனையோடு தன் சீரிய எழுத்துப்பணிகளைத் தொடர்ந்த ஓர் எழுத்தாளரை இழந்திருக்கிறோம் என்பது ஈடு செய்ய இயலாதது.
அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினர் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.