11/06/2026
கல்வி வியாபாரமா? பள்ளிகளின் சுயரூபம்!
அருப்புக்கோட்டையில் அரங்கேறிய கொடுமை – தட்டிக்கேட்ட
நுகர்வோர் அமைப்பு!
வாங்கி முடிக்கும் வரை பணம்... பொதுத்தேர்வு என்று வந்தால் துரோகமா?
அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படித்து வந்த ஒரு மாணவிக்கு, 10-ஆம் வகுப்பு சேர்க்கையின் போது பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. "நீ எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தால் ஃபெயில் ஆகிவிடுவாய், அதனால் வேறு பள்ளிக்குச் செல்" என்று கூறி, கட்டாயப்படுத்தி மாற்றுச்சான்றிதழ் (TC) கொடுத்து வெளியேற்றியுள்ளனர்!
பெற்றோர்களின் 15 நாள் கண்ணீர் போராட்டம்!
விவரம் அறியாத அந்த ஏழைப் பெற்றோர்களும், மாணவியும் கடந்த 15 நாட்களாக அருப்புக்கோட்டையில் உள்ள அத்தனை பள்ளிகளுக்கும் (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட) ஏறி இறங்கியுள்ளனர். ஆனால், எந்த ஒரு பள்ளியும் அந்த மாணவியைச் சேர்க்க முன்வரவில்லை.
ஒரு குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாகி, நடுத்தெருவில் நின்ற அவலம்!
களத்தில் இறங்கிய நுகர்வோர் அமைப்பு!
இந்த அநீதி குறித்து தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்புக்கு நண்பர் மூலம் தகவல் கிடைத்தது.
உடனடியாக நமது அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் களத்தில் இறங்கினர். எந்தப் பள்ளிகள் சேர்க்க மறுத்தார்களோ, அதே பள்ளிகளைத் தட்டிக்கேட்டு, அந்த மாணவியை இப்போது அரசுப் பள்ளியில் வெற்றிகரமாகச் சேர்த்து உள்ளார்கள்
பள்ளி நிர்வாகங்களுக்கும், கல்வித்துறைக்கும் சில காரசாரமான கேள்விகள்:
6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை நான்கு வருடங்கள் உங்களிடம் தான் அந்தப் மாணவி படித்தாள்.
அப்போதெல்லாம் அவளுக்குப் படிக்கத் தெரியவில்லை என்பது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?
நான்கு வருடங்களாக அந்தப் பெற்றோரிடம் பணத்தை (Fees) வாங்கும் போது வராத பயம், பொதுத்தேர்வு (Public Exam) என்று வந்தவுடன் 100% தேர்ச்சி காட்ட வேண்டும் என்ற சுயநலத்திற்காக அந்தப் பிள்ளையைத் துரத்துகிறீர்களே... இதுதான் நீங்கள் கற்றுத்தரும் கல்வியா?
ஒரு மாணவிக்கு எழுதப் படிக்கத் தெரியவில்லை என்றால், அது அந்த மாணவியின் தவறு அல்ல! நான்கு வருடங்களாக அவளுக்குக் கற்றுக்கொடுத்த உங்கள் பள்ளியின் தவறு,உங்கள் கற்பித்தல் தரம் அவ்வளவுதான் லட்சணமா?
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் (CEO) என்ன செய்து கொண்டிருக்கிறது? தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்களின் விளம்பரத்திற்காகவும், 100% ரிசல்ட்டுக்காகவும் மாணவர்களின் வாழ்க்கையை இப்படிச் சீரழிப்பதை ஏன் தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்க்கிறீர்கள்?
மக்களே விழித்துக் கொள்ளுங்கள்!
பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தான், இது போன்ற கல்வி நிறுவனங்கள் எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் இப்படிப்பட்ட துரோகங்களைச் செய்யத் துணிகின்றன. இவர்களுக்கு இவ்வளவு தைரியத்தை யார் தருகிறார்கள்?
நமது உரிமைகளைப் போராடிப் பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மக்கள் விழிப்புணர்வு அடைந்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும்! கல்வியின் பெயரால் நடக்கும் இந்த வியாபாரத்தை ஒடுக்க ஒன்றிணைவோம்!
"கல்வி என்பது உரிமை... அது வியாபாரமல்ல!"