02/06/2026
அதிமுகவின் தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர், கழகத்தின் தீவிர விசுவாசி திரு. பூக்கடை மகேந்திரன் அவர்கள், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தை முன்னிட்டு, இன்று செய்யூர் தொகுதி, பாவஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, மறைந்த மகேந்திரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, கழக நிர்வாகிகளுடன் இணைந்து எனது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினேன்.
கழகம் மீண்டும் ஒன்றிணைய வேண்டும், மாண்புமிகு பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற அவரது பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது. அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் விதமாக, நமது பொதுச்செயலாளர் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்திற்கு நிதியுதவியும், குழந்தையின் முழு கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளது பெரும் ஆறுதல் அளிக்கிறது.
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், உங்களில் ஒருவனாக, ஒரு கழகத் தொண்டனாகவும் இந்த இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகேந்திரனின் மறைவு கழகத்திற்குப் பேரிழப்பாகும்.
என் அருமை கழகத் தொண்டர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்:
தேர்தல் தோல்விகளோ, தற்காலிக பின்னடைவுகளோ நிரந்தரமல்ல. நாம் நிச்சயம் மீண்டும் வீறுகொண்டு எழுவோம். அதைக்கண்டு கொண்டாட நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும். தொண்டர்கள் தான் இந்த மாபெரும் இயக்கத்தின் ஆணிவேர். தயவுசெய்து யாரும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
உயிரிழந்த சகோதரர் மகேந்திரனின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
செழிக்கட்டும் செய்யூர்.
என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்