01/04/2026
அண்ணாமலை ஓரங்கட்டப்படுவாரா :
பாஜக என்ற பேரியக்கம் தன்னை எதிர்ப்பவர்களையும் துரோகம் இழைப்பவர்களையும் கையாளுவதில் தனித்துவமான பாணியைக் கொண்டுள்ளது. கட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது உடனடியாக நேரடி நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர்களை அவர்களே வீழ்த்திக் கொள்ளும் சூழலை உருவாக்கி அவர்களை மெல்ல மெல்ல அரசியல் களத்திலிருந்து அகற்றுவதே அக்கட்சியின் வியூகம்
கட்சிக்குள்ளேயே இருந்து துரோகம் இழைக்க முயன்றவர்களையும் மாநில அளவில் ஆதிக்கம் செலுத்திய வசுந்தரா ராஜே, பி எஸ் எடியூரப்பா, கேசுபாய் படேல், சாந்த குமார், உமா பாரதி மற்றும் கரியா முன்டா போன்றவர்களையும் கவனிக்க வேண்டும். இவர்களைத் தாண்டி மத்திய கமிட்டிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்து பின்னாளில் விலகிப்போன முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, சுப்ரமணியம் சாமி, சுமித்ரா மகாஜன், சஞ்சய் ஜோஷி, அருண் ஷோரி மற்றும் சத்யபால் மலிக் போன்றவர்களின் நிலையும் இதற்குச் சான்று. அதே சமயம் மாற்று கட்சிகளில் இருந்து வந்தாலும் கட்சியின் கட்டுப்பாட்டை ஏற்று பெரும் புகழ் பெற்றவர்களாக ஹேமந்த் பிஸ்வாஸ், ஜோதிராதித்ய சிந்தியா, சுவேந்து அதிகாரி மற்றும் அண்ணாமலை ஆகியோர் திகழ்கின்றனர். ஆனால் கொள்கை கட்டுப்பாட்டை மதிக்காமல் அழிந்து போன அசோக் சவான், R P N சிங், சுதிர் ஷர்மா, திகம்பர் காமத், முகுல் ராய், சகன் புஜ்பல், ரமேஷ் மற்றும் Y S சௌத்ரி என ஒரு நீண்ட பட்டியலே உள்ளது
கட்சி கட்டுப்பாடு, கொள்கை, நேர்மை, பொறுமை மற்றும் உழைப்பு ஆகியவற்றை முறையாகப் பின்பற்றுபவர்களால் மட்டுமே இந்த இயக்கத்தில் நிலைத்து வெற்றிபெற முடியும். கட்சிக்குள் இருந்தாலும் சரி அல்லது வெளியில் இருந்து வந்தாலும் சரி, ஆதரவாளர்கள் பலத்தை வைத்து மிரட்டுவது, அதிகார துஷ்பிரயோகம் செய்வது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறுவது அல்லது தொண்டர்களையும் கொள்கையையும் இழிவுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அத்தகைய நபர்களைத் தயக்கமின்றி ஒதுக்கி வைக்கும் குணம் பாஜகவுக்கு உண்டு. அதிகாரம் மற்றும் ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே கட்சியின் இலக்கல்ல, கால நேரத்திற்காகப் பொறுமையாகக் காத்திருக்கும் ஆற்றல் இந்த இயக்கத்திற்கு உள்ளது. இது திடீரென முளைத்த ஆதரவாளர்களுக்குப் புரியாது, ஏனெனில் அவர்களுக்கு எதையும் இப்போதே அடைய வேண்டும் என்ற அவசரம் மட்டுமே உள்ளது. குறிப்பாக உங்கள் அபிமான தலைவர் ஒரு உன்னதமான நிலையை அடைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் ஆதரவாளர்களாகிய நீங்கள் மாற வேண்டும்; இல்லையென்றால் உங்கள் தலைவரை அழிக்கும் முதல் சக்தியாக நீங்களே இருப்பீர்கள். இது புரிந்தவர்களுக்குப் புரியும், மற்றவர்கள் வழக்கம் போல விமர்சனங்களையும் சாபங்களையும் தொடரலாம், அதனால் உண்மை நிலை மாறிவிடப் போவதில்லை.