27/03/2016
'அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் இன்னும், 50 ஆண்டுகளானாலும், மக்களை பிச்சைக்காரர்களாகத் தான் வைத்திருக்கும்,'' என, பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.நமது நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
பா.ஜ., கூட்டணியில் இருந்து விலக காரணம் என்ன?
தமிழகத்தில், நாங்கள் பெரிய கட்சி; பா.ஜ., சிறிய கட்சி. எனினும், நல்ல பிரதமர் வேண்டும் என்பதற்காக, லோக்சபா தேர்தலுக்காக, அந்த கூட்டணியில் சேர்ந்தோம். தற்போது நடப்பது சட்டசபை தேர்தல். நாங்கள் பெரிய கட்சி என்பதால், எங்கள் தலைமையை ஏற்கும் கட்சியுடன், கூட்டணி வைக்க முடிவு செய்தோம். யாரும் வந்தால் மகிழ்ச்சி; வராவிட்டால் மிக்க மகிழ்ச்சி.
லோக்சபா தேர்தலில், வேட்பாளர் பட்டியலை முன்னதாக அறிவித்து, பிரசாரத்தை துவக்கிய நீங்கள், இந்த முறை வேட்பாளர்களை அறிவிக்க, காலம் கடத்துவது ஏன்?
இது எங்கள் தேர்தல் யுக்தி.
'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்றும், 'அன்புமணியாகிய நான்...' என்றும் நீங்கள் செய்த விளம்பரத்தை பலரும் விமர்சிக்கின்றனரே?
இதைத் தான் எதிர்பார்த்தோம். ஒரு விளம்பரம் என்றால், மக்களை சென்றடைய வேண்டும். விளம்பரத்தை விமர்சிக்கின்றனர் என்றால், அது மக்களை சென்றடைந்துள்ளது எனப் பொருள்.
தி.மு.க., சோப்பு விளம்பரம் போல் செய்தனர். நாங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தி, விளம்பரம் செய்தோம். கடந்த ஓராண்டாக, யாரையும் நாங்கள் திட்டவில்லை. ஆபாச வார்த்தை பேசவில்லை; நட்புடன் பழகுகிறோம்.
உங்களை முதல்வர் வேட்பாளராக, எந்த கட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லையே?
நாங்கள் யாரிடமும் பேசவில்லை. மற்ற கட்சிகள், ஒவ்வொரு கட்சியுடன் கெஞ்சுகின்றன. அ.தி.மு.க., ஆணவத்துடன் இருந்தது. இன்று, 'லெட்டர் பேடு' கட்சிகளுடன் பேசுகிறது. தி.மு.க.,வில் லெட்டர் பேடை, அவர்களே அச்சடித்து கொடுத்திருப்பது போல் தெரிகிறது.
நாங்கள் யாரிடமும் பேசவில்லை. பேச வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு பலம் உள்ளது. தன்னம்பிக்கை உள்ளது. இளைஞர், பெண்கள் மற்றும் விவசாயிகளை நம்பி, இந்த முடிவை எடுத்துள்ளோம்.
தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர், நான்கு ஆண்டுகளாக, துாங்கிக் கொண்டிருந்தார். வெளிநாடு சென்றார். ஒரு மாதம் கழித்து, பேப்பர் பார்க்க வில்லை; தமிழகத்தில் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை என்றார்.தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக, மக்கள் நலக் கூட்டணி கூறி வருகிறதே...?மற்ற கட்சிகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் இணைந்து, மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினர். முதலில் மக்கள் நலக் கூட்டணி எனக் கூறிய வைகோ, தற்போது விஜயகாந்த் கூட்டணி என்கிறார். 'ஜனநாயக முறைப்படி, முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். எம்.எல்.ஏ.,க்கள் ஒன்று கூடி, முதல்வரை தேர்வு செய்வர்' என்றார்.
