03/11/2023
கடிதம் 17
குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த போது ஒரு நபர் மரம் நடுவதில் பிரச்சனை செய்வதாக வட்டாட்சியர் தெரிவித்தார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே வழக்கு பதியப்பட்டதாகவும் தெரிவித்தார். மரம் நட வேண்டும் என்று அந்த நபர் என்னை பார்க்க அலுவலகத்திற்கு வந்தார்.
அவரை அழைத்து விசாரணை செய்த பொழுது. அவர் தன் பெயர் ஸ்ரீகாந்த் என்றும், தான் ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாக தெரிவித்தார், மேலும் தனது அண்ணன் இறப்பிற்கு பிறகு கிராமத்திலே தங்கியுள்ளதாகவும், எனது கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஒரு Social Forest, தற்போது அழிக்கப்பட்டு மணல் கொள்ளை நடப்பதாக தெரிவித்தார். அந்த இடத்தில் மீண்டும் வனத்தை உருவாக்க முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். அவரின் நோக்கத்தை சரியாக புரியாத நான், சட்ட ஒழுங்கு ஏதும் செய்யக்கூடாது என்று கண்டித்து அனுப்பினேன்.
இரண்டு நாட்களுக்கு பிறகு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து ஒரு கைபேசி அழைப்பு எனக்கு வந்தது, அதில் மாவட்ட ஆட்சியர் என்னிடம் நீங்கள் புதிதாக பதவி ஏற்று உள்ளீர்கள், நல்ல எண்ணத்தில் உள்ள மனிதர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். ஸ்ரீகாந்துக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள் என்று தெரிவித்தார்.
பிறகு ஸ்ரீகாந்த் அழைத்து மரம் நடுவதில் என்ன பிரச்சனை என்று கேட்டபோது ஆக்கிரமிப்பு தாரர்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பிறகு வருவாய் துறை அலுவலர்கள் காவல்துறை உதவியுடன் ஒரு மாத காலத்திற்குள் அங்கிருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
பல முயற்சிகளுக்குப்பின் அந்த இடத்தில் 7000 மரக்கன்றுகள் நட்டு மாவட்ட நிர்வாகத்தை ஆச்சரியப்படுத்தினார்.
அந்த முயற்சிக்காக அவருக்கு தமிழக அரசின் இளைஞர் விருதும் விகடன் விருதும் கிடைத்தது எனக்கு உள்ளபடியே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
இரண்டு வாரத்திற்கு முன்னர் சென்னையில் எனது அலுவலகத்தில் என்னை சந்திக்க வந்த அவர் அந்த விருதினை என்னிடம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரு நல்ல நண்பராகி விட்டார்.
அவர் வாழ்வில் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வாசித்தமைக்கு நன்றி...