19/09/2025
சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். சிவ பெருமான், ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காக்க நீல கண்டனாக காட்சி அளித்த சமயத்தில், தேவர்கள் சிவனை வழிபட்டனர். அவர்களுக்கு நந்தியின் இரு நம்புகளுக்கு இடையே சிவன் காட்சி தந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுகிறது. அனைத்து விதமான பாவங்களையும், தோஷங்களை நீக்கக் கூடிய வழிபாட்டையே பிரதோஷம் என்கிறோம்.
சிவனுக்குரிய வழிபாடுகள், விரதங்களில் மிகவும் உன்னதமானது பிரதோஷ வழிபாடு (pradosham) மற்றும் பிரதோஷ விரதம் என சிவ புராணம், விஷ்ணு புராணம் உள்ளிட்ட பல புராணங்களும் பிரதோஷ மகிமையை போற்றி சொல்கின்றன. பிரதோஷத்தன்று சிவனை வழிபட்டால் ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை. பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
masi
நாள் முழுவதும் உபவாசமாக இருந்து பிரதோஷ விரதம் இருக்க முடியாதவர்கள், பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வதுடன், பிரதோஷ வேளையில் சிவனுக்கும் நந்திக்கும் நடக்கும் 16 வகையான அபிஷேகங்களுக்கு தேவையான பால், தேன், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுத்து, பிரதோஷ விரதம் இருந்த பலனை பெற முடியும்.
ஞாயிறு பிரதோஷம் :
சூரிய திசை நடப்பவர்கள் ஞாயிறு அன்று வரும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொண்டால் துன்பங்கள் நீங்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
திங்கள் பிரதோஷம் :
மிகவும் சிறப்பு வாய்ந்த சோமவார பிரதோஷத்தன்று சந்திர திசை நடப்பவர்களும், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்களும் வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். மன வலிமை பெருகும். மன சஞ்சலங்கள் மறைந்து மன தெளிவு ஏற்படும்.
செவ்வாய் பிரதோஷம் :
செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷத்தின் போது நடக்கும் வழிபாட்டில் கலந்து கொண்டால் நோய் மற்றும் கடன் பிரச்சனைகள் நீங்கும்.
புதன் பிரதோஷம் :
புதன் திசை நடப்பவர்கள் புதன்கிழமையில் வரும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் புதன் பகவானால் ஏற்படும் கெடு பலன்கள் நீங்கும். கல்வி சிறக்கும், அறிவு வளரும்.
வியாழன் பிரதோஷம் :
குரு திசை நடப்பவர்கள் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று வழிபட வேண்டும். இதனால் கிரக தோஷத்தால் ஏற்படும் தீமைகள் குறையும்.
வெள்ளி பிரதோஷம் :
சுக்கிர திசை நடப்பவர்கள் வெள்ளி கிழமையில் வரும் பிரதோஷத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதனால் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
சனி பிரதோஷம் :
எந்த திசை நடந்தாலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தன்று வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும். சனியினால் ஏற்படும் துன்பத்தை நீக்கக் கூடியது சனிப்பிரதோஷ வழிபாடு. ஒரு சனிப்பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் 120 வருடங்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்ட பலன் கிடைக்கும். தீமைகள் அகலும். பஞ்சமா பாவங்களும் நீங்கும். சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும்.