23/12/2015
நீரின்றி அமையாது உலகு !
நீர்....... உலகின் உயிர் !
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரை
உயிர்வாழ நீர் தேவை !
உலகின் மனிதகுலம் தோன்றி வளர்ந்ததெல்லாம் ஆறுகளின் ஓரத்திலேயே. ஆற்றங்கரை நாகரீகம் எனப் போற்றப்பட்டது பண்டையத் தமிழர் நாகரீகம்.
கடலால் அழிந்துபோன பஃறுளி ஆற்றின் தென்மதுரை முதல் அழியாது நிற்கும் பாலாற்றின் காஞ்சி வரை ஆற்றங்கரையிலேயே தமிழன் வாழ்ந்தான், வாழ்கிறான்.
ஆறுகள், ஆற்றுக் கால்வாய்கள், ஏரிகள், குட்டைகள், குளங்கள் என நீர்நிலைகளை உருவாக்கி காத்தனர் நம் முன்னோர்.
ஆறுகள், நீர் நிலைகள் அழிந்தால் மனிதகுலம் அழியும் !
நீரைக் காக்காத சமூகம் கெட்டழியும் !
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்பது நம் மரபு
இன்று...
அற்ப மனிதர்களின் லாப வெறியால்...
அரசாலும், அரசியல்வாதிகளாலும், தவறான நிர்வாக முறைமையாலும் கெட்டழிக்கப்பட்டது நம் நீர் மேலாண்மை
கேட்பாரின்றி நம் ஆறுகள், ஏரிகள் அழிக்கப்பட்டன.
நமது நீர் மேலாண்மை முற்றாக சீர்குலைக்கப்பட்டது.
தற்செயலானதல்ல இது.
இதன் பின்னால் உள்ள அரசியல் ஆபத்தானது.
நஞ்சையை புஞ்சையாக்கி, புஞ்சையை தரிசாக்கி, தரிசை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதற்கான நீண்ட செயல்திட்டம் கொண்டது. ஆம், இப்போது அதுதான் நடந்து வருகின்றது.
சொந்த நாட்டில், நாட்டு மக்களின் நிலங்களைப் பிடுங்கி அவர்களை ஓட்டாண்டிகளாக்கி, பன்னாட்டு நிறுவனங்களில் கூலிக்காரர்களாக மாற்றும் திட்டத்தின் ஓர் அங்கம் இது. சதிகளைப் புரிந்துகொள்ளாத சமூகம் கெட்டழியும்.
நீரும், நீர் சார்ந்த நிலமும் நம் மக்களின் சொத்து
அதை இனியாவது காப்போம். நம் சந்ததி வாழ காத்துநிற்போம் !
தமிழக மண்ணையும், நீரையும் காக்க ஒன்றிணைவோம் !
நம் மண், நம் நீர், நமது உரிமை !...............................................................................................................
நம்நாட்டு மக்களுக்கான உணவு உற்பத்திக்கே முதலிடம் கொடுப்போம்.
பன்முக உழவாண்மைக்கு வேட்டு வைத்து உலக மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றும் வணிகப் பயிர் சாகுபடியைத் தவிர்ப்போம்.
கரும்பு பயிரிடுவதைக் தவிர்ப்போம்; இயலாவிட்டால் கரும்பின் கழிவான மொலாசசுக்கு உழவர் பங்கு (ராயல்டி) கேட்போம்.
இயற்கை வழி உழவிற்கு திரும்புவோம்; விவசாயிகள் விதை, உரம், பூச்சிக்கொல்லி என கம்பெனி இடுபொருட்களால் கடனாளியாவதை நிறுத்துவோம்.
மரபுவழி விதைகள், பயிரிடும் முறைகள் ஆகியவற்றிற்கு திரும்புவோம். அதுவே தற்சார்பு விவசாயம் என்பதை உணர்வோம்.
இயற்கைச் சீரழிவுகளுக்குக் காரணமான அரசு, அதிகார, அரசியல்வாதிகளால் சீரழிக்கப்பட்ட நீர்நிலைகளைக் காக்க, மேம்படுத்த ஒன்றிணைவோம். சீரழிவுகளைத் தடுப்போம்.
நுகர்வுக் கலாச்சாரம் நம் வாழ்க்கையை அழிப்பதை உணர்வோம். எளிய, இனிய வாழ்க்கைக்குத் திரும்புவோம்.
மண்ணையும், மக்களையும் மலடாக்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளையும், வீரிய வகை விதைகளையும்,
புறக்கணிப்போம். மறைக்கப்பட்ட நம் விதைகளை மீட்டெடுப்போம்.
நம் நாட்டுக்குத் தேவையானவற்றையே விளைவிப்போம்.
நமது நீர், நிலம், காற்று ஆகியவற்றைக் காப்போம்.
பூச்சிக் கொல்லிகளைத் புறக்கணிப்போம், நம் நாட்டின் உயிர்ச் சூழலை மீட்டெடுப்போம்.
நுகர்வுக் கலாச்சாரம் நம் வாழ்க்கையை அழிப்பதை அறிந்து எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்புவோம். ...........................................................................................................
காத்திடுவோம் காத்திடுவோம்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
நம் சந்ததி காத்த ஆறுகளை
ஆற்று நீர் பெறும் ஏரிகளை
ஏரிக்கு நீர் வரும் கால்வாயை
தடுத்திடுவோம் தடுத்திடுவோம்,
ஆற்று மணலை அள்ளுவதை,
ஏரிகள் மண்ணை அள்ளுவதை,
கால்வாய் தூர்த்து கட்டுவதை
கட்டச் செய்வோம் கட்டச் செய்வோம்
மணலைத் திருடிய ஆறுகளில்,
தடுப்பணைகளைக் கட்டச் செய்வோம்.
உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
நிலத்தடி நீரை உயர்த்திடுவோம்
மீட்டிடுவோம் மீட்டிடுவோம்
நம் பாராம்பரிய அறிவியலை மீட்டிடுவோம்
மீட்டெடுப்போம், மீட்டெடுப்போம்
இயற்கை வளங்களை மீட்டெடுப்போம்
காத்திடுவோம், காத்திடுவோம்
மரபு விதைகளை காத்திடுவோம்
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
மரபணு மாற்றப்பட்ட விதைகளை விரட்டியடிப்போம்
தண்ணீர் என்பது பூமியின் ரத்தம்
நீர் நிலை காப்போம் நீர் நிலை காப்போம்
படைத்திடுவோம் படைத்திடுவோம்
நம்பூமி காக்க புதிய சட்டம் படைத்திடுவோம்.
-------- மக்கள் இணையம்.