03/04/2018
போராடுவதன் மூலமே உரிமையை நிலைநாட்ட முடியும்
இளம் பெண்கள் மாநாட்டில் பத்திரிகையாளர் சீமா முஸ்தபா பேச்சு
சென்னை, ஏப் 2 -
போராடுவதன் மூலமே பெண்கள்தங்களது உரிமையை நிலைநாட்ட முடியும் என்று சிட்டிசன் பத்திரிகையின் ஆசிரியர் சீமா முஸ்தபா கூறினார்.சென்னையில் திங்களன்று (ஏப். 2)இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்இளம் பெண்கள் அகில இந்திய மாநாட்டை தொடங்கிவைத்து அவர் பேசியது வருமாறு : பெண்கள் என்ற முறையில் நாம் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் ஒன்றுதான். நாட்டில் இன்று உண்மையான பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்ப வெறுப்பு அரசியல் விதைக்கப்படுகிறது. உண்மையை மக்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்று ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். கருவில் இருந்தே பெண்களின் போராட்டம் தொடர்கிறது. அது எத்தகைய போராட்டம் என்பது அந்த தாய்க்கும் அந்த பெண்குழந்தைக்கும் மட்டுமே தெரியும். கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் அதை கொன்று விடும் பழக்கம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்றும் நீடிக்கிறது. ஹரியானா போன்ற வடமாநிலங்களில் ஆண், பெண் பாலின விகிதத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது. காரணம் பிறக்கும் முன்பே பெண் குழந்தைகள் கொல்லப்படுவதால் ஆண்களுக்கு சமமான பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.ஒரு வேளை உயிரோடு இருந்துவிட்டால் அந்த பெண் வாழ்நாள் முழுவதும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்களைப் போன்றே, ஒரே மாநிலம், ஒரே வர்க்கம், ஒரே மதம், ஒரே சாதியில் இருந்து வந்தாலும் பெண்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கவேண்டியுள்ளது. வீட்டில் வளரும் போதும், பள்ளிக்குச் செல்லும் போதும் பெண்கள் பாகுபாடுகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. முதலில் பள்ளிக்கும் பிறகு கல்லூரிக்கும் செல்ல போராட வேண்டியுள்ளது. அப்படியே படித்து முடித்தாலும் வேலைக்குச் செல்லும்போது அங்கு ஆண், பெண் பாகுபாடுகளை சந்திக்கவேண்டியுள்ளது.
ஊடகத்துறையிலும் பாகுபாடு
நான் பட்டப் படிப்பு படித்து முடித்த பின்னர் பத்திரிகையாளராக விரும்பி ஊடகத்துறையில் நுழைந்தேன். ஆனால் நேர்முகத்தேர்வுக்கு சென்ற போது அங்கும் ஒரு போராட்டம். “நீங்கள் பத்திரிகையாளராக இருந்தாலும் முதலில் நீ ஒரு பெண், திருமணமாகும், பின்னர் குழந்தைபெற்றுக்கொள்வாய், கணவன் மற்றும் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவேண்டும். இப்படி இருக்கும்போது எப்படி ஊடகத்துறையில் பணிபுரிவீர்கள்’’ என்ற வழக்கமான கேள்விஎன்னிடமும் கேட்டனர். எனக்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் இல்லை.சுதந்திரமாக வேலை செய்வேன் என்று கூறி வேலையில் நுழைந்தா லும் வழக்கமாக அனைத்து முதலாளிகளும் செய்வதைப்போல குறைந்த சம்பளத்தை தருவார்கள்,, முக்கிய மான பணிகளை ஒப்படைக்க தயங்குவார்கள், ஓரங்கட்டுவார்கள், பதவி உயர்வு வழங்காமல் தாமதிப்பார்கள். குறிப்பாக ஊடகத்துறையில் பெண்கள் நுழையும்போது அவர்கள் குற்றங்கள், அரசியல் தொடர்பான செய்திகளை சேகரிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் பெண்களால் அந்த வேலையை செய்ய முடியாதுஎன்று கூறி பேஷன் ஷோ போன்றசாதாரண நிகழ்வுகள் குறித்த செய்தி களை சேகரிக்க தள்ளிவிடுவார்கள்.
