மக்கள் நலன் சார்ந்த அரசியல் அழிந்து வருகிறது . கட்சி நலன் சார்ந்த அரசியல் வளர்ந்து வருகிறது . இன்று இருக்கும் அரசியல் தலைவர்கள் மக்களைப் பற்றியோ ,மக்கள் நலன் சார்ந்தோ சிந்திப்பதில்லை . கட்சி நலன் சார்ந்து , கட்சியை எப்படி வளர்ப்பது ? ஆட்சியை எப்படி பிடிப்பது ? பதவிகளை எப்படி கைப்பற்றுவது ? என்று தான் சிந்திக்கின்றனர் . இதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள், இன்றைய அரசியல்வாதிகள் . ஒரு சிலர்
மட்டுமே மக்கள் நலன் சார்ந்தும் , ஒட்டு மொத்த முன்னேற்றம் சார்ந்தும் சிந்திகின்றனர் , செயல்படுத்துகின்றனர் .
மனசாட்சியே இல்லாத மனிதர்களாக அரசியல்வாதிகள் மாறிவிட்டனர் . மக்களின் வரிப் பணத்தில் தான் வாழ்கிறோம் என்பதையே மறந்து விட்டனர் . கட்சித் தலைவர் என்னவோ தன் சொந்த பணத்தில் ஆட்சி நடத்துவது போலவும் இவர்கள் அவர் வழி நடப்பது போலவும் நடந்து கொள்கின்றனர் . மக்களின் வரிப்பணத்தில் தொட்டதுக்கெல்லாம் வெட்கமே இல்லாமல் விளம்பரத்தட்டிகள் (பேனர்கள் ) வைக்கின்றனர் . சம்பந்தமே இல்லாமல் ரெண்டு மைல் தூரத்திற்கு கொடிக்கம்பங்கள் , ஒளிவிளக்குகள் அமைக்கின்றனர்
தான் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான் சாதாரண மனிதன் .
பெரும் வணிக நிறுவனங்களின் பிடியில் அரசியலும் , அரசியல்வாதிகளும் உள்ளனர் . தேர்தலுக்கு செலவளிக்கப்படும் பணத்தின் பெரும் பகுதி இந்த வணிக நிறுவனங்களுடையது . இதற்காக அரசு இயந்திரம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் விருப்பம் போல் சுழலும் . வளைந்து கொடுக்கும் . அப்பாவி மக்களைப் அடித்து விரட்டும். "ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் " என்ன கொடுமை இது . ஏழைகளையும் , அவர்களின் படிப்பறிவின்மையயும் தங்களது ஓட்டு வாங்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றனர் . ஆட்சியாளர்கள் நினைத்தால் ஏழைகளே இல்லாமல் செய்ய முடியும் . எல்லோருக்கும் முழுமையான படிப்பறிவைக் கொடுக்க முடியும் . ஆனால் ,செய்ய மாட்டார்கள் . அப்படிச் செய்தால் இவர்கள் ஏமாற்றுவதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் .
யார் ஆட்சிக்கு வந்தாலும் கட்சியின் பேரைச்சொல்லி, கட்சியில் உள்ள முக்கியப்புள்ளிகளின் பேரைப் பயன்படுத்தி வார்டு முதல் வட்டம் , மாவட்டம் , மாநகராட்சி வரை ஏகப்பட்ட அடாவடிகளும் , அட்டூழியங்களும் தினமும் நடந்தேறுகின்றன .
இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு ??
மக்கள் நலன் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும். எல்லோரும் ஒன்று பட்டால்தான் உண்மையான மக்கள் ஆட்சியை மலரச் செய்ய முடியும் . மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் அனைவரையும் தூக்கி எறியுங்கள் . இந்த தேர்தலில் முடியா விட்டாலும் அடுத்த தேர்தலுக்குள் மக்களுக்கான ஆட்சியை உருவாக்க முடியும் .
கட்சியினால் உருவாக்கப்படும் பேதங்களை வேரறுப்போம் !
மக்கள் நலன் சார்ந்த அரசியலை உருவாக்குவம் !