10/01/2025
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தை
தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடத்திடுவோம்..!
கழக மாணவர் அணியினரே ஆயத்தமாவீர்..!
அன்னைத் தமிழ்மொழி காக்க தங்கள் தேகத்தை தீக்கிரையாக்கியும், இன்னுயிரை மாய்த்துக் கொண்டும் உயிர்த்தியாகம் செய்த வீர மறவர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில் ஆண்டுதோறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டங்களை தமிழகமெங்கும் நடத்தி வருகின்றோம்.
மாணவர் அணி சார்பில் நாம் இக்கூட்டங்களை நடத்துவது தான் மற்ற அணிகளுக்கு இல்லாத பெருஞ்சிறப்பு ஆகும். திராவிட இயக்கங்களில் மாணவர் அமைப்புகள் தான் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்ட நிகழ்வுகளை எழுச்சியுடன் நடத்தி வருகின்றன. மாணவர் அணியின் முதற் கடமையும் இதுவேயாகும்.
மொழிப்போராட்டத்தில் களம் கண்ட பெருமைக்குரிய தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். ஆதிக்க இந்தியை எதிர்த்து கல்லூரி மாணவராக வீதியில் இறங்கி போராடியவர் நம் தலைவர். திராவிட இயக்கத்தின் நாற்றங்கால் என வர்ணிக்கப்படும் மாணவர் அமைப்பில் இருந்து உருவான தலைவர். இன்றும் அந்த உணர்வு பட்டுப்போகாமல் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக யமுனை நதிக் கரையில் அவருடைய குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இத்தனை பெருமைகளையும் தாங்கி நிற்கும் திராவிட இயக்கத்தின் மிக மூத்த தலைவர் திராவிட இயக்கப் போர்வாள் கழகப் பொதுச்செயலாளர் ஐயா வைகோ எம்பி அவர்கள் வழிநடந்தும் மறுமலர்ச்சி திமுகழகம் சார்பில் கடந்த முப்பது ஆண்டுகளாக தொய்வில்லாமல் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டங்களை நாம் நடத்தியிருக்கிறோம்.
இந்த ஆண்டும் தலைமைக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஆருயிர் தலைவர் வைகோ அவர்கள் தென்சென்னையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மிக குறுகிய காலத்திலேயே தன் செயல்பாடுகளின் மூலம் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்ற இளம் தலைவர் அண்ணன் துரை வைகோ எம்பி அவர்கள் தீரர்கள் கோட்டம் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
கழகத்தின் முன்னணி தலைவர்களும், தலைசிறந்த சொற்பொழிவாளர்களும் தமிழகமெங்கும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருக்கிறார்கள்.
தலைமைக் கழகத்தின் சார்பில் 26 இடங்களில் பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் வைகோ அவர்களும்,
இளம் தலைவர் அண்ணன் துரை வைகோ அவர்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் பெருமளவில் மாணவர்களையும், இளைஞர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டிய கடமை மாணவர் அணியினருக்கு இருக்கிறது. இக்கூட்டங்களுக்கு மாணவர் அணியினர் எல்லா வகையிலும் தங்களது ஒத்துழைப்பை கூடுதலாக வழங்கி மாணவர் அணியின் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
தலைமைக் கழகம் அறிவித்துள்ள மற்ற இடங்களிலும் மாவட்டக் கழகச் செயலாளர்களின் வழிகாட்டுதலில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் தங்களது துணை அமைப்பாளர்களுடன் இணைந்து கூட்ட ஏற்பாடுகளை முன்னின்று செய்ய வேண்டும்.
கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக மாணவர் அணியினர் மாவட்டச் செயலாளர்களை நேரில் சந்தித்து விரைவில் திட்டமிட வேண்டும்.
தங்களது மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள சொற்பொழிவாளரை மாவட்டச் செயலாளர்களின் ஒப்புதலுடன் அலைபேசியில் அழைத்து கூட்டம் நடைபெறும் விபரத்தை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தெரிவிக்க வேண்டும்.
பொதுக்கூட்ட அழைப்பிதழை மாணவர் அணி வாட்ஸ்அப் குழுவிலும், சமூக வலைதளங்களிலும் பதிவிட வேண்டுகிறேன்.
பொதுக்கூட்டம் நடைபெறும் நகரங்களில் மாணவர் அணி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டுவதை கட்டாயமாக்கிக் கொள்வோம்.
மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்கள் தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்படுவதை விரைந்து உறுதிசெய்திட வேண்டுகிறேன். மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு கூட்டம் தொடர்பாக பேசுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சில மாவட்டங்களில் மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளார்கள். மாணவர் அணியின் நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தி முடிக்கவும், தொடர்ந்து இயங்கவும் ஏதுவாக புதிய மாணவர் அணி நிர்வாகிகளை பரிந்துரை செய்து தலைமைக் கழகத்திற்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு ஆற்றல்மிக்க மாவட்டச் செயலாளர்களை பணிவுடன் வேண்டுகிறேன்.
மாணவர் அணித் தோழர்களே!
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டங்களை ஆண்டுதோறும் நடத்துவது மாணவர் அணியின் முதற்கடமை என்பதை நினைவில் கொண்டு இக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்திட முன்வருவோம்.
தமிழகமெங்கும் மொழிப்போர் தியாகிகளின் நினைவை எடுத்துச் செல்வோம்.
இளம் தலைமுறையினரின் உள்ளங்களில் மொழிப்போராட்ட கனலை விதைத்திட களம் அமைப்போம்.
ஆதிக்க இந்தியை எதிர்ப்போம்!
அன்னை தமிழ் காப்போம்!
நட்புடன்,
பால.சசிகுமார்
மாநில மாணவர் அணிச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
10.01.2025