26/04/2026
#நடிகர்_விஜய்
தமிழக அரசியலில் நடிகர்கள் வருவது புதிதல்ல! ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் அரசியலுக்குள் வரும்போது, அது ஒரு தனிநபரின் முடிவாக மட்டும் நிகழ்வதில்லை; ஒரு சமூகத்தின் அரசியல் நிலைமையைப் பிரதிபலிக்கும் நிகழ்வாக மாறுகிறது. இன்று விஜயின் அரசியல் வருகையும் அப்படித்தான் பார்க்கப்பட வேண்டும்.
அவரை ஆதரிக்கும் கூட்டத்தை வெறும் ரசிகர் வெறி / தற்குறிகள் என்று சொல்லி, அந்த நிகழ்வின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் வைக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் விமர்சனம் மிகவும் தவறானது . அதே நேரத்தில், அதை ஒரு புதிய அரசியல் புரட்சி என்று கொண்டாடுவதும் தவறு. உண்மையில் இது, தமிழக அரசியலில் நீண்டகாலமாக உருவாகிக் கொண்டிருந்த ஒரு வெற்றிடத்தின் வெளிப்பாடு.
இந்த வெற்றிடம் வெறும் தலைமை பற்றாக்குறையால் உருவானது அல்ல. மாற்று அரசியலுக்கான எந்த வித பார்வைகளும் இல்லாத / உருவாக்காத எதார்த்தத்தால் வந்தது. இன்றைக்கு விஜயின் வருகை ... அதற்கு மக்கள்
மத்தியில் இருக்கும் ஆதரவு பற்றிய விவாதத்தின் மையத்தில் இருக்க வேண்டியது விஜய் என்ற தனி நபர் / அவரின் சினிமா பிம்பம் மட்டுமல்ல *அவரை சாத்தியமாக்கிய அரசியல் சூழல் பற்றியது* தான் !!!
தமிழகத்தில் பல தசாப்தங்களாக ஆட்சியின் மையத்தில் இருந்தவை திமுகவும் அதிமுகவும். இந்த இரு கட்சிகளும் வெவ்வேறு வரலாற்றுப் பின்னணியில் தோன்றியிருந்தாலும், காலப்போக்கில் ஆட்சியின் நடைமுறையில் பெரிதாக வேறுபடாத கட்டமைப்புகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன !!! மக்கள் முன்னேற்றம், சமூகநீதி, நலத்திட்டங்கள் போன்ற மொழிகள் தொடர்ந்தாலும், அரசியலின் அடிப்படை வடிவம் அதிகார மையப்படுத்தல்/ சுரண்டல்/ முதலாளித்துவ இலாப நோக்கு / தொழிலாளர் ஒடுக்குமுறை போன்றவற்றையே மையப்படுத்தும் பாதையே இவர்களது அடிப்படை!
50 க்கும் மேலான ஆண்டுகள் ஆட்சியில் மாறி மாறி வந்த இந்த இரு பெரும் கட்சிகளின் அரசியல் கற்பனையின் கட்டமைப்புக்குள் சிக்கிக் கொண்டது தமிழகம் ! இதனால் மக்கள் மாற்றத்தை தேடும்போது கூட, அதே அரசியல் மொழியின் வேறு வடிவங்களை மட்டுமே பார்க்கும் சூழலுக்குள் தள்ளப்பட்டு உள்ளனர் . தமிழகத்தில் இந்த இரு கட்சிகளின் ஆதிக்கம் வெற்றிடத்தை உருவாக்கி நீண்ட காலம் ஆகி விட்டது .
இருப்பினும் மாற்றத்திற்கான தேவையை / அதிருப்தியை மக்கள் பல விதங்களில் கடந்த ஆண்டுகளில் வெளிப்படுத்தியும் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய பணிகள் ஒரு துளியும் செய்யப்படவில்லை என்பதே எதர்தம் .... முக்கியமாக இடதுசாரி இயக்கங்கள் அந்த வரலாற்றுப் பொறுப்பை ஏற்கவில்லை!!???????
