12/02/2014
நம் உயிரனைய தலைவர் கலைஞர் அழைக்கின்றார்!
“இனமானவராய்! கழக மாணவராய்!
திரண்டெழுந்து வருக திருச்சிக்கு!”
****************************************************
திருச்சியில் பிப்ரவரி 15, 16 ஆகிய நாட்கள் நடை பெற உள்ள வரலாற்று பெருமைமிக்க திராவிடரியக்கத்தின் கல்வெட்டுப் பதிவு நிகழ்வான கழகத்தின் 10வது மாநில மாநாட்டிற்கு நம் உயிருக்கு நிகரான உத்தமத் தலைவர் கலைஞர் அழைத்துள்ளார்.
உயிருக்கும் மேலாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்திடுக என அறிவுறுத்தியுள்ளார்.
திராவிட இயக்கத்தைப் புதுப்பித்து வலுக்கூட்டி உறுதியுடன் நடத்திச் செல்லத்தான் திருச்சியில் கூடுகிறோம் என்றும் எங்கனும் எழுச்சி! இதுவே இன்றைய திருச்சி! நாளை காணுவோம்; தமிழகத்தின் மலர்ச்சி! என்றும் தாயின் பரிவுடன் படைத் தலைவனின் ஊக்கம் தரும் உற்சாகத்துடனும் நம்மை தலைவர் கலைஞர் மடல்கள் மூலம் அழைத்துள்ளார்.
இதுநாள்வரை அவர் மடல் தீட்டி அழைத்து என்றும் பல இலட்சத்திற்கும் குறைவாய் உடன்பிறப்புகள் வந்ததில்லை. அதிலும் திருச்சியில் இன்று திராவிடத் தமிழர்கள் தலைவரின் உடன்பிறப்புகள் ஐம்பது இலட்சத்திற்கும் மேலானோர் வருகின்ற வாய்ப்புகள் உள்ளதாக கொடநாடு தூங்கு மூஞ்சிகள் சத்தமில்லாமல் அலறிக்கிடப்பதாகவும், எப்படியாவது கெடுத்திட வேண்டும் என்று விருப்பத்துடன் இருப்பதாகவும் காவல்துறையில் பேசப்பட்டு வருவதை தவிர்த்துவிட முடியாது.
தி.மு.க. மாணவர் அணி நண்பர்கள் ஏற்கனவே ஒவ்வொரு மாவட்ட அமைப்புக் கூட்டங்களில் போடப்பட்ட தீர்மானங்களின்படி தவறாமல் அனைவரும் திருச்சி வரவேண்டும். அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் அதற்குரிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு சொன்னதைச் செய்து வெல்லுங்கள். தவறாமல் கறுப்பு பேண்ட் - வெள்ளைச் சட்டையுடன் கழக வீரர் கடலில் கப்பல் போல் காட்சி தருவீர்; அழைத்து மகிழ்ந்த தலைவர் அகங்குளிர வேண்டும்.
தலைவர் கலைஞர் அவர்களின் அழைப்பு மடல் ஏழில் குறிப்பாக, “வரலாறு படித்துத் தமிழகத்தில் புதிய வரலாறு படைத்திட தலைநிமிர்ந்து வந்து கலந்து கொள்ளும் மாணவச் செல்வங்களையும்” என்று நமது மாணவர் அணி பெருமையாய் சொல்லிக் கொள்ளும் வண்ணம் அழைத்துள்ளார். எனவே, கழக மாணவர்கள் ஒவ்வொரு வரும் கழக மாணாக்கர்கள் என்கிற விதமாக பூரிப்புடன் கலந்து கொள்ள வேண்டும்.
“இங்குள்ள நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா?
கைவிரித்து வந்த கயவர் - நம்மிடை
பொய்விரித்து புலன்கள் மறைத்து - நமக்குள்ள
உரிமையெல்லாம் தமக்கென்பார் எனில்
வழிவழி வந்த உன் மறத்தன்மை எங்கே?
மொழிப் பற்றெங்கே? விழிப்புற்றெழுக”
என்ற புரட்சிக் கவி பாவேந்தர் பாடலுக்கு பொருளறிந்து பொங்கியெழுந்து இனமானவனே, கழக மாணவனே, திருச்சிக்கு வா! திரண்டெழுந்து வா!
'தலைவர் ஆணையிடுவார்
தளபதி வழிகாட்டுவார்
மாணவர் அணி செயல்படும்’
என்ற நமது இலட்சிய முழக்கத்திற்கு உயிரூட்டி அலைகடலென அணி திரண்டு வாரீர்!
- கடலூர் இள. புகழேந்தி M.A.,B.L
கழக மாணவரணி செயலாளர்