தற்போது, 'விஜயகாந்த் முதல்வர்' என்கிறார். அங்கு கொள்கை எதுவும் இல்லை. ஜனநாயகம் இல்லையா? தலித்தை முதல்வராக ஏற்க முடியாது என்றவர்கள், விஜயகாந்தை எப்படி ஏற்றுக் கொண்டனர்.கொள்கை இல்லாதவர்கள் ஒன்று கூடியுள்ளனர். நாங்கள், கொள்கையுடன் தொந்தரவு இல்லாமல், செல்கிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., - அ.தி.மு.க.,வில் சேருவதில்லை என முடிவு செய்தோம்.
முன், அந்த கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்ததற்காக, மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளோம். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், தனியே, நான்கு எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற கட்சிகள் தனியே நின்று, ஒரு எம்.எல்.ஏ., கூட பெற முடியாது. அ.தி.மு.க., தவிர, எம்.எல்.ஏ., - எம்.பி., வைத்திருக்கும் ஒரே கட்சி பா.ம.க., மட்டுமே. எங்களுடைய பலம் மக்கள் மத்தியில் உள்ளது.
சட்டசபையில் விஜயகாந்தை செயல்படவிடவில்லை எனக் கூறுகின்றனரே?
சட்டசபைக்கு போனால் தானே செயல்பட முடியும். பேச விடவில்லை என்றால், பயந்து வந்து விடுவதா? எதிர்த்து தான் மக்கள் பிரச்னைகளை பேச வேண்டும்.மதுவிலக்கை வலியுறுத்தி, தீவிர பிரசாரம் மேற்கொண்டு சாதித்தது என்ன?
தமிழகத்தில், அ.தி.மு.க., தவிர மற்ற எல்லா கட்சிகளும், மதுவை ஒழிப்போம் என முடிவு எடுத்து
உள்ளன. இதற்கு நாங்கள் தான் காரணம். இது எங்களுக்கு கிடைத்த முழு வெற்றி.
உச்ச நீதிமன்றம் சென்று, தேசிய நெடுஞ்சாலைகளில், 600, 'டாஸ்மாக்' கடைகளை மூடியுள்ளோம். இதுபோல் இந்திய அளவில், கடைகளை மூடுவது குறித்து முடிவெடுக்கும்படி, நீதிபதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்று என சொல்கிறீர்களே...?
தி.மு.க., - அ.தி.மு.க., என, இரண்டு கட்சிகளும், அடுத்த, 50 ஆண்டுகள் ஆண்டாலும், மக்கள்
பிச்சைக்காரர்களாக தான் இருப்பர். மக்களை ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்பதே, அவர்களின் கொள்கை. மக்கள் முன்னேறக் கூடாது. படித்தால் ஓட்டு போட மாட்டார்கள் என்பதே அவர்களின் எண்ணம்.
இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், நிறைய ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்த காத்திருக்கும் நாங்கள் தான் உண்மையான மாற்று.
தமிழகத்தில் ஏகப்பட்ட முதல்வர் வேட்பாளர்கள் உள்ளனரே?
நான்கு முதல்வர் வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் யார் நன்கு செயல்படுபவர், யார் நன்கு படித்தவர் என சிந்தித்து, என்னை தேர்வு செய்வர். விஜயகாந்தால் ஒரு திட்டம் குறித்து பேச முடியுமா? ஜெயலலிதா ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை, இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளேன் எனக் கூறுவாரா? அவருக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை.
பிரச்னைகளுக்கு தீர்வு கூறுவது நாங்கள் மட்டுமே. மற்றவர்களுக்கு தீர்வு என்ன எனத் தெரியவில்லை. தென் மாவட்டங்களில், எங்களுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் எங்கு சென்றாலும், இரண்டு பேரும் வேண்டாம். நீங்கள் வரணும் என்கின்றனர். இன்னொருவருக்கு, 93 வயதாகிறது. இவர்களில் நான் மட்டும் தான், 47 வயது இளைஞர். நான் மட்டும் தான் தமிழக மக்களுக்கு நன்மை செய்ய முடியும்.
தமிழகத்தில், 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடுகிறீர்களா?
ஆம். வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது. புதுச்சேரியிலும் தனித்து போட்டி தான். ஆனால், அங்கே, முதல்வர் வேட்பாளர் அறிவிக்கவில்லை.
முதல்வர் வேட்பாளரை பார்த்து தான், மக்கள் ஓட்டளிக்கின்றனரா?
லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு ஓட்டு கேட்கவில்லை. மோடிக்கு ஓட்டு கேட்டனர்; மக்கள் ஓட்டு போட்டனர். டில்லியில் கெஜ்ரிவாலுக்கு வாய்ப்பு கேட்டனர்; மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். இங்கேயும் அப்படி தான் கேட்கின்றனர். எனவே, இம்முறை நாங்கள் வெற்றி பெறுவோம்.
ஆண்டுதோறும் நிழல் பட்ஜெட் வெளியிடுகிறீர்கள். அரசுக்கு பல யோசனைகள் சொல்கிறீர்கள். அதில் ஒன்றிரண்டாவது ஏற்கப்பட்டிருக்கிறதா?
இல்லை. 14 ஆண்டுகளாக நிழல் பட்ஜெட், ஏழு ஆண்டுகளாக, நிழல் வேளாண் பட்ஜெட் தயார் செய்து வெளியிடுகிறோம். அதை அதிகாரிகளிடம் கொடுக்கிறோம். அவர்களும், 'எங்களை விட நன்றாக பட்ஜெட் போட்டுள்ளீர்கள்' எனக் கூறியுள்ளனர். ஆனால், இந்த ஐந்தாண்டு ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது, யாருக்கும் தெரியாது. எங்கு கொடுத்தாலும் துாக்கி போட்டு விடுவர். அதிகாரிகளுக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை.
ஆணவக் கொலைகளை எப்படி பார்க்கிறீர்கள்?
கொலை எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது. ஆணவக் கொலை, அரசியல் கொலை, ஜாதி கொலை, பொருளுக்காக கொலை என எதுவாக இருந்தாலும் கூடாது.
முதலீட்டாளர் மாநாடு மூலம், 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளதாக, தமிழக அரசு கூறுகிறதே?உலக முதலீட்டாளர் மாநாடு, ஜெயலலிதா சிறையில் இருந்ததால், மூன்று முறை, ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அரசு பணம் வீணாகியது. இறுதியில், 300 கோடி ரூபாய் செலவழித்து நாடகம் ஆடினர்.
இரண்டு நாளில், 2.42 லட்சம் கோடி ரூபாய் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக, பொய்யை கிளப்பி விட்டனர். நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்டோம். இதுவரை வெளியிடவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தத்தை, தற்போது கணக்கில் சேர்த்துள்ளனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவது பெரிய விஷயமல்ல.
ஒரு கோடி ரூபாய்க்கு தொழில் செய்பவரிடம், 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். இது மிகப்பெரிய ஏமாற்று வேலை.
தமிழகத்தில் இருந்து, கடந்த, ஐந்து ஆண்டுகளில், 65 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளது. ஸ்ரீ சிட்டிக்கு, 18 ஆயிரம் கோடி; தெலுங்கானாவிற்கு, 10 ஆயிரம் கோடி, சாம்ராஜ் நகருக்கு, 12 ஆயிரம் கோடி; குஜராத்திற்கு, 8,000 கோடி, மகாராஷ்டிராவுக்கு, 4,000 கோடி ரூபாய் முதலீடு சென்றுஉள்ளது. உள்ளே யாரும் முதலீடு செய்யவில்லை.
இங்கு முதலீடு செய்வதற்கான சூழல் இல்லை. மின்சாரம், சாலை, துறைமுக வசதி எதுவும் இல்லை. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், தி.மு.க., ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்ததாரர் அவர்களுக்கு பணம் கொடுத்து விட்டார். அ.தி.மு.க.,
ஆட்சிக்கு வந்ததும், பணம் கேட்டனர். அவர் பணம் தர மறுத்ததால் பணியை நிறுத்தி விட்டனர்.
முதல்வருக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. மூன்று ஓய்வு பெற்ற அதிகாரிகள் கூறுவதை கேட்டு செயல்படுகிறார்.
தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறிவிட்டது என அமைச்சர் கூறுகிறாரே?
அப்பட்டமான ஏமாற்று வேலை. மாநிலத்தின் மின் தேவை, 15,500 மெகாவாட். உற்பத்தி, 5,000 மெகாவாட். மத்திய அரசிடம் பெறுவது, 4,500 மெகாவாட். மீதியை தனியாரிடம் பெறுகின்றனர். தனியாரிடம் வாங்கினால் தான், கமிஷன் பெற முடியும்.
ஐந்து ஆண்டுகளில், இவர்கள் அறிவித்து, திட்டம் துவக்கி, ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை. அதேபோல் தி.மு.க., ஆட்சியிலும் மேற்கொள்ளவில்லை. இரண்டு கட்சிகளும் தனியாரிடம் மின்சாரம் வாங்கினால், கமிஷன் பெற முடியும் என, திட்டமிட்டு செயல்படுகின்றனர்.தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், மின் தேவை குறைந்துள்ளது. இதனால் மின் தட்டுப்பாடு ஏற்படவில்லை. போகப்போக நிலைமை மோசமாகும். தண்ணீர் பிரச்னையும் தலை துாக்கி உள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதே?
தமிழகம் மற்றும் கேரளாவில், 62 எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில், என் தொகுதிக்கு மட்டும் புதிய ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நான், ஏழு முறை அமைச்சரையும், நான்கு முறை அதிகாரிகளையும் சந்தித்து பேசினேன். மொரப்பூர் - தர்மபுரி ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், சென்னை யில் இருந்து நேரடியாக தர்மபுரி செல்ல முடியும்.
விழுப்புரம் - மதுரை இரட்டை ரயில் பாதைக்கு, 470 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு திட்டங்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கப்படாதது, மிகப் பெரிய ஏமாற்றம் தான்.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெ., விடுதலையாவாரா?அவர் தப்ப முடியாது.
முதியோருக்கு இலவச பஸ் பாஸ் உட்பட பல திட்டங்கள், கடைசி நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதே?இதுவும் ஏமாற்று வேலை. இப்படித்தான், பெரும்பாலான அறிவிப்புகளும் வெற்று அறிவிப்புகளாக உள்ளன.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா?கண்டிப்பாக போட்டியிடுகிறேன். குடும்பத்தில் மற்றவர்கள் போட்டியிட மாட்டார்கள்.வண்டலுார் மாநாட்டிற்கு, கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டதே?இல்லை. தவறான தகவல். அங்கே திரண்டது, கூட்டிய கூட்டம் அல்ல. பாசத்தில் வந்த மக்கள்.
சமீபத்தில் பார்த்த படம் எது?
'இறுதிச்சுற்று' பார்த்தேன். அதற்கு முன், 'தனி ஒருவன்' பார்த்தேன்.
கடவுள் நம்பிக்கை உண்டா?
திருப்பதி, திருச்செந்துார் மற்றும் குல தெய்வம் கோவிலுக்கு செல்வேன்.
உங்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளதே?
என் மீது போடப்பட்ட வழக்கு, ஊழல் வழக்கு கிடையாது. அரசியல் வழக்கு. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்ததும், என் மீது வழக்கு போட்டனர். இரண்டு கல்லுாரிக்கு, இரண்டாம் ஆண்டு புதுப்பித்தல் ஆணை வழங்கப்பட்டது தொடர்பான வழக்கு. இது நடந்தது, 2008ல். என் மீது வழக்கு போட்டது, 2012ல்.
புதுப்பித்தல் ஆணை வழங்க உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். இது செல்லும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை மறைத்து, என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கையெழுத்து போட்டுள்ளனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, 'செக் ஷன் ஆபீசர்' மற்றும் என் மீது வழக்கு போட்டுள்ளனர்.
நான் கையெழுத்து போட்டதில், என் மீது எந்த தவறும் கிடையாது. இந்த வழக்கில் இருந்து,
100 சதவீதம் வெளியே வந்து விடுவேன்.
பயோ - டேட்டா
பெயர் : அன்புமணி
வயது : 47
கட்சி : பா.ம.க.,
பதவி : இளைஞர் அணி தலைவர்
படிப்பு : எம்.பி.பி.எஸ்.,
சொந்த ஊர்:கீழ்சிவிறி, விழுப்புரம்
Source : Dinamalar
http://www.dinamalar.com/news_detail.asp?id=1487374