ஆண்களின் ஆதிக்கம்
இன்றும் முன்னணியில் உள்ளதொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் ஆசிரியர் போன்ற உயர் பதவிகளில் ஒரு பெண் கூட இல்லை. நிகழ்ச்சிதொகுப்பாளராகவும் திரைக்கலைஞர்களாகவும் பெண்கள் இருப்பார்கள். ஆனால், நிறுவனத்தின் உயர் பதவி என்றால் அங்கு ஒரு ஆண்தான் இருப்பார். இதுபோன்ற பாகுபாடுகளை ஊடகத்துறையில் மட்டுமல்ல பலதுறைகளிலும் காணமுடியும். நான் ஊடகத்துறையில் நிருபராக பணியை துவங்கியகாலம் வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக மாதர் அமைப்புகளின் போராட்டம் தீவிரமாக இருந்தகாலம். அப்போது வரதட்சணை கொடுமையால் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்தால் அதை சாவு என்று தான் காவல்துறையில் வழக்குபதிவு செய்து வந்தார்கள். பல்வேறு மாதர் அமைப்புகளின் பெரும் போராட்டங்களுக்கு பின்னர் தான் வரதட்சணை கொடுமைகளில் பெண்கள் உயிரிழந்தால் அதை கொலை என்று பதிவு செய்ய காவல்துறையினர் ஒப்புக்கொண்டனர். இதன் பின்னரே வரதட்சணை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு பின்னரும் வரதட்சணை கொடுமைகளும் கொலைகளும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. நின்றுவிடவில்லை. எனவே இதுபோன்ற கொடுமைகளை தடுத்துநிறுத்த சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
வீட்டு வன்முறை
போராட்டத்தால் மட்டுமே நமது உரிமையை பாதுகாக்கமுடியும். சீர்திருத்தங்கள், தனிநபர் சட்டங்கள், திருமணம், சொத்துரிமை, விவாகரத்து, என பல்வேறு பிரச்சனைகளையும் வீட்டு வன்முறை போன்றவற்றையும் பெண்கள் சந்திக்கவேண்டியுள்ளது. எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலமே நாம்நமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்தியாவில் உங்களைப் போன்ற இளம்பெண்கள் வசதியானவர்களாக இருந்தாலும் ஏழை குடும்ப பின்னணியை கொண்டவர்களாக இருந்தாலும் இத்தகைய பிரச்சனைகளை வாழ்வில் கடந்தாக வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளனர்.
இடஒதுக்கிடு மசோதா
பெண்கள் நடத்திக்கொண்டிருக்கும் மற்றொரு போராட்டம் இடஒதுக்கீடு குறித்தபோராட்டம். சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடுஇடஒதுக்கீடு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இடதுசாரி கட்சிகளை சேர்ந்த பெண்கள் அமைப்புகள்தான் இதில் தீவிரமாக போராடுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் போராடி இடஒதுக்கீட்டை பெற்ற போதும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதியாக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் உண்மையில் அங்கு அவரது கணவர்தான் எல்லாமே.பெண் பெயரளவுக்கு மட்டுமே அந்தபொறுப்பில் இருப்பார். சில கிராமங்களில் பெண்கள் போராடிதாங்களாகவே பொறுப்பை கவனிக்கும் நிலையை எட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே தான் நான் மீண்டும் மீண்டும்கூறுகிறேன். போராடாமல் பெண்களால் எதையும் சாதிக்கமுடியாது. மத்தியில் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் பாஜக அரசாக இருந்தாலும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அக்கறை செலுத்தவில்லை. எனவே இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிரானபோராட்டத்தை பெண்கள் கைவிட்டுவிடக்கூடாது. தொடர்ந்து தீவிரமாக போராடவேண்டும்.
