12/02/2023
கொடி நாளை முன்னிட்டு ஒட்டுமொத்த தேமுதிக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
தொண்டர்கள் விருப்பத்திற்கிணங்க புரட்சிகலைஞர் விஜயகாந்த் ரசிகர் மன்றம் அமைத்து, அதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து, நமது ரசிகர் மன்றம் எல்லா தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில், நற்பணி இயக்கமாக செயல்பட்டு வந்தது. தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க 2000 ஆம் ஆண்டு புரட்சிதீபம் தாங்கிய மூவர்ண கொடியை, ரசிகர் நற்பணி மன்றத்திற்காக பிப்ரவரி 12 ஆம் நாள் அறிமுகபடுத்தப்பட்டது.
இந்த கொடியை தமிழகம் முழுவதும், பட்டி தொட்டி எங்கும் பறக்கவிட்டு இமாலய சாதனை நிகழ்த்தியது ரசிகர் நற்பணி மன்றங்களும், அதன்பிறகு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் என்பதில் பெருமை கொள்கிறேன். கட்சி கொடிக்கு என்று ஒரு நாளை அறிவித்து அதனை கொண்டாடும் ஒரே கட்சி தேமுதிக மட்டும்தான். எனவே இந்த கொடி நாளை ஒவ்வொரு ஆண்டும் நாம் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி தேமுதிக உதயமானபோது, நற்பணி மன்ற கொடி, கழக கொடியாக மாற்றப்பட்டது. கழக கொடியில் இடம்பெற்றுள்ள வர்ணங்களுக்கு, கழகத்தின் கொள்கையும், தமிழகத்தில் நிகழவேண்டிய மாற்றத்தையும் குறிப்பதாக அமைந்துள்ளது.
சிவப்பு நிறம் சாதி, மதம், இனம், மொழி என்று எல்லா பேதங்களுக்கும் அப்பாற்பட்டு நாம் அனைவரும் இரத்தத்தால் ஒன்று பட்டவர்கள், ஒரே இனம் ஒரே குலம் என்பதை வலியுறுத்தும்.
வளமான தமிழகத்தை உருவாக்கி அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை நிரூபித்து, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்று வளமான தமிழகத்தை மங்களகரமாக உருவாக்குவதே மஞ்சள் நிறம் ஆகும்.
கருமை நிறம் வறுமை, லஞ்சம், ஊழல் என்ற இருள் தமிழகத்தை சூழ்ந்துள்ளதை குறிக்கும். மூவர்ண கொடியின் மையத்தில் அமைந்துள்ள புரட்சி தீபம் தமிழகத்தில் உள்ள இருளை அகற்றி, மாற்றத்தை உருவாக்கி நல்லதொரு மக்களாட்சியை கொண்டு வந்து, புரட்சியை ஏற்படுத்தி தமிழகத்தை ஒளி மயமாக்குவோம் என்பதை குறிப்பதாகும்.
மேலும் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைத்து, நீல புரட்சி ஏற்படுத்தி விவசாயத்தையும், தொழில்களையும் மேம்படுத்துவோம் என்பதை குறிக்கிறது.
தமிழக மக்களுக்காக உயர்ந்த எண்ணத்தோடு, இலட்சியத்தோடு உருவாக்கப்பட்டது கழக கொடி என்றும், அந்த இலட்சியத்தை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். அதேபோல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் அனைவரும் கழகத்தின் வெற்றிக்காக ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து, நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற கட்சியின் கொள்கைப்படி இந்த இனிய கொடி நாளை கழகத் தொண்டர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும்.
லட்சக்கணக்கான உண்மை தொண்டர்கள் தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி, அரும்பாடு பட்டு, அயராது உழைத்து வளர்ந்தது இந்த தேசிய முற்போக்கு திராவிட கழகம். அவர்களுக்கு இந்த கொடி நாளில் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.