23/03/2026
வட மாகாண இப்தார் நிகழ்வு – 2026
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடத்திய வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு 2026.03.16ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு. நா.வேதநாயகன், மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ ஆர்.எச் உபாலி சமரசிங்க அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்குமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பீ.ஏ சரத்சந்திர அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் சர்வமத தலைவர்கள் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், வவுனியா பிரதேச மௌலவிகள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்தார் நிகழ்வின் ஆரம்பமாக பாடசாலை முன்றலில் இருந்து இஸ்லாமிய கலாசார முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு கிராஅத் ஓதப்பட்டது. பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் திருமதி.நி.தர்சினி அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட ஜம்மியத்துல் உலாமா, தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ அப்துல் சமட் மௌலவி அவர்களின் நோன்பு ஆசியுரையுடன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையுரை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு. நா.வேதநாயகன், கௌரவ பிரதியமைச்சர் ஆர்.எச் உபாலி சமரசிங்க அவர்களதும் பிரதம விருந்தினர் உரை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களது சிறப்பு விருந்தினர் உரைகள் என்பன சிறப்பு விடயங்களாக அமைந்திருந்தன.
நிகழ்வில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனம், மன்னார் அல்மதீனா வித்தியாலய மாணவர்களின் றபான் நடனம், வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஹசீதா, நோன்பு திறத்தல் நிறைவுற்றதன் பின்னர், வவுனியா அல்மதீனா வித்தியாலய மாணவிகளின் கோலாட்டம், மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகளின் களிகம்பு, ஹசீதா, றம்ழான் நடனம், வவுனியா அல்அக்சா வித்தியாலய மாணவிகளின் ஹசீதா வவுனியா அல்மதீனா வித்தியாலய மாணவிகளின் இஸ்லாமிய கீதங்கள் ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றன. துஆப் பிரார்த்தனையுடன் இப்தார் நிகழ்வுகள் நிறைவுற்றன. வவுனியா வடக்கு கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் அவர்களின் நன்றியுரையுடன் இரவு 7.30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது.