30/10/2025
விடுதலை போராட்டத்தில் இளைஞர்களை ஈர்த்த நவஜவான் பாரத் சபா நூற்றாண்டில் இந்திய நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரை நீத்த மாவீரன் பகத்சிங்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிலை அமைக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு கோரிக்கை
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், இளைஞர்களை தட்டி எழுப்பிய இயக்கங்களில் நவஜவான் பாரத் சபா மிக முக்கியமான ஒன்றாகும். இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வை உயர்த்தி, சமூக சீர்திருத்தங்களையும் விடுதலைக் கோஷங்களையும் பரப்புவதற்காக 1926 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பு உருவாகி 2026-ல் நூற்றாண்டை எட்டுகிறது.
இந்த அமைப்பினை தோற்றுவித்தவர் மாவீரன் பகத்சிங், இந்நாட்டின் விடுதலைக்காக அசைக்க முடியாத மன உறுதியுடன் போராடி, 23 இளவயதிலேயே தன் உயிரைத் தியாகம் செய்தவர். இந்தியாவின் புரட்சிப் போராட்டத்துக்கு புதிய திசை தந்தவராகவும், இளைஞர்களை ஊக்கப்படுத்திய புரட்சியாளராகவும் இருந்தவர்.
பகத்சிங்கின் போராட்ட வரலாறு வட இந்தியாவைத் தாண்டி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர் இயக்கங்களை உந்தி தள்ளியது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்கு தவிர்க்க முடியாதது.
இத்தகைய பெரும் புரட்சியாளரின் நினைவை தமிழ்நாட்டில் அரசு சார்பில் நிரந்தரமாகப் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் சென்னை , மதுரை, திருச்சி, கோவை போன்ற குறிப்பிடத்தக்க ஏதேனும் நகரங்களில் , மாநில அரசின் சார்பில், மாவீரன் பகத்சிங் சிலை அமைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இது இளைஞர்களுக்கு விடுதலைப் போராட்ட வரலாற்றை உணர்த்தும், சமூக அக்கறை, தேசப்பற்று, ஜனநாயக விழிப்புணர்வு ஆகியவற்றை வலுப்படுத்தும், புரட்சிகர சிந்தனையை ஊக்குவிக்கும். தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு நல்ல முன்னுதாரணமாக அமையும்.
2026-இல் அமைப்பின் நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு இச்சிலை நிறுவுவது முக்கிய நிகழ்வாக அமையும். எனவே, மேற்கண்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் பகத்சிங் சிலை அமைக்க அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்,
மாநிலத் தலைவர்
செல்வராஜ்
மாநிலச் செயலாளர்
எஸ்.கார்த்திக்