16/04/2016
மண்பாண்டங்களுக்கு மாறுவோம்!
மண்பாண்டங்களில் சமைப்பதால் ஏற்படும் பயன்கள் பற்றி விளக்குகிறார் உணவியல் நிபுணர் சாஹித்ய பிரியா.
“மண்பானையில் சமைப்பது முற்றிலும் இயற்கையானது. ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தரும். இதில், சமைத்த உணவு, நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். சுவையும் மாறாது. ஒவ்வொரு முறை சமைக்கும் போதும், மண்பானையை நீரில் நனைப்பதால், உணவுப் பொருட்களை தீயில் கருக்காமல் பாதுகாக்கிறது. மற்ற உலோகப் பாத்திரங்களில் உள்ள ரசாயனங்கள் இதில் இல்லை. சூடான பொருட்கள் சூடாகவும், குளிர்ச்சியான பொருட்களைக் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் தன்மை, மண்பாண்டத்துக்கு உண்டு. சமைக்கப்படும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறையாமல் தடுக்கப்படுகின்றன. பானையை நீரில் ஊறவைக்கும் போது, பானையின் துளைகளில் நீர் தங்கி, சமைக்கும்போது ஆவி ஆகிறது. இதனால், உணவை எளிதில் சமைக்கவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் முடியும். மண்பாண்டங்கள் ஒட்டா தன்மை கொண்டது என்பதால், இதில் சமைக்கும்போது உணவில் எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. கார உணவுகளே நம் உடலுக்கு ஏற்றவை. ஆனால், இந்த ஃபாஸ்ட் புட் உலகில், நாம் உண்பது அனைத்தும் அமில உணவுகளே. களிமண் காரத்தன்மை கொண்டது. எனவே, இதில் சமைப்பது, பி.ஹெச் (PH) அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும். உணவு எளிதில் செரிமானம் ஆகும்.