03/10/2025
நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 100வது ஆண்டு நிறைவு நாள். பாஜகவினர் எப்படியும் "பாரத் மாதா கி ஜெய்", "ஆர்.எஸ்.எஸ். சிந்தாபாத்" பரப்பும்போது, நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்த இந்த தகவலை பகிரலாம் என்று கருதுகிறேன்.
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் 27 செப்டம்பர் 1925 ஆம் ஆண்டு, அதாவது இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு 22 வருடங்களுக்கு முன்பு, சுதந்திர போராட்டம் ஆரம்பித்து பல வருடங்களுக்கு பின்பு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. ஆனால் 27 செப்டம்பர் அன்று கொண்டாடாமல் நேற்று ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 100வது ஆண்டு நிறைவு நாளை கொண்டாடுகிறார்களே!!! ஏன்?. ஏனென்றால் நேற்று அக்டோபர் 2 மகாத்மா காந்தியின் பிறந்தநாள். 'நினைவிருக்கட்டும்.... மகாத்மா காந்தி காந்தியடிகளை கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்.'
சர்தார் வல்லபபாய் படேல் அவர்களால் தடை செய்யப்பட்ட அதே ஆர்.எஸ்.எஸ்.. நீண்ட காலமாக படேல் அவர்களுக்கு காவி வண்ணம் பூச முயற்சித்து வருபதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் "உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்." என்றார். ஆனால் 'இதே ஆர்.எஸ்.எஸ். தான் காந்தியை கொன்றனர்; இதே ஆர்.எஸ்.எஸ். தான் காமராஜர் வீட்டை தீ வைத்து அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டினர்' என்ற உண்மையை சொல்ல மாட்டார்.
இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு 22 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஏன் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்திய விடுதலைக்காக போராடியவர்கள் அனைத்து ஜாதி, மத, மொழியினருக்காகவுமான, சமத்துவத்தை, ஜனநாயகத்தை முன்வைத்து இந்தியாவை கட்டியெழுப்ப நினைத்தனர். இந்த கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், வீரம் மற்றும் தியாகத்தையும் (காவி நிறம்), அமைதி மற்றும் உண்மையையும் (வெள்ளை நிறம்), வளத்தையும், வளர்ச்சியையும் (பச்சை நிறம்), காந்தியின் கொள்கைகளையும் (அசோகச் சக்கரம்) உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்தியக் கொடியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். அவர்கள் எப்படி சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பார்கள்?.
1948 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தேசியத் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் அவர்கள் அன்றைய துணைப் பிரதமரும் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் "ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும். அப்படி செய்து எங்களுக்கு உதவினால் இடது சாரி சிந்தனை கொண்டவர்களை, கம்யூனிஸ்ட் இயக்கத்தினரை ஒழிப்பதற்கு அரசுக்கு உதவுகிறோம்." என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலாக சர்தார் வல்லபாய் படேல் கோல்வால்கர்க்கு எழுதிய கடிதத்தில் "ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத விஷத்தைப் பரப்புகிறது." என்று எழுதினார். ஆனால் இன்று அதே சர்தார் வல்லபாய் படேலுக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சொந்தம் கொண்டாடுகிறது.
1998 ஆம் ஆண்டு பாஜகவை சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் இந்திய பிரதமர் ஆனார். அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி அவர்களுக்கு HRD துறை ஒதுக்கப்பட்டு, அந்த துறையின் கீழ் இருந்த கல்வித்துறையில் 1998 இல் இந்துத்துவா கொள்கைகளை முன்னிறுத்தும் வகையில் பாடங்களை திருத்தம் செய்து, இஸ்லாமிய வரலாறுகளை மாறுதல் செய்து, பாஜக மற்றும் சங்க பரிவார் அமைப்புகளுக்கு எதிராக இருந்த அனைத்தையும் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கம் செய்து, தங்களது கொள்கைகளை குழந்தைகளில் இருந்து கல்லூரி மாணவர்கள் வரை திணிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். கல்வியை காவி மயமாக்கும் முதல் நடவடிக்கை (Safronization of Education). 2014 முதல் இன்று வரை பிரதமர் நரேந்திர மோடியும் இதை தான் செய்கிறார்.
தற்போது டெல்லியில் ஆளும் பாஜக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து கற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. அதேபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடி 100 ரூபாய் நாணயம் வெளியிட்டுள்ளார். ஒருபுறம் அசோக சின்னம். மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாரத மாதாவுக்கு சல்யூட் செய்யும் படம். போஸ்டல் ஸ்டாம்ப் அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் பிரதமரா? இந்திய மக்களின் பிரதமரா?
காலம் காலமாக பாஜக இப்படித்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விஷ ஊசி செலுத்தி ஒருவரை மெதுவாக சாவடிக்கும் விதத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்திய விடுதலை போராட்டத்தில் கடுகளவு கூட அங்கம் வகிக்காத ஒரே அமைப்பு; அகிம்சையை மட்டுமே உயிராக நினைத்த மகாத்மாவை கொலை செய்த அமைப்பு; ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்த அமைப்பு; நமது குழந்தைகளை ஹிம்சையின் வழியில் இழுத்துச் செல்ல முயற்சி செய்யும் அமைப்பு எப்போது தடை செய்யப்போகிறது. எப்போது அடியோடு அழியப்போகிறது?