24/05/2026
Chief Minister of Tamil Nadu
District Collector, Virudhunagar
அவசரம். நடவடிக்கை தேவை.
____________________________
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியத்தில் குலசேகரநல்லூர், கல்லூரணி கிராமங்களுக்கு அருகே அமைந்துள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை.
விசயம் என்னவெனில் தங்கள் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கிரஷர் தொழிலுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாகவும், இதனைத் தடுத்து நிறுத்தி தங்கள் கிராமத்தின் விவசாய நிலங்களைக் காப்பாற்றவும் சட்டப்படியாக உதவுமாறு மடத்துப் பட்டி இளைஞர்களின் அழைப்பை ஏற்று இன்று மதத்துப் பட்டி கிராமத்திற்கு சம்பந்தப் பட்ட விளைநிலங்கள் மற்றும் கிரசர் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலங்களை சென்று பார்வையிட்டோம்.
உண்மைதான். கிரஷர் தொழில் துவங்குவதற்கென நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் உள்ளன. எந்தெந்த விசயங்கள் எல்லாம் விதிமுறை மீறல்கள் என்று உள்ளதோ அவைகள் அனைத்தும் கிரஷர் நிலத்தின் உரிமையாளர் வசதிக்கு ஏற்ப வருவாய் துறை அதிகாரிகளால் பொய்யான ஆவணங்கள் மற்றும் சான்றுகள் உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.
அதாவது அருகாமையில் உள்ள விளைநிலங்களை தரிசு நிலங்களாக ஆவணம் உருவாக்கி இருக்கிறார்கள். அதேபோல அருகாமையில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களை குடியிருப்பு இல்லாத ஆனால் மின் இணைப்பு உள்ள கட்டிடங்கள் என சான்றிதழ்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இதற்கு வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உட்பட, கிராம நிர்வாக அலுவலர், தலையாரி என அனைவரும் உடந்தை.
ஏற்கனவே கல்லூரணி மற்றும் ஆலடிப்பட்டி பகுதிகளில் சட்டம் முரணான கல்குவாரிகளால் அந்த பகுதி நிலத்தடி நீர் ஆதாரம் கேள்விக்குறியாகி அந்த பகுதி விவசாயம் அழிந்து போகும் விளிம்பு நிலையில் உள்ள சூழலில் தற்போது மடத்துப்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு நடுவே கிரசர் தொழில் புரிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது முழுக்க முழுக்க சட்ட முரணான செயல்களாகும்.
இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் அனைவரும் துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
கிரசர் தொழில் துவங்க அனுமதி பெற்றுள்ள நிலத்தின் உரிமையாளர் அவரது நிலத்தை சுற்றிலும் கம்பி வேலைகள் அமைக்க முற்பட்டு வருகிறார். அவ்வாறு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டால் சுற்றிலும் உள்ள விளைநிலங்களுக்கு உழவு செய்யவும், அறுவடை காலங்களிலும் சென்று வர இயலாமல் விவசாயிகள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.
தனது நிலத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்துள்ள அந்த கிரஷர் நில உரிமையாளருக்கு தனிப்பட்ட பாதை எதுவும் கிடையாது. அவர் போக, வர வேண்டுமாயின் விவசாய நிலங்களில் தான் சென்று வந்தாக வேண்டும்.
பொதுவாக கிராமங்களில் விவசாய நிலங்களில் யாரும் மற்றவர் தங்கள் நிலத்தில் நுழையாத வகையில் தடுப்புகள் அல்லது வேலிகள் அமைக்க மாட்டார்கள். ஏனெனில் ஒருவர் நிலத்தில் மற்றொருவர் இறங்கி சென்று வந்தாக வேண்டும். அந்த பரஸ்பர ஒத்துழைப்போடு தான் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து விவசாயம் இன்று வரையில் அழிவில்லாமல் நடந்து வருகிறது.
ஆனால் இவர் மட்டும் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கம்பி வேலி அமைப்பாராம். ஆனால் அவர் மட்டும் மற்றவர்கள் நிலத்தில் இறங்கி போய் வருவார்களாம். நல்லா இருக்கிறது நியாயம்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இது தொடர்பாக ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் மடத்துப்பட்டி இளைஞர்களின் கோரிக்கைக்கு இணங்கி அவர்களுக்கு அரண்கள் சார்பில் நமது சட்ட உதவியை துவக்குகிறோம்.
நிச்சயமாக இந்த சட்ட முரணான செயல் சட்டப்படியாக தடுத்து நிறுத்தப் படும். மடத்துப் பட்டி மக்களுடன் நாம் துணை நிற்கவுள்ளோம்.
- Thangapandian Muthumari