09/01/2025
2008 ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பு போர் உச்சத்தில் இருந்த போது, போர் நிறுத்தம் வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்யும் இளைஞர்களை ஒன்று திரட்டி போராடிய அமைப்பான "சேவ் தமிழ்ஸ்" என்கிற இளந்தமிழகம் அமைப்பு, அதன் பிறகு பல்வேறு மக்களின் நீதிக்கான போராட்டங்களில், தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்யும் இளைஞர்களை ஒன்று திரட்டி போராடியதோடு, அவர்களை அரசியல் மயப்படுத்தும் பணியையும் தொடர்ந்து செய்து வருகின்றோம்.
நேற்று கடலூரில் ஊடகவியலாளர் சந்திப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழினத்தலைவர் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எவ்வித ஆதாரமும் இன்று அவதூறாக கொச்சைப்படுத்தி பேசியிருப்பது குறித்து கடும் அதிர்ச்சியடைகிறோம்.
தமிழ்த்தேசிய அரசியல் போர்வையில், சீமான் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
கடந்த சில நாட்களாகவே சீமான் மற்ற தமிழகத் தலைவர்களைப் பற்றி இழிவு படுத்தும் நோக்கில் பேசி வருகிறார்.பகுத்தறிவையும் சுயமரியாதையையும் எமக்கு கற்றுக் கொடுத்த தந்தை பெரியாரைப் பற்றி, வெகு ஆபாசமாக பேசியிருப்பதற்கு அவர் எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் சீமான் தான் பேசிய கருத்துகளை திரும்பப் பெற்றுக் கொள்வதோடு, தமிழர்களிடையே பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என இளந்தமிழகத்தின் சார்பாக
எச்சரிக்கை விடுக்கின்றோம்.
இப்படிக்கு,
இளந்தமிழகம் இயக்கம்