இடதுசாரிகள் தமிழகத்தில் வலுவான சிந்தனை மரபைக் கொண்டவர்கள். ஆனால் அந்த சிந்தனையை மக்கள் அரசியலாக மாற்றுவதில் அவர்கள் தொடர்ந்து தடுமாறினர்.தனித்த அடித்தளத்தை உருவாக்க வேண்டும், தங்களின் சொந்த அரசியல் பலத்தை வளர்க்க வேண்டும் என்ற நீண்டகால நோக்கத்தை விட, ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் இணைவதே பாரம்பரியமாகிப்போனது இடதுசாரிகளுக்கு ! பாழாய்ப்போன "Lesser Evil Concept" நிரந்தரத் தந்திரமாக்கி இடதுசாரிகள் தங்களது சுய அரசியல் இடத்தை/ பாதையை இழந்துவிட்டனர். ஆம் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற வேண்டிய சக்திகள், எப்போதும் பெரிய கட்சிகளின் துணை வீரர்களாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்!!!! மக்களும் இடதுசாரிகளை ஆட்சிக்கான மாற்றாகக் காண்பதில்லை அதிக பட்சம் விமர்சனக் குரலாக மட்டுமே பார்க்கின்றனர் . இடதுசாரிகள் , கம்யூனிஸ்டுகள் போராடுவர்கள் , கொடி பிடிப்பார்கள் , விமர்சிப்பார்கள் என்பதை தாண்டி வேறு பார்வை மக்களுக்கு இல்லை .....
மிகவும் முக்கியமாக, இளம் தலைமுறையுடன் அந்நியப்பட்டு நிற்கின்றனர் . Gen Z அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைமுறை அல்ல. அவர்கள் ஆர்வமற்றவர்கள், தற்குறிகளும் அல்ல. ஆனால் அவர்கள் அணுகும் வழிகள் வேறு. அவர்கள் வாழும் உலகம் டிஜிட்டல். அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் வேறு வடிவம் எடுத்துள்ளன. வேலை, வாழ்வாதாரம், மனநலம், அடையாளம், எதிர்காலம் இவை அனைத்தும் அவர்களின் அரசியல் அனுபவமாக இருக்கின்றன. முற்போக்கு சக்திகள் , இடது சாரி அமைப்புகள் இந்த தலைமுறையினரை மிக முக்கியமான அரசியல் பங்கேற்பாளர்கள் என்ற பார்வையில் அணுகாமல் இவர்களிடம் இருந்து அந்நியப்பட்டு நிற்கின்றனர் . அதன் விளைவு gen z தங்களை பிரதிபலிக்கும் முகங்களை வேறு இடங்களில் தேடினார்கள்.
அந்த இடத்தை சினிமா நிரப்பியது. விஜய் நிரப்புகிறார்
இது ரசிக மனப்பான்மை / சினிமா மோகம் மட்டுமல்ல.இது அரசியல் வெற்றிடத்தின் விளைவு.ஒரு தலைமுறைக்கு மாற்று சிந்தனை வழங்கப்படாவிட்டால், அவர்கள் மாற்று முகங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். விஜயின் எழுச்சி அதற்கான சான்று. ஒரு நடிகர் அரசியலுக்குள் வருவது பிரச்சினையின் தொடக்கம் அல்ல; அது ஏற்கனவே உள்ள அதிருப்தியின் வெளிப்பாடு.
அரசியல் வெற்றிடமாக மாறும்போது, அதை நிரப்ப சரியான கொள்கை/ கட்டமைப்பு இல்லாத போது இத்தகை பிரபலங்களின் முகங்கள் மாற்றாக நம்பப் படுகிறது . இப்போது விஜய் என்ற அந்த பிம்பம் மக்களை / இளையோரை ஈர்க்கலாம். ஆனால் அது சமூகத்தை மாற்றுமா என்பது வேறு கேள்வி.
அதற்கான பதில், நம் அரசியல் அமைப்புகள் தங்களது தோல்விகளை உணர்ந்து, உண்மையான மாற்று பாதைகளை உருவாக்கத் தயாரா என்பதில் தான் இருக்கிறது.
- பொதுவுடை இயக்கம்