பிற்போக்கான கருத்துக்கள்
பெண்களுக்கு எதிராக காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் பிற்போக்கான கருத்துக்கள் மாற்றப்படவேண்டும், சமீபத்தில் நாடுமுழுவதும் பெண்கள் இயக்கங்கள் இரண்டு முக்கியமான பிரச்சனைகளை முன்வைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதில் ஒன்றுமாதவிலக்கு சானிட்டரி நாப்கின்குறித்த பிரச்சாரம். மாத விலக்கின்போது பெண்கள் கோவில்களில் வழிபாட்டுத்தலங்களில் அனுமதிக்கப் படுவதில்லை. அவர்களால்கோவிலின் புனிதம் கெட்டுப்போய்விடுவதாக தவறான கருத்து இந்த சமூகத்தில் நிலவுகிறது. மாதந்தோறும் பெண்கள் தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக கருதுகிறார்கள். இது நகர்புறங்களில் நடத்தப்படவேண்டிய பிரச்சாரம் மட்டுமல்ல; கிராமப்புறங்களிலும் பெண்கள் நாப்கின் வாங்க காசு இல்லாமலும் கழிப்பறைக்குச் சென்று துணி மாற்ற வசதி இல்லாமலும் உள்ளனர். எனவே மாதவிலக்கு என்பதும் பெண்களுக்கு ஒரு பெரும் போராட்டமாகவே மாறியுள்ளது.
அதிகரித்துவரும்பாலியல் தாக்குதல்கள்
இரண்டாவது பாலியல் சீண்டல்கள்,வன்கொடுமை, இணையதளம் வாயிலாக துண்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் போராடவேண்டியுள்ளது. பொதுவாக பெண்கள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை வெளியே சொல்லத் தயங்குவார்கள். அதையே சிலர் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதனால் பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களும் வலதுசாரிகருத்துடையவர்களும் பெண்களுக்குஎதிரான தாக்குதலுக்கு அவர்களேகாரணம் என்று சொல்லக்கூடியவர்களாக உள்ளனர். அதுவும் தலித் பெண்களாக இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட பெண்களாக இருந்தாலும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஒன்றே. இத்தகைய குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள் கைது செய்யப்படுவதில்லை. சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். இது தென்னிந்தியாவில் மட்டுமல்ல நாடு முழுவதிலும் இதே நிலைதான் நிலவுகிறது. சில கிராமங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஊடக வெளிச்சத்திற்குக்கூட வராமல் புதைக்கப்படுகின்றன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சிறுமிஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். ஆனால் அங்கு கூட்டணி ஆட்சியில் உள்ள பாஜகவை சேர்ந்த அமைச்சர்களும் தலைவர்களும் குற்றவாளிக்கு தண்டனை வாங்கித்தராமல் அவனை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்துகிறார்கள். இது கடுமையான கண்டனத்திற்கு உரியது. மத்தியிலும் சில மாநிலங்களிலும் மதத்தின் பெயரால் ஆட்சி செய்யும் பாஜக மற்றும் வலதுசாரி சக்திகளால்தான் இதுபோன்ற புதிய வகை அரசியல் தற்போது வலுவடைந்துவருகிறது. எனவே பெண்களின் உரிமைக்கு எதிரான இதுபோன்ற அரசியலுக்கு எதிராகவும் பெண்கள் அமைப்புகளின் போராட்டம் தீவிரமடையவேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள், தலித்துகள், விவசாயிகள் ஆகியோருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மும்பையில் சமீபத்தில் விவசாயிகள் மாபெரும்பேரணி நடத்தினார்கள். ஜிஎஸ்டி, பணமதிப்பு இழப்பு எனபல பிரச்சனைகள் வேலையில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது பெண்களே. எனவே புரட்சி என்பதுதானாக வராது. நாம் தான் உருவாக்கவேண்டும். எனவே பல்வேறு பிரச்சனைகளில் பெண்கள் அமைப்புகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வலுவாக போராடவேண்டியது அவசியமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி.ஏ.முகமதுரியாஸ் கொடியேற்றி வைத்தார். பொதுச்செயலாளர் அபாய்முகர்ஜி அறிக்கை சமர்ப்பித்தார். தமிழ் மாநில செயலாளர் எஸ்.பாலா உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக வடசென்னை மாவட்டச்செயலாளர் கே.எஸ்.கார்த்திக் வரவேற்றார். வடசென்னை மாவட்டத்தலைவர் சரவணத்தமிழன் நன்றி கூறினார்.செவ்வாயன்றும் மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது.